Sunday 4 August 2013

தர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7

எல்லாவற்றுக்கும் வரையறை இருக்கிறது. சாமியார்னா காவி வேட்டி நோ சட்டை நீளமான தாடி ப்ளாஸ்டிக்ல இருந்தாலும் கழுத்து நிறைய ருத்ராட்ச மாலை தேங்கா வாழைப்பழம் சாம்பிராணி வாசம்.மாடர்ன் சாமியார்னா காவி சட்டை ட்ரிம் செஞ்ச தாடி, ஆக்ஸ்ஃபோர்ட் (டுட்டோரியல் காலேஜ்) இங்கிலீஷ். அரசியல்வாதின்னா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. முற்போக்குவாதின்னா லண்டன்ல பீக் அவர்ல ட்ரைன்ல குண்டு வெடிச்சி ஆயிரம் பேர் செத்தாலும் பாபர் மசூதியை இடிச்சதால தான் இதெல்லாம் நடக்குதுன்னு ட்விட்டர் ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ்(இல்லாட்டி ஒலகமே சொர்க்க பூமியா இருந்துருக்கும்டா - கோவிந்தன்). இலக்கியவாதின்னா அழுக்கான ஜீன்ஸ் பேண்ட் கசங்கின சட்டை ரெண்டு மாசம் ஷேவ் செய்யாத முகம் (தாடி ரொம்ப வளர்ந்துட கூடாது, அப்புறம் பெருசுன்னு சொல்லிடுவாங்க - கோவிந்தன்), அழுக்கான ஜோல்னாப் பை (அதுக்குள்ள கசங்கலா பேப்பர், லீக் ஆகற பேனா இருக்கணும் - கோ), புல்லட் ஃப்ரூஃப் மூக்கு கண்ணாடி. கைல தடியா ஒரு புஸ்தகம் (ரொம்ப படிச்சவருங்கிறதுக்கு ப்ரூஃப் வேணும்ல? - அவனே தான்)

இதையெல்லாம் இப்ப எவன் கேட்டான் பேசாம பொத்திக்கிட்டு போவியா ஆத்து ஆத்துன்னு ஆத்தற. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் ஆண்கள் பெண்கள் குழந்தைகளே இப்படி எந்த எழவு வரையறையும் இல்லாமல் சாதாரண மிடில் கிளாஸ் மாதவனாக இருப்பதில் பல பிரச்சினைகள் இருக்கிறது. நல்ல வேளையாக நான் மிடில் கிளாஸ் இல்லை. தரை டிக்கட். சத்யத்தில் படம் பார்த்துவிட்டு தக்காளி சாஸுடன் சமோசா சாப்பிடுகிறார்கள். சிவாஜி படத்துக்கு பெரும்பாலும் பாட்டிகள். அப்பவே அப்படித் தான். நானாடவில்லையம்மா சதையாடுது அப்பனென்றும் பிள்ளையென்றும் விளையாடுது டி எம் சவுந்தர்ராஜன் பாட்டுக்கு சிவாஜியின் முகத்து சதை ஆடும் போது இவர்களும் அய்யகோவென்று அழுது கொண்டிருப்பார்கள். எம்ஜியார் படம் தான் ஸ்பெஷல். ஒரு ரூபாய்க்கு தரை டிக்கட். பெரும்பாலும் பீடி. ரொம்ப கொஞ்சமாய் கடைசிவரை இழுக்கப்பட்ட ஃபில்டர் இல்லாத சிகரெட்.எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு மணலை குவித்து (ஒரு வழியா டைட்டில கொண்டு வந்துட்டாண்டா - கோவிந்தன்) நமக்கு நாமே சீட் செய்து கொள்ளவேண்டும். ஒரே பிரச்சினை புதிய வானம் ட்ட்ட்ட்டாடாய்ங்ங். எம்ஜியார் கையை ஒரு சுத்து சுத்தி வானம் எங்க இருக்குன்னு காமிக்கும் போது பக்கத்தில இருக்க பிக்காலியும் கைய சுத்தி நம்ம மூஞ்சில மணல் விழும். எம்ஜியார் ஜெயலலிதாவுடனோ சரோஜாதேவியுடனோ காதல் செய்யும் போது கவனமா தள்ளி உக்கார்ந்து கொண்டால் நமக்கு நல்லது. சினிமா தியேட்டரில் அழகனின் (அழகிக்கு எதிர்ச்சொல் அழகன் தான?) கற்பு சூறையாடல்.போலீஸ் வலைவீச்சு.தினத்தந்தியில் கொட்டை எழுத்தில் செய்தி வராமல் இருக்கும். 

ஒருவாய்க்கோ ரெண்ட்ருவாய்க்கோ டிக்கட் எடுத்ததோட நின்னிருக்கலாம் தான். ஆனா உலகம் சுத்திக்கிட்டே இருக்கு. அதையும் கூட தட்டைன்னு ரொம்ப பேரு சொல்லிட்டுருந்தான். இல்லடா அது ஒரு மாதிரி உருண்டைன்னு கலிலியோ கலிலீன்னு ஒருத்தர் சொல்லி அவரை ரெண்டு தட்டு தட்டி வீட்டோட உக்கார வச்சிட்டானுங்க. இன்னிக்கும் உலகம் உருண்டைங்கிறது அறிவியல் பரப்புற தவறான செய்தி. எங்க மதப்புத்தகத்துல அதை தட்டைன்னு கடவுளே சொல்லிட்டாரு. அதனால அது தட்டை தான் உருண்டையா இருந்தா நீ எப்பிடி கீழ விழாம ப்ளாக் எழுதற அப்படின்னு சில பேரு சொல்லிக்கிட்டு தான் இருக்காங்க. பிதாவே இவர்களை மன்னியாதீம். 

என்ன சொல்லிட்டு இருந்தேன்? ஆமா தர டிக்கட்டு. அதோட நின்னிருக்கலாம். ஆனா நாலு எழுத்து படிச்சி வைப்போம்டா கோவிந்தான்னு எப்பனா எப்பனா தான் மக்களே எதுனா புக் படிக்கிறது. பெரும்பாலும் ஓசி புக் தான். வாங்கற அளவுக்கு ஒரு ப்ளாக் எழுத்தாளனை என்னிக்கு தமிழ் சமூகம் வச்சிருக்குது? கம்பனோட தாத்தா காலத்திலருந்து நடக்கற கதை. 

தாத்தான்னா ஞாபகம் வருது. சின்ன புள்ளையா இருக்கும் போது அதாவது நான் சின்ன புள்ளையா இருக்கும் போது தாத்தாட்ட இருந்து இங்கிலாந்து லெட்டர்ல கடுதாசி வரும். அன்புள்ள மகளுக்கு, இங்க எல்லாரும் நல்ல சுகம். அங்கே சுகம் அறிய ஆவல். ஊரில் மழை இல்லை. இப்படி ஆரம்பித்து உன்னை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. உடனடியாக குடும்பத்துடன் வந்து போகவும். ஸ்டார்டிங் மட்டுமல்ல ஃபினிஷிங் கூட நல்லாத் தான் இருக்கும். ஆனா நடுவுல இருக்கறது வேற விஷயம். நீ காசு வாங்கி ரொம்ப நாளாச்சு. சோத்துல உப்பு போட்டுத் தான் திங்கிறியா இதை விட அசிங்கமா பேச என்னோட மனசு எடம் கொடுக்க மாட்டேங்குது. 

அப்புறம் என்ன மயிருக்கு நல்ல சுகம் நொள்ளா சுகம் உன்னை பார்க்க ஆவல் அவல்னு அள்ளி விடறது? எல்லாம் மொதல்ல அதாவது இந்த ப்ளாக்கோட மொதல்ல சொன்னது தான். லெட்டர்னா இப்பிடித் தான் இருக்கணும்னு ஒரு  வரையறை இருக்குல்லா? அதுக்கு தான இப்பிடி எழுதறது. 

எம் கோபால கிருஷ்ணனின் மணல் கடிகை பற்றி இதுவரை எழுதியிருப்பதும் அப்படித் தான் இருக்கிறது. (ங்கொய்யால இது சொல்றதுக்கு தான் இந்த சுத்து சுத்தினியா - கோவி) ஒசி புத்தகம் படித்து விட்டு இது பத்தி பழம் தின்னு கொட்டை போட்டவங்க எதுனா சொல்லிருக்காங்களான்னு தேடிப் பார்த்தா எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி தமிழ் இலக்கியத்துல முக்கியமான புக். அவ்ளோ தான். அதுக்கு மேல ஒருத்தரும் ஏன் முக்கியமான புக்கு எதுக்கு முக்கியமான புக்குன்னு சொன்னா மாதிரி தெரியலை. ராஜாவோட சட்டை சூப்பர். அந்தா அந்த காலர்ல தெச்சிருக்கற பச்சை கல்லு சும்மா தக தகன்னு எம்ஜியார் கலர்ல ஜொலிக்குது. ராசா குண்டி தெரிய அம்மணமா இருக்கறாருன்னு உண்மையை சொன்னா நம்மளை ஒரு பய மதிக்க மாட்டான். எல்லா பேரும் என்னா சொல்றாய்ங்களோ அதையே சொல்லி வச்சா நோ டேஞ்சரு. அந்த பட்டன் வைரத்துல செஞ்ச மாதிரி இருக்கேன்னு சொன்னா இன்னும் சூப்பரு. ஒரே ஒருத்தர் மட்டும் கற்பனை குதிரைல ஏறி மெதக்கிற ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு மணல் கடிகை சலிப்பூட்டும்னு டிக்ளேர் பண்ணிருக்காரு. இனிமே எவனாவது அது சலிப்பா இருக்குன்னு சொல்லுவீங்க? சுமால் பாய்ஸ் அண்ட் கேள்ஸ். சிறுவர் மலர் படிங்க. ராஜா சட்டை சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்.ஆனா என்ன மாதிரி தரை டிக்கட்டுக்கு பிரச்சினை என்னன்னா என்னய்யா சிவாஜி எப்ப பார்த்தாலும் அழுதுக்கிட்டே இருக்காருன்னு சொல்றது தான். சொல்லாம இருக்க முடியாது பாருங்க.  இல்லாட்டி நானும் சத்யத்துல டொமட்டோ சாஸோட சமோஸா தின்னுட்டு இட்ஸ ஃபண்டாஸ்டிக் ஃபில்ம் அப்படின்னு அறிக்கை விட்டுக்கிட்டு இருப்பனே. பிரச்சினை புக் இல்லை, நான் தர டிக்கட். அதான்.

மணல் கடிகையின் பிரச்சினை அதன் பின்னட்டையில் ஆரம்பிக்கிறது. (பின் நவீனத்துவம்னா இதானாடா? - கோவிந்தன்). ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை அவன் எண்ணப்படியே அமைகிறது. உறவுகளின் அடி வேர் சிக்கல்களை அலசும் நவீனம் இதுவே. பின்னட்டையின் டிக்ளரேஷன். (இனிமே பின்னட்டை பார்த்துட்டு எதுனா புக் படிப்ப நீ? - கோவி). சிக்கல்களை அதுவும் அடிவேர் சிக்கல்களை அலசும் நாவல் எம்ஜியார் படமாக இருந்தால் என்ன செய்வது?  

திருப்பூரின் பிண்ணனியில் (அது வெறும் பிண்ணனி மட்டுமே, திருப்பூரின் கதை அல்ல, உலகமெங்கும் இருக்கும் மனிதர்களின் கதை என்று ஆரம்பத்தில் நாவலாசிரியர் குறிப்ப்பிடுகிறார்), ஐந்து நண்பர்களின் கதை. ப்ளஸ் டூ படித்து முடிக்கும் கட்டத்தில் ஆரம்பிக்கும் கதை அவர்களின் வாழ்க்கையை பின் தொடருகிறது. அது வரை சரி தான். ஆனால் எந்த ஒரு விஷயத்திலாவது ஆழமாக செல்கிறதா என்றால் இல்லை. அம்மா செத்ததும் அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா என்று கத்தி விட்டு முகத்தை குனிந்து கொள்ளும் எம்ஜியார் ட்ரிக். 

தொழில் நகரத்தின் பிண்ணனியில் அமைந்த நாவல், அந்த தொழிலின் சிக்கல்களை வெறுமனே விஜய் படம் போல தொட்டு செல்கிறது என்பது முக்கிய பிரச்சினை. வெறும் தொழிலாளியாக சேரும் சரத் குமார் ச்சே சிவாவை அடுத்த சில பக்கங்களில் ரத்தின வேல் செட்டியார் முதலாளியாக உயர்த்துகிறார் (சரத்குமார் மட்டும் தான் ஒரே பாட்டுல தொழில் அதிபர் ஆகணுமாடா - கோவிந்தன்). முக்கியமான கேள்வி, சிவாவை உயர்த்த ரத்தினவேல் செட்டியாருக்கு என்ன காரணம்?? அவருக்கும் சிவாவுக்கும் என்ன உறவு? டியர் ரைட்டர், பல கோடி முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பவன் அழுத்தமான காரணம் இல்லாமல் யாரையும் தேர்வு செய்ய மாட்டான். அது உளவியல் பிரச்சினை. ஆனால் மணல் கடிகை இந்த இடத்தில் மட்டுமல்ல, இன்னும் பல பல இடங்களில் வெறுமனே நிற்கிறது.  சிவா மட்டுமல்ல, வண்ணாரின் மகளான சம்பங்கி, தையல் தொழிலாளியாக சேர்ந்து தொழில் அதிபராக உயர்கிறார். சாதாரண நிலை மக்களையும் சமத்துவ முற்போக்கு ஜாதி வெறியர்களுக்காக குறிப்பு - இங்கு சாதாரண நிலை என்று நான் குறிப்பிடுவது கேரக்டரின் ஜாதி அல்ல, பொருளாதார நிலை, சாதாரண மக்களையும் திருப்பூர் தொழில் அதிபர் ஆக்கும் திருப்பூரின் சூழல். ஆனால் கோபால கிருஷ்ணன், ஒரு தொழில் ஆரம்பித்து பாருங்கள். தொழில் அதிபர் ஆவது ஏதோ இரண்டு அத்தியாத்தில் நடக்கும் காரியம் அல்ல. ஒரு ஜட்டி தைக்க ஆர்டர் பிடிப்பது கூட பெரும்பாடு. அதன் பின் தொழில் நடத்துவதன் பெரும்பாடுகள். மூலதனம், ஆர்டர் பிடிப்பது, ஆட்களை வேலை வாங்குவது, கேன்ஸல் ஆர்டர் பிரச்சினை, அரசு அதிகாரிகளின் லஞ்ச ஊழல், ஏற்கனவே பரவிவிட்ட போட்டியாளர்கள் ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சினைகள்....ம்ஹூம்...மணல் கடிகைக்கு அதெல்லாம் கண்ணில் படவே இல்லை.

அந்தரங்க வாழ்க்கை என்றால் செக்ஸ் லைஃப் மட்டுமே என்று கோபால கிருஷ்ணனிடம் யாரோ சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது.  இரண்டாவது அத்தியாயத்தில் உமா குளிப்பதை பார்க்கும் சிவாவில் ஆரம்பிப்பது ஒவ்வொரு மாற்று அத்தியாத்திலும் தொடர்கிறது (ஆல்டர்நேடிவ் எபிஸோடுக்கு மாற்று அத்தியாயம் சரியா தமிழா? - கோவி).  யாராவது யாருடனாவது ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தா இந்த எபிசோட்ல யார்னா யார் கூடயாவது ஓடிருவாங்க பாரேன்னு பெட் கட்டினால் ஜெயம் உங்களுக்கே. கோபால கிருஷ்ணன் அய்யா, பெர்ஸனல் லைஃப் என்றால் படுக்கையறை மட்டுமே அல்ல. 

 உமா, விமலா, லிடியா பெகாஸி, அருணா, சித்ரா என்று தொடரும் சிவாவின் செக்ஸ் லைஃப், எந்த இடத்திலும் அதன் உளவியல் ஆழத்தை தொடக்கூட முயற்சிக்கவே இல்லை. சிவாவை எதேச்சையாக சந்திக்கும் அருணா அடுத்த சில அத்தியாத்தில் அவனுடன் உடலுறவு. அதெப்படி செய்யலாம் என்பதல்ல என் கேள்வி. ஆனால் கோபால கிருஷ்ணன் அதன் உளவியல் ஆதாரத்திற்குள் நுழையக் கூட முயற்சிக்கவில்லை. அதே போல ஆர்டர் பிடிக்க போகும் இடத்தில் லிடியா பெகாஸியுடனான சிவாவின் படுக்கையறை நிகழ்வுகள். கடைசியில் இவர்களையெல்லாம் தவிர்த்து விட்டு சித்ராவை திருமணம் செய்யும் சிவா. விமலா, அருணாவையெல்லாம் சிவா வெறும் உடல் பசிக்காக உபயோகித்தான் என்றால் அது வேறு. ஆனால் சிவாவின் கேரக்டர் அப்படியாக இல்லை. சித்ராவை தனது தொழில், இமேஜை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த திருமணம் செய்கிறான் என்றாலும் சிவாவின் மனநிலை பற்றி எந்த ஒரு ஆழத்திற்கும் நாவல் செல்லவில்லை. கடைசியில் சிவாவின் தொழில் முழுவதும் அவன் மனைவி சித்ராவின் கட்டுப்பாட்டில் (ஸோல் ப்ரொப்பரைட்டர்) இருக்கிறது.  (ரொம்ப பழைய படம் தான், ஆனா கடைசியில நம்பியாரும் அசோகனும் சாவணும் இல்லாட்டி திருந்தனும். அப்பிடி இருந்தா தான் அது எம்ஜியார் படம், அதைத் தான் மக்கள் ஏத்துப்பாங்க - கோவிந்தன்).  இந்த இடத்திலும் கூட நாவல் சிவாவின் ஆழ்மன போராட்டங்களுக்குள் கொஞ்சம் கூட செல்லவில்லை. என்ன தான் சாமியாருடன் தொடர்பு, நாட்டு மக்களுக்க்கு இனிமே நல்லது செய்யப் போறேன் என்று ஆரம்பித்தாலும் சிவா போன்ற ஒரு கேரக்டர் தொழில் இழப்பை வெகு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல. 

இன்னொரு காமெடி சண்முகம் கேரக்டர். பேன்ஸி ஸ்டோர் நடத்தும் சண்முகம் ஜாக்கெட்டும் ப்ராவும் கொடுத்தே பெண்களை கவர்வதாக வருகிறது. அய்யா கோபால கிருஷ்ணன், அப்படி இருந்தால் தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு வீடு இருக்காது, ஃபேன்ஸி ஸ்டோர் தான் இருக்கும். எந்த ஆழத்திற்கும் போகாது வெறுமனே பெண்களை படுக்கையறைக்கு கொண்டு வருவதாக சொல்வது மஞ்சள் பத்திரிக்கைகளையே நினைவுபடுத்துகிறது. 

அடுத்த எரிச்சல் உமாவின் கேரக்டர். ஒரு மாநாட்டுக்கு வரும் எம்ஜியாருக்கு மாலை போடும் உமாவின் விரல் மீது எம்ஜியாரின் விரல் உரசுகிறது. அதன் விளைவு, உமாவுக்கு யாருடன் படுத்தாலும் ஒன்று தான், பிரச்சினை இல்லை. எம்ஜியாரின் ஆளுமையும் கவர்ச்சியும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவர் விரல் பட்டுடுச்சி இனிமே எவன் தொட்டாலும் ஒன்னு தான் என்று எல்லாருடனும் படுக்கும் உமாவின் உளவியல். எம்ஜியார் மட்டுமே எனக்கு பிடிக்கும், அவர் தொட்டதுமே எனது பிறவி முழுமை அடைந்து விட்டது என்று இதை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்காக எல்லாருடனும் படுப்பாள் என்பது உளவியல் ரீதியாக இடிக்கவே செய்கிறது. 

திருப்பூரில் தோல்வி அடைந்து ஏஜெண்ட்டாக மும்பை புனேயில் சுற்றி அலையும் அன்பழகன். ஏஜெண்ட்டின் வாழ்க்கை ரூமில் இருப்பது, வாழைப்பழம் சாப்பிடுவது, இடம் தெரியாமல் சுற்றுவது என்பதுடன் முடிந்திருக்கிறது. ஆனால் இது மட்டும் தானா பிரச்சினை?? எங்கோ மொழி தெரியாத பிரதேசத்தில் தெரியாத இடத்தை தேடியலைவதன் பிரச்சினை, ஏதோ ஒரு ஹோட்டலில் இடுக்கு அறையில் தங்கியிருப்பவன் மனநிலை இவ்வளவு எளிதானதா? ஸோ ஸேட். ஸோ ஸேட். அன்பழகன் வராததால் தொந்தரவு தாங்காமல் தற்கொலைக்கு முயற்சித்து அன்பழகனின் நண்பர் குடுமி அண்ணாச்சியால் காப்பாற்றப்பட்டு அவருடன் பந்தத்தில் முடியும் அன்பழகனின் அக்கா. செக்ஸுவல் தொந்தரவு, கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றியவர் என்றாலும் இரண்டே இரவுகளில் ஒரு பெண் ஒரு ஆளின் மார்பில் சாய்வாளா? (மீண்டும் செக்ஸ் புத்தகம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல) குறைந்த பட்சம் அதை அந்த பெண்ணின் மனநிலையில் இருந்து சொல்லப்ப்ட்டிருந்தால் அது வேறு கதை. அப்படி எந்த முயற்சியும் இல்லை.

சிட்பண்ட்ஸ் நடத்தி பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும் திரு பற்றி சொல்ல எதுவும் இல்லை. நல்லவனுக்கு பிரச்சினை வருகிறது என்ற அளவில் தான் இருக்கிறது. அடுத்து பரந்தாமன். இரண்டு திருமணம் செய்து ஒரு மனைவி விலகிப் போகிறாள், இன்னொரு மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். எல்லாம் சரி தான். ஆனால் எந்த கேரக்டரின் ஆழத்திற்குள்ளும் மணல் கடிகை நகரவே இல்லை. 

தொழில் போட்டி, தொழில் துரோகம், நல்லது செய்ய நினைக்கும் ஊருக்கு வெளியில் சாமியார் போல உட்கார்ந்திருக்கும் முன்னாள் தொழில் அதிபர். டிபிக்கல் தமிழ் சினிமா. அல்லது உலக சினிமா.

தொழில் பற்றிய ஆழமும் இல்லை, தனி மனிதர்களின் வாழ்க்கை பற்றிய ஆழமும் இல்லை. ஆனால் நாவலின் முக்கிய ப்ள்ஸ் பாய்ண்ட் தொடர்ந்து வேகமாக படிக்க வைப்பது. வாசிப்பவன் எந்த இடத்திலும் யோசிக்க தேவையில்லாமல் மேலோட்டமாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நீட்டிக் கொண்டே இருக்க விருப்பம் இல்லாததால் இத்துடன் முடிக்கிறேன். 

மணல் கடிகை. மணல் மட்டும்.

Sunday 1 January 2012

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் (அ)கோகிலா எங்கே போகிறாள்? (அ) அய்யாங்....ட்டொய்ங்.. 6

சனிப்பெயர்ச்சி எனக்கு சரியில்லை. இதுக்கு முன்னாடி சரியா இருந்துச்சா என்று கேட்காதீர்கள். அப்பொழுதும் இல்லை இப்பொழுதும் இல்லை. எனக்கு என் ராசியே தெரியாது என்பதால் எந்த ராசிக்கு பெயர்ந்தாலும் எனக்கு சரியில்லை. அது தான் கதை.இப்படி எதையாவது காரணம் வைத்து ஆரம்பித்தால் தான் நானூறு வருடமாக நான் சொல்லிக் கொண்டிருக்கும் என் சொந்த கதை சோகக் கதையை திரும்ப புலம்ப ஆரம்பிக்க முடியும். (ஆஹா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா... - கோவிந்தன்)

அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ ஒரு படத்தில் நடித்தாலே போதும். டேனியல் க்ரெய்க் ஒரு படத்தில் தான் நடித்தார். அதுவும் சாதாரண ஜேம்ஸ்பாண்ட் படம். இப்பொழுது அவரை தெரியாதவர்களே இல்லை. அவருக்கு லண்டனில் நாலு சொந்த வீடும் ப்ரைவேட் ஜெட்டும் இருக்கிறது. ஆனால் விஜய் எத்தனை வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறார்? கனவில் கூட ப்ரைவேட் ஜெட் வாங்க முடியுமா அவரால்? மனோரமா. நம் காலத்தில் ஆயிரத்து ஐநூறு படம் நடித்தவர். இன்றைக்கும் அவரது பெயர் தமிழ்நாடு தாண்டி எங்கும் தெரியவில்லை. இப்படி இருந்தால் தமிழ்நாடு உருப்படுமா ஐயா? தமிழ் கலாச்சாரம் செத்து விட்டது என்று நான் முன்னூறு வருடம் முந்தியே சொல்லி விட்டேன்.( வட போச்சே - கோவிந்தன்) (கலாச்சாரம். ச் வராது - பிரபல தமிழ்பதிவர்)

வீட்டுக்கு வந்தா ஒரு பத்து நாள் இருக்க மாதிரி வாயேன். பண்டாரம் பரதேசி மாதிரி வந்தா ரெண்டு நாள்ல ஓடணுமா என்கிறாள் அம்மா. பிரச்சினை கிட்னி தான். அம்மாவுக்கெல்லாம் பயப்பட நான் ஒண்ணும் அம்மாக்கோண்டு இல்லை. ஆனால் அவள் பார்க்கும் மெகா ஸீரியலை ரெண்டு நிமிடம் பார்த்தாலே என் கிட்னி கிழிந்து விடும் போலிருக்கிறது.
கண்டுக்காத அம்மா, சோறு கிடைத்தாள் போதும் என்று இருக்கும் அப்பா, விதம்விதமாய் கொடுமைப் படுத்தும் அம்மாவின் காதலன், கொஞ்சமும் அன்பே இல்லாத கர்ப்பிணிப் பெண்ணை (யாருக்கு யாரு மேல அன்பில்லை? ஒண்ணுமே புரியலியே - கோவிந்தன்) காட்டில் விட்டு செல்லும் கணவன், சோறு கூட போடாத மாமியார்.இது கோகிலா மெகா ஸீரியல் கதை இல்லை. எக்ஸைலின் முக்கிய பாத்திரமான அஞ்சலியின் கதை. மெகா ஸீரியல் கொடுமை தாங்க முடியாமல் தான் தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்தேன். அதையே நாவல் வடிவில் மீண்டும் படிக்க வேண்டி இருக்கிறது. (எறங்கின பஸ்லயே திரும்பி ஏத்தி விடறாய்ங்களே - கோவிந்தன்)

தீப்பொறி ஆறுமுகம், கலைஞர் கருணாநிதி, மக்கள் நடிகர் ராமராஜன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்,வைகைப்புயல் வடிவேலு, அல்டிமேட் ஸ்டார் அஜீத்.(இதுக்கு பேரு தான் நேம் ட்ராப்பிங் - கோவிந்தன்). பெயருக்கு முன் பட்டம் இல்லாமல் இருப்பது தமிழ்நாட்டில் அண்டர்வேர் போடாமல் லுங்கி கட்டுவது போல. சாருவுக்கு அவரது தற்கொலைப்படையினர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். கலகக்கார ஞானி. புரட்சிக்காரர் என்று கூப்பிட முடியாது. புரட்சி செய்வது எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மிடில்க்ளாஸ் குமாஸ்தா அம்பியான நானே கூட புரட்சி செய்வது எப்படி என்று ரெசிப்பி எழுதியிருக்கிறேன். புத்தகத்தின் பின்னட்டையில் சாரு இலக்கியவாதிகளில் ஒரு கலகக்காரர், கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி என்று பதிப்பாளரே சொல்கிறார். (அவனே சொல்லிட்டானா? - கவுண்டமணி. அண்ணே ஒரு வெளம்பரம் - செந்தில்)

ஆண் பெண் இரண்டாக நீர் சுகித்திருக்கும் படி படைத்தோம். பைபிள். அறுபது வயது எழுத்தாளர் உதயா முப்பது வயது அஞ்சலியை படுக்கையில் கிடத்தி ஆடைகளை களைந்து பிளம்பர் வேலை...கதை ஆரம்பிக்கிறது. (இந்த கலகத்தையெல்லாம் நான் எட்டாங்கிளாஸ்ல தமிழ் புக்குக்கு நடுவுல மறைச்சே படிச்சிட்டனே - கோவிந்தன்)
அதற்கு பின் வெகு நேரம் வருவது அஞ்சலி உதயாவுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் கடிதம். கடிதம் கடிதம். கடி. தம். அப்படி லவ் பண்றேன், இப்படி லவ் பண்றேன். உன் குரல் கேட்டாலே ஆர்கஸம் வந்துடுது. (நான் கூட ஒரு படத்தில நாக்கை அறுத்துக்கிட்டேன் - லிவிங்ஸ்டன்)
ஆனால் அஞ்சலி எழுதும் கடிதத்தில் ஒரு நல்ல விஷயம். பக்கங்களை வேகமாக திருப்பி விடலாம். நானூத்து முப்பது பக்கத்தை பிரபல அறிஞர் ஆவி மதன் ஒரே இரவில் படித்திருக்கிறார். எழுத்தாளர் உதயா முதன்முதலாகஃப்ரஞ்ச்சில் ஒரு கவிதை படைத்திருக்கிறார். எனக்கு ஃப்ரஞ்ச் தெரியாது. (கடவுள் இருக்காண்டா கொமாரு - கோவிந்தன்)

அஞ்சலி உதயாவுக்கும், உதயா அஞ்சலிக்கும் மாறி மாறி மாறி மாறி கதற கதற ..ச்சை. இனிமேல் தினத்தந்தி படிப்பதில்லை. கடிதம் எழுதியது போக வருவது ப்ளாஸ்டிக் க்ளாஸ் 300, ஆடு வெட்டும் கத்தி 1, காய் வெட்டு கத்தி 1, பச்சை மிளகாய்- 2 கிலோ, மிளகு 250 கி, ஓல்டு சிந்தால் சோப் -4, மாங்காய் - 2 கிலோ, பகார்டி -4, ரெமி மார்டின் -2. எட்டு பக்கத்திற்கு பிச்சாவரத்தில் கார்னிவல் கொண்டாட தேவையான குறிப்புகள். நாவல் நானூறு பக்கம் ஐயா. எப்படித் தான் நிரப்புவது.

கலகக்கார ஞானி சாருவின் ப்ளாக்கிலிந்து உதயா நிறைய திருடி இந்த நாவலில் உபயோகித்திருக்கிறார். பல பல ப்ளாகுகள் எழுத்துக்கள் கூட மாறாது இந்த நாவலில் வருகிறது.சாரு அடுத்த முறை உதயாவை பார்க்கும் போது பேசிக் கொள்வார்.

உதயா ஒரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர். உண்மையில் அவன் தான் கலகக்காரன். பதிமூன்று வயது அஞ்சலிக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திவாகர் நாயின் திவாகர் நாய் இல்லாமல் வருவதில்லை திவாகர் நாயின் கையைக் காலை வெட்டிப் போட துடிக்கும் உதயா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் பற்றி பெருமையாக பேசுகிறான். ஐரோப்பாவில் ஓரினச் சேர்க்கைக்கே தடை இருந்த போது டாஞ்சியர்ஸில் ஏகப்பட்ட பையன்கள் ஒவ்வொரு விடுதியிலும் கிடைப்பார்களாம். இவர்கள் எல்லாம் விரும்பியே செய்தார்களா இல்லை செக்ஸ் டார்ச்சர் செய்யப்பட்டார்களா என்பதெல்லாம் உதயாவுக்கு தேவையில்லை. டாஞ்சியர்ஸில் கிடைப்பார்கள், அதனால் அது எழுத்தாளர்களின் புகலிடம். பெரும் கலகம். மாபெரும் புரட்சி. (அவங்களுக்கெல்லாம் பையன்களை புணர்ந்தால் தான் இலக்கியம் வருமா? - கோவிந்தன்)

தினமலருடன் ஒவ்வொரு ஞாயிறும் வாரமலர் என்று புத்தகம் வரும். அதில் வரும் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டும். ஆனால் அத்தனை பரிசுகள் கொடுத்தால் நோபல் கமிட்டி திவாலாகி விடும் என்பதால் கொடுப்பதில்லை. எழுதுபவர்களும் அதைக் கேட்டு உண்ணாவிரதம் இருப்பதில்லை. அது அவர்கள் பிரச்சினை. நமக்கென்ன வந்தது. கதை அதுவல்ல. அதில் திண்ணை என்று ஒரு பகுதி வரும். காந்தி 1942 வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்ற போது அவரது கோவணத்தை தொட்டு பார்த்த வெள்ளையர்கள் இந்திய துணி எத்தனை மென்மையாக இருக்கிறது என்று வியந்தார்கள், அதைக் காப்பி அடித்து தான் மான்செஸ்டரில் ஓரு ஆலையே நிறுவினார்கள். இட்லிக்கு உளுந்து ஊறப்போடும் போது அதனுடன் கொஞ்சம் வெந்தயமும் சேர்த்து ஊற வைத்தால் இட்லி குஷ்புவைப் போல குண்டாக அழகாக வரும். பார்வதி குளிக்கப் போகும் போது தன் அழுக்கை திரட்டி ஒரு பிள்ளையை உருவாக்கி  காவலுக்கு வைத்துப் போனாள். பார்வதியை பார்க்க வந்த சிவனை அந்த பிள்ளை உள்ளே விட மறுக்கவே சிவகணங்கள் தலையை துண்டித்து விட்டனவாம். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி அழுது புலம்பவே சிவனின் கட்டளைப்படி ஒரு யானையின் தலை பிள்ளைக்கு பொறுத்தப்பட்டது. இவர் தான் இன்றைக்கு நாம் கேட்பதெல்லாம் அருளும் பிள்ளையார்.காரைக்குடி முக்குறுணி பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசியில் கொளுக்கட்டை படைத்தால் நாட்டுக்கே அரசரகலாம். இப்படி அரிய பெரிய தகவல்கள் எல்லாம் திண்ணையில் கிடைக்கும். எக்ஸைலிலும் கிடைக்கும்.

நான் இருபத்தைந்து வருடமாக நூறு பேருக்குத் தான் எழுதிக் கொண்டிருந்தேன். தமிழ் சமூகமே என்னைத் துரத்துகிறது. (கணக்கு உதைக்குதே - கோவிந்தன்) தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்று உதயா புலம்பிக் கொண்டே இருக்கிறார். அய்யா, பேரன்பும் கருணையுள்ளமும் உள்ளவரே. எழுதியதையே எழுதினால் எப்படி ஐயா படிப்பார்கள்? எத்தனை முறை தான் படிப்பது? எழுதி முடித்ததும் எழுதியவன் இறந்து விடுகிறான்.பின் நவீனத்துவம். சில எழுத்துகளை படிக்கும் போதே வாசிப்பவனும் செத்தொழிகிறான். வேலாயுதம் படத்தை நூறு முறை பார்த்தவர்கள் கை தூக்குங்கள்.

படம் என்றதும் ஞாபகம் வருகிறது. மொகாபத்தேன் என்று ஒரு படம். எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?. ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய். பெரிய நட்சத்திர பட்டாளம்.  படம் செம மொக்கை. என் வாழ்க்கையில் அப்படி ஒரு அறுவை படத்தை பார்த்ததில்லை. மூன்று மணி நேர படத்தில் நான் நூற்று அறுபது நிமிடம் தியேட்டருக்கு வெளியே பாரில் தான் உட்கார்ந்திருந்தேன். ஆனால் ஒரு நன்மை. அதற்கு பின் நான் எந்த ஹிந்தி படமும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. காசும் மிச்சம். நேரமும் மிச்சம்.

எக்ஸைல் படிக்கும் போது அடிக்கடி தோன்றியது மொகாபத்தேன் தான். எதற்காக வேலை விட்டு நேரம் விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன் என்று என் மீதே கடும் வெறுப்பாக இருக்கிறது. இந்த நேரத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம். எதுவும் உருப்படியாக இல்லாவிட்டால் மெகா ஸீரியலாவது பார்க்கலாம்.
(அது தான் தெரியுதுல்ல வெண்ண. தேகம் படிச்சிட்டே இப்படித் தான் பேயடிச்சவன் மாதிரி பொலம்பிக்கிட்டு இருந்த. பின்ன புடுங்கறதுக்கா இந்த புக்கை வாங்கிப் படிக்கிற. பிக்காலி ஃபெல்லோ - கோவிந்தன்)

கோவிந்தா, நீ சொல்வது சரி. நான் இந்த புத்தகத்தை படித்திருக்கவே வேண்டியதில்லை. ஆனால் உதயாவின் ரசிகர் மன்றமும் தற்கொலைப்படையும் இந்த நூற்றாண்டின் மாபெரும் இலக்கியம் என்ற ரீதியில் இதை கூவிக் கொண்டிருக்கிறார்கள். ( இவர்களெல்லாம் மெகா ஸீரியலோ தமிழ்ப்படமோ பார்க்காதவர்கள் போலிருக்கிறது. கொடுத்து வைத்த புண்ணியவான்கள் - கோவிந்தன்). ப்ளாக், ட்விட்டர், பஸ், ப்ளஸ் போன்ற இடங்களில் உலவிக் கொண்டிருப்பதன் வினை இது. ஒன்று இதையெல்லாம் விட்டு விலக வேண்டும். அப்பொழுது இந்த கூச்சல் எனக்கு தெரியாது போய்விடும். அல்லது எனக்கு தமிழ் எழுதப்படிக்க மறந்து போக வேண்டும். தமிழை மறப்பது கஷ்டம் தான். ஆனால் எக்ஸைல் போன்ற மாபெரும் இலக்கியங்களை படிக்காமல் இருக்க அது தான் வழி என்றால் அதற்குமே நான் சித்தமாக இருக்கிறேன்.

எக்ஸைல் - வாசிப்பவர்கள் போக வேண்டியது.