Tuesday 9 February 2010

மரங்கொத்தி...! ‍-3



மரங்கொத்தி...! ‍-3


முந்திய பாகங்கள்: பாகம் 1, பாகம் 2

ரயில் திருச்சி ஜங்ஷனில் நுழைந்து ப்ளாட்ஃபாரத்தில் நின்றதும் நான் கதவுகளை திறந்து கொண்டு வெளியே பாய்ந்தேன்...

"இங்க அஞ்சு நிமிஷம் நிக்கும் மதி...நான் போய் காஃபி வாங்கிட்டு வந்துர்றேன்...ஒங்களுக்கு எதும் வேணுமா..."

"எனக்கும் மூணு காஃபி வாங்கிடு செந்தில்..."

பின்னாடி கத்திய அவனுக்கு பதில் சொல்லாது அதற்குள் உள்ளே ஏறத்துவங்கியிருந்த ஜனக் கூட்டத்தை பிளந்து வெளியே குதித்ததும் தழுவிய திருச்சியின் டிசம்பர் மாத ஊதல் காற்றை அலட்சியப்படுத்தி ப்ளாட்ஃபார்மின் மறு கோடியில் இருந்த காஃபி ஷாப்பை நோக்கி மெல்லிய இருட்டில் ஓடத் துவங்கினேன்....

================================

நான் காஃபி வாங்கிக் கொண்டு கோச்சில் ஏறவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது...ஓடி வந்ததில் எனக்கு லேசாக மூச்சு வாங்கியது...தம்மடிக்கிறதை விட்ரணும் நினைத்துக் கொண்டே "காஃபி மதி...ஜூடு ஆர்றதுக்குள்ள குடிச்சிடுங்க..." தேங்க்ஸ் செந்தில் என்று சொன்ன அவனைத் தாண்டி...

அவன் பக்கத்தில் ஜன்னலோர சீட்டில் அந்த பெண் உக்கார்ந்திருந்தாள்...மடியில் குட்டியாய் ஜீன்ஸூம் டீஷர்ட்டும் போட்டு பாப் கட்டிங் வெட்டி ஒரு குட்டி குழந்தை....குழந்தை துறுதுறுவென்று விரல்களை கண்ணாடி ஜன்னலை தாண்டி நீட்ட அவள் குழந்தையை இறுக்கி அணைத்து வெளியே வேடிக்கை காட்டிக் கொண்டிருந்ததில் அவள் முகம் எனக்கு தெரியவில்லை....

நான் மதிவாணனைத் தாண்டி எதிரெதிரான சீட்டுகளுக்கான குறுகிய இடைவெளியில் காலை நுழைத்து எனது சீட்டில் பாதி உட்காரும் போது....

"செந்தில்...இது என்னோட வொய்ஃபும் பொண்ணும்....சங்கீதா...இது செந்தில்...மதுரைலருந்து நல்லா கம்பெனி குடுத்திட்டிருக்கார்...."

இது வரை வெளியே குழந்தைக்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்த அந்த பெண்....சங்கீதா.....அவன் மனைவி...என் பக்கம் திரும்பி...நான் முதலும் கடைசியுமாக முத்தமிட்ட உதடுகளை திறந்து...."ஹலோ" என்றாள்.....

==============================

சங்கீதா...எஞ்சினியரிங் காலேஜில் பார்த்த நாள் முதல் நான் பாடிக் கொண்டிருந்து இடையில் தொலைந்து போய் ஐந்து வருடங்களாக நான் தேடிக் கொண்டிருக்கும் என் உன்னத சங்கீதம்....சந்தில் என்றும் செங்கீதா என்றும் விதவிதமாக கோர்த்து பாடப்பட்ட சங்கீதம்....பிரிவது இணைவதற்கு...இணைவதே பிரிவதற்கு...காதல் என்பது அரூபமான‌ உணர்வு என்றால் அதன் உருவமான சங்கீதா....ஐ லவ் யூடா....சும்மா சும்மா சொல்லிட்டிருக்க முடியாது...கல்லூரியின் கடைசி நாளன்று விழா மேடையின் பின்புறம் நான் எதிர்பாராத நேரம் முத்தமிட்டு...நான் வாழ்க்கையில் முத்தமிட்ட ஒரே உதடுகள்...அதன் பின் ஐந்து வருடமாய் காணாமல் போய்.....

கோபாக்னி முதல் காமாக்னி வரை அக்னி தேவனின் அத்தனை வடிவங்களும் என் அடிவயிற்றில் ஒரே கணத்தில் நிகழ‌ உட்கார முயன்று கொண்டிருந்த நான் சடாரென நிமிர்ந்ததில் அவளது முகத்தில் முட்டிக் கொண்டேன்...

முகம் உயர்த்தினால் உதடு உரசி முத்தமிடும் தொலைவில் என்னைப் பார்த்ததில் அவளுக்கும் அதிர்ச்சியாக இருக்க வேண்டும்...கண்களில் கருவிழி நகர்ச்சி நின்று போய் ஹலோ உதிர்த்த உதடுகள் உறைந்து போயிருந்தன....இன் அவர் ஃபர்ஸ்ட் நைட் வேர் வில் யூ கிஸ் மீ ஃபர்ஸ்ட்...லெட் மீ கெஸ்...லிப்ஸ்...நோ சங்கி....ஐஸ்....யூ காட் ப்யூட்டிஃபுல் ஐஸ்...

திருச்சி ஜங்ஷனை விட்டு வெளியே வந்து இருட்டை கிழித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நெருங்கி கொண்டிருந்த ரயிலில்...டேய் ஒரு நாள் ஸ்ரீரங்கம் போகணும்டா...அப்படியே காவிரியை பக்கத்தில உக்காந்து பார்க்கணும்...போலாமே...நீ காவிரியைப் பாரு...நான் உன்னைப் பார்த்துக்கிட்டிருக்கேன்...ச்சீ...போடா...ஒனக்கு எப்பவும் அதே நினைப்புத் தானா... உரசிக் கொண்ட முகங்களுக்கிடையில் காலம் உறைந்து போயிருக்க மதிவாணனின் கை திடீரென்று இடையில் நீண்டது...

"என்ன சங்கீ....பார்த்து திரும்பக் கூடாது...நீ இடிச்சிக்கிட்டு அவரையும் இடிச்சிட்ட பாரு....ஸாரி செந்தில்...திடீர்னு திரும்பிட்டா போல....வலிக்குதா சங்கீ..."

அவன் கைகள் நீண்டு அவளது நெற்றி தடவியது...சங்கீ...எனக்கு காத்தா இருக்கணும்னு ஆசை....நீ காத்து இல்ல, காத்துல பறக்குற மாதிரி இருக்குற...எதுக்குடா...எப்பவும் உன்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டே இருக்கலாமில்ல...நல்ல ஆசை தான்...போடா....

மாசா மாசம் ஆறாயிரம் கிலோ வெள்ளாட்டுக் கறி...பத்து டன் தக்காளி..ஆறு டன் பச்சை மிளகாய்...எட்டடிக்கு தலையில கங்கையோட காலை தூக்கி ஆடும் சிவன்...பக்கத்துல ஆறடிக்கு அம்மை...பனை மரம்...மரங்கொத்தி...கல்யாணம்...பொண்ணு கோயம்புத்தூரு....கிளியன் அண்ணாச்சி...இருபது இட்லி...கால்ல கல்ல கட்னதும் தாயளி சிக்குன பெருச்சாளி மாதிரில்லா கத்தறான்...

நான் சட்டென்று நிகழ்காலத்திற்கு நகர்ந்தேன்...
=======================
"ஓ..ஸாரி மதி....இல்ல, தப்பு எம் மேல தான்...சீட்ல என்னவோ குத்தற மாதிரி இருந்தது...அதான் திடீர்னு எழுந்திருச்சேன்...இடிச்சிடுச்சி...."நான் அவரசரமாய் நெற்றியை பிடித்துக் கொண்டேன்...

"சரி சரி...நல்லா தேய்ச்சு விட்டுக்கங்க...வீங்கிட போகுது...கல்யாண மாப்பிள்ளை வேற...மூஞ்சு வீங்கினா நல்லாருக்காது..."

சிரித்துக் கொண்டே மதிவாணன் மகளின் கன்னத்தை கிள்ளி திருப்பினான்....

"குட்டி...மாமாவுக்கு ஹாய் சொல்லு....நாலு வயசு தான் ஆகுது செந்தில்...ஆனா செம அடம்...எல்லாம் அவங்க அம்மா ஜீன்ஸ்...அப்படியே வந்திருக்கு...."

"ஆய் அங்கிள்...நல்லா இடிச்சீங்களா...நாளிக்கு உங்க மூஞ்சி பெரிசாயிடுமா அங்கிள்...."

குழந்தை கை நீட்டி என் முகம் தடவியது....குட்டி குட்டியாய் விரல்கள்...குவிந்த உதடு...பெரிய கண்கள்...யூ காட் ப்யூட்டிஃபுல் ஐஸ் சங்கீதா...அம்மா மாதிரியெ...அதே ஜீன்ஸ்...

நான் குழந்தையை தாண்டி கம்பார்ட்மெண்ட்டின் மெல்லிய வெளிச்சத்தில் சங்கீதாவை பார்த்தேன்....ஐந்து வருடத்தில் கொஞ்சமாக எடை கூடியிருக்கிறது....முகம் இன்னமும் பளபளப்பாக....கண்கள் இன்னும் அழகாக...நான் முத்தமிட்ட உதடுகள்...இன்னும் சிவப்பாக...கழுத்தில் தாலி...தாலியில் கருகணியோ இல்லை வேறு ஏதேனும் தெலுங்கு சம்பிரதாயமோ இருக்கலாம்...ரெட்டி தாலிகளை நான் பார்த்ததில்லை....

அவள் ஜன்னலுக்கு வெளிப்பக்கம் இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாலும் ஓரப்பார்வை என்னை துளைத்துக் கொண்டிருந்தது...

"என் வைஃப்ஃபுக்கு ஒடம்பு சரியில்லை...அதனால திருச்சியில ரிலேட்டிவ்ஸ் வீட்ல இருக்கா....மதுரை வரல்லை...."

மதிவாணன் சொன்னது நினைவில் ஓடியது....ஆக....உனக்குத் தெரியும் சங்கீதா...நான் மதுரையில் இருப்பது உனக்குத் தெரியும்....ஐந்து வருடங்களாக நான் அங்கே தான் இருக்கிறேன்...கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த அமெரிக்க வேலையை மறுத்து....அதே அட்ரஸில்...என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என்று தான்....உனக்கு எல்லாம்...எல்லாமே தெரிந்திருக்கிறது...ஆனால் ஐந்து வருடம்....உன் சீர்காழி அட்ரஸிற்கு எத்தனை கடிதம்....எத்தனை ஈமெயில்....எதற்குமே பதிலில்லை....மதுரை, சென்னை, தஞ்சாவூர்...ஏன் கேரளா....பெங்களூர்...ஹைதராபாத்தில் கூட தேடினேன்....நீ விசாகப்பட்டினம் போவாய் என்று தெரியாது போயிற்று....

ஆனால் உனக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது...நான் உன்னைத் தேடுவதும் தெரிந்திருக்கிறது...தவிர்த்திருக்கிறாய்...கவனமாக...மிக கவனமாக...நான் மதுரையில் இருப்பேன் என்று மதுரை வருவதைக் கூட....நான் என்ன பாவம் செய்தேன் சங்கீதா...நீ என்னை காதலித்த நாட்களில் கூட நீதான் என்னை முதலில் தீண்டினாய்.....செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட் வந்து...எலக்ட்ரிகல் லாப்பில் பெயிலாகி நான் துக்கமாய் இருந்த ஒரு மாலை வேளையில்....நீ தான் தலை கலைத்தாய்....நீ தான் முகம் தடவி விரல் பிணைத்தாய்...ஞாபகம் இருக்கிறதா சங்கீதா...

அத்தனை தவிர்த்தும்....காலுடன் கால் உரசும் தூரத்தில் இன்று நான்....எனக்கு ஒரே நேரத்தில் துக்கமும் குரூரமான சிரிப்பும் வந்தது....

திடீரென்று நான் மெலிதாய் சிரிப்பதை சங்கீதா மட்டுமல்ல, மதிவாணனும் கவனித்து இருக்க வேண்டும்....
==================================

"என்ன செந்தில்...திடீர்னு சிரிக்கறீங்க...சொன்னா நாங்களும் சிரிப்போம்ல..."

"ஒண்ணும் இல்ல மதி....நாம என்ன தான் தவிர்க்க நினைச்சாலும்...சில பேரை..ச்சே..ஐ மீன் சில விஷயத்தை தவிர்க்க முடியலை பார்த்தீங்களா..."

மதிவாணன் சிரித்தான்...

"ஒண்ணும் புரியலை...என்ன தத்துவம் தண்ணியா வருது...." தண்ணியில் அழுத்தம் இருந்தது...

"அதெல்லாம் ஒண்ணுமில்ல...நாம யாரும் இடிச்சிக்கணும்னு நினைக்கிறதில்லை...ஆனா கண்டிப்பா இடிச்சிக்கிறோம்ல...அதை சொன்னேன்..."

மதிவாணனுக்கு புரிந்ததோ இல்லையோ சங்கீதாவுக்கு புரிந்திருக்க வேண்டும்....நான் மதிவாணனைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும் என் கண்கள் அவளையே கவனித்துக் கொண்டிருந்தது....

"ப்ளீஸ்....ஐயம் ரியல்லி ஸாரி....ஆனா அவருக்கு எதுவும் தெரியாது....சொல்லிடாத...ப்ளீஸ்..."

"நீ சந்தோஷமாய் இருக்கிறாய் சங்கீதா....நான் எரிந்து கொண்டிருக்கிறேன்... உயிருடன் தினம் தினம்....அதிகாலையில் எழும் போது செத்து போய் நாள் முழுதும் எரிந்து...நள்ளிரவில் மீண்டும் விழித்து..மீண்டும் செத்து...சாவதற்கே நான் தினம் விழிக்கிறேன்.....ஏன் வந்தாய்...ஏன் போனாய்....போய் வருகிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல்...நீ பிள்ளை பெற்று நான்கு வருடம் ஆகிறதாமே...நான் உன்னை சுமந்த நாட்களில் நீ பிள்ளை சுமந்திருக்கிறாய்...நான் நண்பர்களை தவிர்த்த ஒரு இரவில் உலகமில்லா தனிமையில் விஸ்கியுடன் சேர்த்து எலி விஷம் குடித்து உயிருக்கு போராடிய‌ அதே நாட்களில் நீயும் ஹாஸ்பிடலில் பிள்ளை பெற்றிருக்கலாம்......உன் நினைவில் நான் தாடி வளர்த்து மதுரையின் அழுக்கான தெருக்களில் போதையுடன் உறங்கிய நாட்களில் நீ புருஷன் பிள்ளையென்று காதல் வளர்த்திருக்கிறாய்....."

கண்களின் மொழி....சொல்லாத வார்த்தைகள்....அவளது கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன....நான் பார்ப்பது அவளுக்கும் தெரிந்தே இருக்கிறது....

காதல் தேவனும் காம தேவனும் எனக்குள் உக்கிரமாய் போர் நடத்த....

எனது மூக்கு நீண்டு மேல் உதடு தாண்டி கீழ் உதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறிக் கொண்டிருந்தது...காஃபிக் கோப்பையை பிடித்திருந்த எனது கைகள் கண்ணுக்கு தெரியாத வண்ணம் குறுகி விரல்கள் மறைந்து கை முழுக்க எலும்பு புடைத்து முதுகின் இரு புறமும் சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன...எவரும் கவனிக்காத வண்ணம் ஷூவுக்குள் இருந்த கால்களில் பாதம் சுருங்கி விரல்கள் நீண்டு வளைந்து நகம் வளர்ந்து...நான் போட்டிருந்த மஞ்சள் நிற டீஷர்ட் இணைக்கும் இழைகளை உதிர்த்து வெறும் பஞ்சாகி மயிர் போல உடல் மூட....என்னுள் ஆதாம் காலத்து அக்னியுடன் பிரம்மாண்டமான மரங்கொத்தி உருமாறிக் கொண்டிருக்க....

இருளை கிழித்துக் கொண்டு இலக்கு நோக்கி பறக்கும் அம்பு போல ரயில் விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.....

========= கொத்தும்!==============


(Sorry for another long post, but its just my inability to keep it short....Will hope to finish it in the next episode)

9 comments:

பழமைபேசி said...

cool buddy.... let me read...

Unknown said...

யப்பா கதை பாண்டியன் எக்ஸ்பிரஸை விட வேகமா போகுது.. ஆர்வமா இருக்குதுங்க.. எங்க கொத்தப் போவுது மரங்கொத்தி??:?

Unknown said...

//Windows is shit...Granted...What's the next worst thing?? Probably Tamilmanam?? //

Even Windows 7? I felt it is much better than other windows craps

குடுகுடுப்பை said...

அருமையா போகுதே , நான் ஏதோ சண்டியர் ,கொலை அப்படி ,இப்படி இருக்கும்னு நெனச்சேன்.

மனித உறவுகள் கதைல நீர் கில்லாடி ஓய்

vasu balaji said...

சும்மா புரட்டி போடுது திருப்பம். மின்னல் வேகம்.

கபீஷ் said...

இந்தப் பகுதியும் நீளமில்லை அல்லது நீளமாகத் தெரியவில்லை. மீண்டும் சுவாரஸ்யம்

கலகலப்ரியா said...

//மனித உறவுகள் கதைல நீர் கில்லாடி ஓய்//

முதல்ல ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்...

கலகலப்ரியா said...

செம இண்டரெஸ்டிங் அண்ட் த்ரில்லிங்..! இடைல சிலது கட் அண்ட் பேஸ்ட் பண்ணி காமென்ட் பண்ணலாமின்னு பார்த்தேன்... இன்னொரு எபிசோடு இருக்குதாமில்ல... அதனால விட்டாச்சு... எப்பவும் போல அருமையான நடை.. மற்றும் மொழி... (காமென்ட்ல அந்த ஸ்டார் போட்டா என்ன போடலைனா என்ன... அந்த வார்த்தை யூஸ் பண்றதுன்னு ஆயாச்சு.. சொல்றதுதானே.. (அட நாம எந்த வார்த்தைன்னு சொல்ல மாட்டோமில்ல.. ரொம்ப டீஜெண்டு..)

கலகலப்ரியா said...

அந்த மரங்கொத்திய எங்க கொண்டு வந்து கொத்த விட்டிருக்காங்கடா சாமி.... ரொம்பப் பெரிய ஆளு சாமி நீரு...

hats off..