
எனக்கு இருப்பதை போன்றே பலருக்கும் கேள்விகள் இருப்பது பெரிய மகிழ்ச்சி..பின்ன, ஒண்ணியும் பிரியலயேன்னு பொலம்புனது எனக்கு மட்டும் தான தெரியும்..இப்ப கம்பெனிக்கு இவ்ளோ பேரு இருக்காங்களா..அதான் ஒரே குஜாலாக்கீது....
டாக்டர் ப்ரூனோ, ஒரிஜினலாக கேள்விகளை எழுப்பிய சந்திரசேகரன் கிருஷ்ணன், மற்றும் பலர் கேள்விகளுக்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..
1) ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? சமாதி, கல்வெட்டு, இரங்கற்பா இந்த மாதிரி...........அவர் தலைமறைவானதாக அல்லது சாமியாராய்ப் போய்விட்டதாகக் கூட சொல்லலாம். (சுரேஷ்..)
ஆதித்ய கரிகாலர் இறந்து தான் போனார் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளை ஆதாரம் காட்டி கல்கி வாதிக்கிறார்...மேலும் சரித்திரத்திலும் இது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது..
ஆனால் டாக்டர் ப்ரூனோ சொல்லியிருப்பது போல் அவர் எப்படி இறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை...அவர் கொல்லப்பட்டாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா?
கல்கியின் கதைப்படி, கரிகாலர் நெஞ்சில் வீரபாண்டியன் வாள் பாய்ந்திருக்கிறது...(பலரும் நினைப்பது போல் இடும்பன் காரியின் சுருள் கத்தி அல்ல...).. அந்த வாளை கடைசியாக கையில் வைத்திருப்பது கரிகாலர் தான்...அதுவுமில்லாமல் நிகழ்ச்சி பல நாட்களுக்கு முன்னரே ஆதித்த கரிகாலரின் மன நிலை நிலையற்று இருந்ததாக வருகிறது..(பார்க்க பார்த்திபேந்திரன் உடனான அவர் உரையாடல்கள், மற்றும் இளமையில் இறப்பது குறித்து அவர் சிந்தனைகள்).
கல்கியின் கதைப்படி, நந்தினியுடன் வாதித்து கொண்டிருக்கும் ஆதித்தரின் கடைசி வாக்கியம் "நல்லது! நம் இருவருடைய வாழ்க்கைக்கும் பரிகாரம் ஒன்று தான்! விமோசனம் ஒன்று தான்..இதோ, நந்தினி! என் பிராயச்சித்தம்!.."
இந்த வசனம் வரும்போது தான் வந்தியத்தேவனுடைய கழுத்தை நெறித்து விட்டு காளமுக வேடத்துடன் பெரிய பழுவேட்டரையர் வருகிறார்..ஆனால் அதே சமயம் தன் முன்னே பார்க்கும் நந்தினி கரிகாலன் தரையில் கிடப்பதையும் அவன் மார்பில் வீரபாண்டியன் வாள் பாய்ந்திருப்பதையும் பார்க்கிறாள்..
இனி கல்கியின் வரிகளிலேயே...
"(நந்தினி) கண்களை துடைத்துக் கொண்டு எதிரே பார்த்தாள்.கரிகாலன் கீழே விழுந்து கிடப்பதை பார்த்தாள்.அவன் உடலில் வீரபாண்டியன் வாள் பாய்ந்திருப்பதையும் பார்த்தாள்"
இதற்கு பின்னரே ரவி தாஸன் சீனில் வருகிறான்..எனவே ரவி தாஸன் கொன்றிருக்க முடியாது..பழுவேட்டரையர் அப்பொழுது தான் பிரவேசிக்கிறார்..கரிகாலன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவர் கரிகாலனை கொல்ல காரணங்கள் இல்லை..வந்தியதேவனோ தூரமாக ஒளிந்திருக்கிறான்..மணிமேகலை சீனிலேயே இல்லை..இருந்தாலும் கரிகாலனை கொல்ல அவளுக்கு காரணங்கள் இல்லை..
எஞ்சியிருப்பது நந்தினி, கரிகாலன் மட்டும் தான்..ஒன்று நந்தினி கொன்றிருக்க வேண்டும்..இல்லை கரிகாலன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்..
இதற்கு பின்னர் பாட்ஷா ரேஞ்சில் நான் தான் கொன்னேன் என்று பழுவேட்டரையர், மணி மேகலை என்று பலர் சாட்சி சொல்வது நம்பும்படி இல்லை..
2) அட நந்தினியின் குழந்தையின் அப்பா யார் ? some confussions are there! (ராஜி)
அது யாரென்று கதையில் இல்லை..ஆனால், அது நந்தினியின் குழந்தை இல்லை என்பது உறுதி... கரிகாலனுக்காக காத்திருக்கும் கடைசி காட்சியில் "அன்று பள்ளிப்படை காட்டில் யாரோ ஒரு சிறுவனை உன் மகன் என்று கொண்டு வந்தார்கள்" என்று அவள் புலம்புவதாக வருகிறது.. எனவே அந்த குழந்தை நந்தினியின் மகன் அல்ல என்பது உறுதி.
3) வீரபாண்டியனுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு? மகளா இல்லை காதலியா இல்லை இரண்டுமேவா? (என்னை அடிக்க வராதீர்கள்..கதையில் வரும் பெரும் குழப்பம் இது).. கதையில் இரண்டு வீரபாண்டியர்களா இல்லை ஒரே வீர பாண்டியனா?
முதலில், கதையில் இரண்டு வீரபாண்டியர்கள் இல்லை.. வீரபாண்டிய மன்னர் போரில் தோற்று இலங்கை ஓடுகிறார்..அங்கு பிச்சியாக சுற்றிக் கொண்டிருக்கும் மந்தாகினியுடன் உறவு ஏற்படுகிறது..அதில் பிறந்த குழந்தைகள் தான் நந்தினியும், மதுராந்தக சோழனாக வளர்ந்து வரும் உத்தம சோழனும்... ஆக மகள் என்பது உறுதி.. இதையே நந்தினியும் கடைசி காட்சியில் சொல்கிறாள்..
இதே வீரபாண்டியன் இலங்கை அரசனின் உதவியுடன் படை திரட்டி மீண்டும் போர் வருகிறது..இந்த போரில் தான் ஆதித்த கரிகாலனால் தலை வெட்டப்பட்டு இறக்கிறார். இந்த இடத்தில் நந்தினி ஆதித்தனிடம் கெஞ்சுவது "இவர் என்னை மணந்து கொள்ளப் போகிறவர்...எனக்காக விட்டுவிடுங்கள்..."
குழப்பம் இப்பொழுது தான் வருகிறது...நந்தினிக்கு வீர பாண்டியன் தன் தந்தை என்று தெரியுமா? தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது..ஆனால் வீரபாண்டியனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்...அதனாலேயே அவன் நந்தினியை அரசியாக்குவேன் என்று சொல்லியிருக்க வேண்டும்..ஏனெனில் அவள் தான் வாரிசு! ஆனால் நந்தினி அதை தப்பாக நினைத்துக் கொண்டிருக்க இடம் இருக்கிறது..ஏனெனில் அவளுக்கு தன் பிறப்பு பற்றி உண்மை தெரியாது...
ஆனால் கடைசி காட்சியில் நந்தினி வீரபாண்டியன் தலையை அன்பே என்று விளிப்பதன் அர்த்தம் என்ன? தன் தந்தை என்று தெரிந்த பின்னும் "அன்று என் காதலை கொன்றீர்கள், பின் என்னை காதலித்தவரை கொன்றீர்கள்" என்று கரிகாலனிடம் சொல்வதன் அர்த்தம் என்ன?? என்னை காதலித்தவரை என் மேல் அன்பு செலுத்தியவர் என்றும் அர்த்தம் சொல்லலாம்..(வாதத்திற்காக!)
இதில் கவனிக்க வேண்டியது கடைசி வரை தான் வீரபாண்டியனை காதலித்ததாக நந்தினி எங்கும் சொல்லவில்லை..யாரிடமும் சொல்லவில்லை..(இல்ல நான் எங்கனா மிஸ் பண்ணிட்டேனா?)
"என் நெஞ்சை கிழித்து பாருங்கள், நீங்கள் தான் இருப்பீர்கள்" என்று கரிகாலன் சாகும் முன் அவனிடம் சொல்கிறாள்..."அடுத்த முறை பிறந்தால் உங்களையே கணவனாக அடைவேன்" என்று பெரிய பழுவேட்டரையரிடம் சொல்கிறாள்..
ஆக, வீரபாண்டியன் மேல் அவளுக்கு காதல் இருந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை..ஆனால் வீரபாண்டியன் தன்னை காதலித்ததாக அவள் எண்ணியிருக்க வாய்ப்புண்டு..
எனக்கு என்னவோ அவள் உண்மையில் காதலித்தது கரிகாலனை மட்டுமே என்று தோன்றுகிறது...அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற எண்ணத்திலே அவனை பழிவாங்க விழைகிறாள்..
அண்ணன் தங்கை என்று ஆகிவிட்ட பின் எந்த காலத்திலும் மணக்க முடியாது என்பதாலும் அந்த உறவின் மோசமான நிலையும் எண்ணியே கரிகாலன் உயிர் துறக்கிறான்..
டாக்டர் ப்ரூனோ சொல்லும் எடிபஸ் காம்ப்ளெக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த கதையில் இருப்பதாக தெரியவில்லை..
4) கதையின் தீவிரமான காதல் எது?
எனக்கு தெரிந்த வரை, மணிமேகலையின் காதல்.. காதலனுக்காக கொலைப் பழியை சுமக்க தானே முன்வந்தவள்...காதலனுக்கு அபாயம் செய்தால் தன் சகோதரனையே கொல்வேன் என்றவள்...பின் காதலன் இறந்து விட்டான் என்றவுடன் அவனை எண்ணி பைத்தியம் ஆனவள்..
இதைப் போன்றே தீவிரமான இன்னொரு காதல் மந்தாகினியின் காதல்.
சரி...ஏதோ என்னால் முடிந்த விளக்கங்கள்...
இனி யாரும் கேட்காத, ஆனால் என்னை படித்த நாளிலிருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வி..
பொன்னியின் செல்வன் என்று தலைப்பு இருந்தாலும் இந்த கதையின் முக்கிய பாத்திரங்கள் வந்தியத் தேவன், ஆழ்வார்க்கடியான் மற்றும் நந்தினி..
இதில் வந்தியத் தேவன் மட்டுமே உண்மை, மற்றவை கற்பனைப் பாத்திரங்கள்.. நந்தினி என்று ஒருவர் இருந்ததாக சோழ வம்சம் தொடர்புடைய எதிலும் ஆதாரம் இல்லை.
இப்படி இருக்கையில் ஒரு கற்பனை பாத்திரத்தை படைத்து அதில் உறவுச் சிக்கலை கல்கி உருவாக்க காரணம் என்ன? அவரின் நோக்கம் வரலாற்று புதினமா இல்லை உறவுச்சிக்கலை சரித்திரப் பிண்ணனியில் சொல்லும் முயற்சியா? அது ரசிகர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு திசை திரும்பி விட்டதா?
டாக்டர் ப்ருனோ சொல்வது போல் இது எடிபஸ் காம்ப்ளெக்ஸ்/எலக்ட்ரா காம்ப்ளேக்ஸ் அடிப்படையான கதையா? இந்த கதையின் இன்ஸ்பைரேஷன் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டா?
சிறிய வயதில் ஒரே ஒரு பாகம் மட்டும் படித்திருந்தாலும், பொன்னியின் செல்வனை நான் சென்ற வருடம் தான் படித்தேன்.. எனக்கென்னவோ இது உறவுச்சிக்கலை சொல்லும் கதையாக தான் படுகிறது!
யாரேனும் விளக்கினால் நலம்!
(எல்லாரும் கேட்கும் போது எனக்கு மட்டும் என்ன மானம் வாழுது...அதனால கேட்கிறேன்...பிடிச்சிருந்தா ஓட்டுப் போட்டுட்டு போங்க!)
