Thursday 22 December 2011

பின்னம்

”இப்பிடி ஒண்ணுக்கும் ஏலாம கெடக்கனே ஏ ராசா” பாட்டியின் அலறல் கேட்டுத் தான் கண்விழித்தேனா இல்லை கண்விழித்ததும் கேட்ட முதல் குரலா என்று எனக்கு ஞாபகமில்லை. அன்றைக்கு எழும் போதே வீடு வினோதமாக இருந்தது. “சனியனுங்களுக்கு அவிச்சு கொட்டி முடியலை” திட்டிக் கொண்டே இட்லி சுடும் அம்மா மூலையில் சேரில் உட்கார்ந்திருந்தாள். அப்பாவை வழக்கம் போல காணவில்லை. காலையிலயே கடை திறக்க போயிருக்கலாம். கூடத்தில்  அக்காவின் டிவி அண்ணனின் டேப் ரிக்கார்டர் என்று எந்த சத்தமும் இல்லை. வீடு பேரமைதியாக இருக்க பாட்டியின் குரல் மட்டும் அலறலும் அழுகையுமாக கேட்டுக் கொண்டிருந்தது.
நான் கொஞ்ச நேரம் அம்மாவை பார்த்து விட்டு அவள் எதுவும் சொல்லாமல் போக கண்ணை கசக்கிக் கொண்டேன். வியாழக்கிழமை தான் ஆகிறது. ஸ்கூலுக்கு போகணும். இன்னிக்கு ஸ்கூல் இருக்கா இல்லியா. அம்மா இன்னேரத்துக்கு திட்ட ஆரம்பித்திருப்பாளே. ஒரு வேளை லீவ் எதுவும் விட்டுட்டாங்களா. யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்கா வந்து உலுக்கினாள். எருமை மாடு மணி எட்டாகுது இப்பத் தான் எந்திரிச்சி நெளிஞ்சிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா ஸ்கூலுக்கு நேரமாகுது. நான் அவிழ்ந்து கிடந்த டவுசரை மேல ஏற்றிக் கொண்டு “பாட்டி ஏன் அழறா...இட்லி சுடலியா”
அக்கா தள்ளி விட்டாள். தாத்தாவுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில சேத்துருக்காம். நீ திங்கிறதிலயே இரு. இட்லியும் கிடையாது ஒண்ணும் கிடையாது. போற வழியில சாமியண்ணன் கடைல கொட்டிக்க. இல்லாட்டி ஒரு நாள் பட்டினியா கெட. ஒண்ணும் செத்துட மாட்ட.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல் விளக்காமல் வாய் கசப்பாக இருந்தது. நான் ட்ரவுசரை பிடித்து கொண்டு “தாத்தாவா. அவர் தான் செத்து போயிட்டாரே”
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது. “சனியன் சனியன் இதெல்லாம் எங்கருந்து தான் வந்திச்சுன்னு தெரியலை. காலைல எந்திருச்சதுமே எழவெடுக்குது”. அம்மா எப்பொழுது எழுந்தாள் எப்பொழுது அறைந்தாள் என்று தெரியவில்லை. எனக்கு கன்னம் எரிந்தது. நான் முகத்தைப் பொத்திக் கொண்டு “தாத்தா செத்துப் போயிட்டாருன்னு நீ தான சொன்ன”. அம்மா அடுத்து கை ஒங்குவதற்குள் அக்கா என்னை தள்ளி விட்டு கத்தினாள். “ஆமா எதுக்கெடுத்தாலும் இவனைப் போட்டு அடி. உங்கிட்ட அடி வாங்கி சாகறதுக்கு தான் இவன் பொறந்திருக்கான்”.
ஸ்கூலுக்கு போகும் போது அக்கா தான் சொன்னாள். அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பது பாட்டியின் அண்ணன். எனக்கு தாத்தா முறை. கோலாலம்பூரில் பைக்கில் போகும் போது அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக மெட்ராசுக்கு தந்தி வந்து மெட்ராஸில் இருந்து காலையில் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கிறார்கள். பாட்டி அழ ஆரம்பித்து விட்டாள்.
=====================
அம்மா கதை சொல்லியிருக்கிறாள். அம்மாவின் அப்பாவுக்கு வலது கை சரியாக வராது. நொண்டி என்று சொல்ல முடியாது என்றாலும் நொண்டி என்று தான் சொல்வார்கள். அதை மறைத்து பாட்டிக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். பாட்டியின் அண்ணன் மனைவி மதனிக்கு இது எல்லாம் தெரியும்.  அவள் என் அம்மாவின் அப்பாவுக்கு உறவு முறை. ”எனக்க தங்கச்சிக்கு நொண்டிப்பயலை கட்டி வச்சிட்டியேடி. தாயோளி மவளே. அமுக்குணியாட்டம் இருந்து குடிய கெடுத்துட்டியேடி”. மதனிக்கு அது பொறுக்காது. “எவம்ட்டல ஏறி வர்ற. உம்ம கண்ண பொடனிலயா  வச்சிருந்துச்சி. அவனுக்கு கைய பாக்க துப்பில்ல. எம்மிட்ட ஏறி வர்ற. கெட்டினவன்னா அப்பிடித்தாம். பிரியனுக்கு கை ஒடஞ்சாலும் காலு ஒடஞ்சாலும் இருந்து பார்க்கணும். நாளைக்கு நீரு கை காலு ஒடஞ்சி நொண்டியா கெடந்தாலும் ஒம்ம தங்கச்சி மாதிரி நான் ஆவலாதி சொல்ல மாட்டேன் பாத்துக்கிடும். யோக்கியமான பொட்டச்சின்னா கெட்டினவன பாப்பா. ஒம்ம தங்கச்சி கதை வேற மாதிரில்லா. அதான் ஊரெல்லாம் சீப்பட்டு கெடக்கு கத”.
விடம் கொண்ட பாம்பை போல பாட்டியின் அண்ணாவுக்கு ஏறி விட்டது. “தேவிடியா முண்ட. என்ன சொல்லிட்டடி. ஒன்ன மாதிரி சீப்பட்ட பரம்பரைன்னு நெனைச்சிட்டியா. நொண்டியாம்ல நொண்டி.திருவாந்தரத்து நாயர் வம்சமிடி. இப்ப சொல்லுதேன் கேட்டுக்க. ஒனக்க அண்ணன் மாதிரி நாறப் பொழப்பு நான் பொழைக்க மாட்டேன். எனக்க கை காலு போச்சின்னா நாண்டுக்கிட்டு சாவேன். ஈனப்பொழப்பு எனக்க ரத்தத்தில ஓடல”. எப்படி என்று தெரியவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் மலேஷியா போனவர் அதற்கப்புறம் ஊருக்கு வரவேயில்லை. பிள்ளைகளின் படிப்பு பணம் வரும். ஊரில் திருவிழா காது குத்து கல்யாணம் என்றால் தென்னநேரி கேசவன் நாயர் என்று யாரேனும் மொய் எழுதிப் போவார்கள் ஆனால் ஒரு நாளும் பாட்டியின் மதனி பேருக்கு பணம் வராது.
==================================
அன்றைக்கு ஸ்கூல் முடிந்து வீடு வந்த போது வீட்டில் கும்பலாக இருக்க வாசலில் செபாஸ்டின் நாடாரின் டாக்ஸி நின்றிருந்தது.பாட்டி இன்னமும் அழுது கொண்டிருந்தாலும் வேறு சேலை கட்டியிருந்தாள். அம்மாவும் மாமாவும் ரெடியாக இருக்க அப்பா அதிசயமாக வீட்டில் இருந்தார். தென்னநேரி பாட்டி கூடத்தின் மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். “ஒத்த வார்த்த சொல்லிட்டன்னு ஒரு மனியன் இப்படி போவானா. ஒரு நாளு ரெண்டு நாளு இல்ல முப்பது வருசம் போயிட்டான். புள்ளைங்களுக்கு எழுதுவான் ஒரு நாளும் ஒங்கம்மா எப்பிடி இருக்கான்னு கேட்டதில்லை. மத்தவளுக மாதிரி எனக்கு அண்ணன் தம்பின்னு ஒருவனும் இல்ல நானும் ஒருத்தன்கிட்டயும் ஒத்த வார்த்த பேசினதுல்ல. ஆனாக்கும் எங்க சாமி விடுமா. வருசம் தவறாம பொங்க வக்கிறமே அவ கண்ணு அவிஞ்சா போச்சு. கேப்பாள்ல. அரசன் அன்னு கொல்வான் தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவானுவ. இந்தா கேட்டுட்டாள்ல. ஏ வயித்தெரிச்சல கேட்டுட்டாள. கால ஒடச்சிப்புட்டா. ஒடம்புல ரெத்தம் தெடமா இருக்க வரைக்கும் ஒடலாம். ஒடஞ்சி போனா பொண்டாட்டிக்கிட்ட வர வச்சிடுவாள.”
நான் மெட்ராஸை பார்த்ததே இல்லை. திருச்செந்தூரை விட பெரிய கடல் என்று ராஜாங்கம் சொன்னான். நான் மாமாவின் கையை பிடித்துக் கொண்டு “மாமா மாமா நானும் வர்றேன். எனக்கு ஸ்கூல் டீச்சர் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.”.
============================
வள்ளியூர் திருநெல்வேலி மதுரை திருச்சி. திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் பஸ் நிற்க மாமா என்னை எழுப்பி டீ வேணுமாடா என்று கேட்க நான் தலையை ஆட்டி இல்ல காப்பி என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. நான் கண் விழித்ததும் “இவந்தான் சின்னப்பையன். எட்டு வயசு ஆவுது. சூது வாது ஒண்ணும் தெரியலை.போனா போன எடம் வந்தா வந்தா எடம். ஒரு மாதிரி மந்தமா இருக்கான். திருச்செந்தூருக்கும் பழனிக்கும் மொட்டை போடறதா நேந்துக்கிட்டு இருக்கோம்.”. அம்மா சொல்ல பாட்டி குறுக்கிட்டு “இவனுக்க தெளியறதுன்னா அவனுக்க கொலதெய்வத்த நேந்துக்கிடணும். அதுக்கு  கும்போணம் பக்கமில்லா போவணும்”. அம்மா பதில் சொல்லாமல் பாட்டியை வெறிக்க மெட்ராஸ் மாமா “செரி செரி அப்புறம் பேசிக்கலாம். ஃப்ளைட் வர்ற டைம் ஆச்சு. இப்ப போனா சரியா இருக்கும்”.
===================================
நான் அதற்கு முன் மெட்ராஸ் ஏர்போர்ட் பார்த்ததில்லை. எப்பொழுதாவது வானத்தில் வெள்ளையாக கோடிருக்கும். அதைப் பார்த்து அந்த ஃப்ளைட் தூத்துக்குடிக்கோ மதுரைக்கோ போகிறது என்று பந்தயம் கட்டியதோடு சரி. சாரா எனக்கு முப்பது பைசா தரவேண்டும் என்று ஞாபகம் வந்தது. மெட்ராஸ் ஏர்போர்ட்டில் கடலில் அலையும் காகம் போல ஜனங்கள் இருந்தார்கள். மெட்ராஸ் மாமா என் கையை இறுக்கி பிடித்துக் கொள்ள நாங்கள் வரிசையில் நின்றோம்.
திடீரென்று ஒரு உயர்த்தி பிடிக்கப்பட்ட அட்டையை பார்த்து விட்டு மாமா கையை ஆட்டி கத்தினார். “ராஜேந்திரன். ராஜேந்திரன். ஐயம் ராஜேந்திரன்.”
மாமாவின் கூச்சலில் பயந்து போன நான் அவர் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த பக்கமாக பார்த்தேன். கண்ணாடி பேழையில் உடல் முழுவதும் மூடி ஊதிப் போன முகம் மட்டும் தெரியும் படியாக ஒரு பிணம்.
அப்பொழுது தெரியவில்லை. ஆனால் வெகு நாட்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. ஊருக்கு போக வேண்டியது தெரிந்ததும் தாத்தா விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார் என்பது.
=====================================================

Tuesday 20 December 2011

எஸ்.ராமகிருஷ்ணனின் யாமமும் ராஜாவின் ஆடையும்......

இரவு அழகானது. இரவு ரகஸியமானது.  நனைந்த மரத்தின் இலையிலிருந்து சொட்டும் மழைத்துளிகளைப் போல இரவு நிகழும் கவிதை. இரவின்றி நிலவும் அழகல்ல. அதே சமயம் இரவு அது மட்டுமே அல்ல. இரவு குரூரமானது. பகலில் பதுங்கியிருந்த மிருகங்கள் வேட்டைக்கு வெளிக்கிளம்பும் நேரமது. பார்வையை திரையிட்டு படுகுழிகளையும் பள்ளங்களையும் மறைப்பதும் இரவு தான். இரவு இரட்டையானது. விடாது நடத்தும் ஆட்டத்தில் இரவு மீண்டும் மீண்டும் பகலை அழித்துக் கொண்டே இருக்கிறது. 

எஸ்.ராமகிருஷ்ணனின் “யாமம்” இரவையே கதையாகக் கொண்டிருக்கிறது. யாமம் காட்டும் இரவு புறவயமான இரவு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்கு உள்ளும் அடைபட்டிருக்கும் இரவு. அதில் சில அழகானவை. சில அசிங்கமானவை. சில சுகமானவை சில வலியானவை. எஸ்.ராவே சொல்வது போல “இரவென்னும் விநோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக் கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை”.


யாமம் மனித மனம் என்னும் அளக்க முடியாத இரவின் கதை.  வெறும் சதுப்பு நிலமாக இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு பிரம்மாண்டமான நகராக வளர்ந்து நிற்கும் மதராப்பட்டிணம் என்ற சென்னையின் ஆதிக் கதை. அந்த மதராப்பட்டினத்தின் மனிதர்களின் கதை.


ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத நான்கு கதைகள். யாமம் எனும் அத்தர் தயாரிக்கும் அப்துல் கரீம் அத்தரின் தயாரிப்பு ரகசியத்தை விட்டு செல்ல ஆண் மகவு இல்லையே என்ற உளைச்சலில் குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டு கடைசியில் அத்தர் தயாரிப்பையே விட்டு தலைமறைவாகிறார். அவருடன் அத்தர் தயாரிப்பும் அழிகிறது.  அத்தர் வாசனையில் வாழ்ந்த அப்துல் கரீமின் மூன்று மனைவிகளும் பெண் குழந்தையும் மீன் விற்று வாழும் நிலை வருகிறது.


பிரிட்டிஷ் அரசின் நில அளவை குழுவில் வேலை பார்க்கும் பத்ரகிரி. தாயின் மறைவுக்குப் பின் தந்தையால் விரட்டப்பட்டு சித்தியிடம் வளர்ந்து நிற்பவன். தம்பி திருச்சிற்றம்பலத்திற்கு பத்ரகிரி தான் தந்தை நிலையில் இருந்து வளர்க்கிறான். லண்டனுக்கு மேல்படிப்பு படிக்கவும் வைக்கிறான்.  ஆனால் ஏதோ ஒரு கணத்தில் நிலை மாறி தம்பியின் மனைவியுடன் உறவு ஏற்பட்டு ஒரு குழந்தைக்கும் தந்தையாகிறான். 


தாய் வந்து கெஞ்சியும் போகாமல் எந்த ஒரு இடத்திலும் தங்காமல் நீலகண்டம் என்ற நாயின் பின்னால் அது செல்லும் இடத்துக்கெல்லாம் செல்லும் சதாசிவ பண்டாரம். கடைசியில் மதரா பட்டினத்திற்கு வந்து பட்டினத்தார் சமாதியில் தானும் சமாதி ஆகிறது.


பங்காளியுடன் நிலத்தகராறில் கிருஷ்ணப்ப கரையாளர். எலிசபெத் என்ற தாசியுடன் காதல் ஏற்பட்டு கடைசியில் அவளுடன் வாழ்வதற்காகவே வழக்கை முடித்துக் கொண்டு பங்காளியுடன் சமாதானம் ஆகிறார். 


பத்ரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலத்துடன் உல்லாசாத்திற்காகவே லண்டன் செல்லும் சற்குணம், கடைசியில் உல்லாசம் என்பதையே மறந்து லண்டனின் கடைநிலை தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறான். 


வெள்ளையர்கள் நடத்தும் ராயல் சொசைட்டி இந்தியனான திருச்சிற்றம்பலத்திற்கு தரும் படிப்பு உதவித் தொகை.


ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இந்த எல்லா கதைகளிலும் எல்லாவற்றையும் இணைக்கும் சரடாக இரவு. 
========================


இரவு ஆழமானது. இரவைப் பற்றிய கதையில் அதன் ஆழம் பற்றி கொஞ்சமேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தம்பி மனைவியுடன் உறவு கொள்ளும் பத்ரகிரி. வெளிப்புறமான சம்பவங்கள் வழியே சொல்லப்படுகிறதே தவிர பத்ரகிரியின் மனமோ இல்லை தம்பி மனைவி தையலின் மனமோ ஆராயப்பட முயற்சி எதுவும் செய்யப்படவில்லை. 


இப்படியே பத்ரகிரியின் மனைவி விசாலா, சதாசிவ பண்டாரம், கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபெத், வகீதா, சுரையா, ரஹ்மானி, திருச்சிற்றம்பலம், சற்குணம் என்று எந்த கதாபாத்திரத்தின் ஆழத்திற்குள்ளும் யாமம் போக மறுக்கிறது.


முன்னூறு பக்கம் தாண்டும் இந்த நாவலை படிக்கும் போது ஏதோ ஒரு பழைய அரசு ஆவணத்தை படிக்கும் உணர்வு ஏற்படுகிறதே தவிர வாசிப்பவன் நிகழ்வில் ஒரு அங்கமாக உணரமுடியவில்லை. முக்கிய காரணம் நாவலில் சொல்லப்படும் எந்த கதையும் நிகழவில்லை.முன்னொரு காலத்தில் நிகழ்ந்ததாக ஏற்றம் இறக்கம் இல்லாத தொனியில் சொல்லப்படுகிறது. எந்த ஒரு எழுச்சிகரமான கட்டமும் இல்லாததால் மூன்றாம் பக்கம் படிக்கும் போதே முதல் பக்கம்  மறந்து போகிறது. 



இலக்கியம் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை என்றாலும் இப்படியாக நடந்தது என்று மட்டுமே சொல்வது இலக்கியமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அப்படியெனில் செய்தித் தாள்களுக்கும் இலக்கியத்திற்குமான வேறுபாடு தான் என்ன? கட்டுரையும் கதையும் எந்த புள்ளியில் பிரிகிறது?


நான் பார்த்த வரையில் இந்த நாவலுக்கு மிக நல்ல நாவல் என்ற ரீதியிலான விமர்சனங்களே இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்ள நுண்ணுணர்வு வேண்டும் என்றும் அவர்கள் சொல்லக் கூடும். எந்த ஆழத்திற்கும் போகாத வெறுமனே வார்த்தைகளால் ஆன ஒரு மேடை நாடகத்தை பார்க்கும் உணர்வே எனக்கு ஏற்படுகிறது என்பதால் ராஜா ஆடையே இல்லாமல் அம்மணமாக இருக்கிறார் என்று சொல்வதை தவிர்க்க முடியவில்லை.


எஸ்ராவின் எழுத்து நடையைப் பற்றி தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. Watching the paint dry.


யாமம். தூக்கம்.