Sunday, 1 January 2012

சாரு நிவேதிதாவின் எக்ஸைல் (அ)கோகிலா எங்கே போகிறாள்? (அ) அய்யாங்....ட்டொய்ங்.. 6

சனிப்பெயர்ச்சி எனக்கு சரியில்லை. இதுக்கு முன்னாடி சரியா இருந்துச்சா என்று கேட்காதீர்கள். அப்பொழுதும் இல்லை இப்பொழுதும் இல்லை. எனக்கு என் ராசியே தெரியாது என்பதால் எந்த ராசிக்கு பெயர்ந்தாலும் எனக்கு சரியில்லை. அது தான் கதை.இப்படி எதையாவது காரணம் வைத்து ஆரம்பித்தால் தான் நானூறு வருடமாக நான் சொல்லிக் கொண்டிருக்கும் என் சொந்த கதை சோகக் கதையை திரும்ப புலம்ப ஆரம்பிக்க முடியும். (ஆஹா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா ஆரம்பிச்சிட்டாய்ங்கடா... - கோவிந்தன்)

அமெரிக்காவிலோ பிரிட்டனிலோ ஒரு படத்தில் நடித்தாலே போதும். டேனியல் க்ரெய்க் ஒரு படத்தில் தான் நடித்தார். அதுவும் சாதாரண ஜேம்ஸ்பாண்ட் படம். இப்பொழுது அவரை தெரியாதவர்களே இல்லை. அவருக்கு லண்டனில் நாலு சொந்த வீடும் ப்ரைவேட் ஜெட்டும் இருக்கிறது. ஆனால் விஜய் எத்தனை வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறார்? கனவில் கூட ப்ரைவேட் ஜெட் வாங்க முடியுமா அவரால்? மனோரமா. நம் காலத்தில் ஆயிரத்து ஐநூறு படம் நடித்தவர். இன்றைக்கும் அவரது பெயர் தமிழ்நாடு தாண்டி எங்கும் தெரியவில்லை. இப்படி இருந்தால் தமிழ்நாடு உருப்படுமா ஐயா? தமிழ் கலாச்சாரம் செத்து விட்டது என்று நான் முன்னூறு வருடம் முந்தியே சொல்லி விட்டேன்.( வட போச்சே - கோவிந்தன்) (கலாச்சாரம். ச் வராது - பிரபல தமிழ்பதிவர்)

வீட்டுக்கு வந்தா ஒரு பத்து நாள் இருக்க மாதிரி வாயேன். பண்டாரம் பரதேசி மாதிரி வந்தா ரெண்டு நாள்ல ஓடணுமா என்கிறாள் அம்மா. பிரச்சினை கிட்னி தான். அம்மாவுக்கெல்லாம் பயப்பட நான் ஒண்ணும் அம்மாக்கோண்டு இல்லை. ஆனால் அவள் பார்க்கும் மெகா ஸீரியலை ரெண்டு நிமிடம் பார்த்தாலே என் கிட்னி கிழிந்து விடும் போலிருக்கிறது.
கண்டுக்காத அம்மா, சோறு கிடைத்தாள் போதும் என்று இருக்கும் அப்பா, விதம்விதமாய் கொடுமைப் படுத்தும் அம்மாவின் காதலன், கொஞ்சமும் அன்பே இல்லாத கர்ப்பிணிப் பெண்ணை (யாருக்கு யாரு மேல அன்பில்லை? ஒண்ணுமே புரியலியே - கோவிந்தன்) காட்டில் விட்டு செல்லும் கணவன், சோறு கூட போடாத மாமியார்.இது கோகிலா மெகா ஸீரியல் கதை இல்லை. எக்ஸைலின் முக்கிய பாத்திரமான அஞ்சலியின் கதை. மெகா ஸீரியல் கொடுமை தாங்க முடியாமல் தான் தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்தேன். அதையே நாவல் வடிவில் மீண்டும் படிக்க வேண்டி இருக்கிறது. (எறங்கின பஸ்லயே திரும்பி ஏத்தி விடறாய்ங்களே - கோவிந்தன்)

தீப்பொறி ஆறுமுகம், கலைஞர் கருணாநிதி, மக்கள் நடிகர் ராமராஜன், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்,வைகைப்புயல் வடிவேலு, அல்டிமேட் ஸ்டார் அஜீத்.(இதுக்கு பேரு தான் நேம் ட்ராப்பிங் - கோவிந்தன்). பெயருக்கு முன் பட்டம் இல்லாமல் இருப்பது தமிழ்நாட்டில் அண்டர்வேர் போடாமல் லுங்கி கட்டுவது போல. சாருவுக்கு அவரது தற்கொலைப்படையினர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். கலகக்கார ஞானி. புரட்சிக்காரர் என்று கூப்பிட முடியாது. புரட்சி செய்வது எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மிடில்க்ளாஸ் குமாஸ்தா அம்பியான நானே கூட புரட்சி செய்வது எப்படி என்று ரெசிப்பி எழுதியிருக்கிறேன். புத்தகத்தின் பின்னட்டையில் சாரு இலக்கியவாதிகளில் ஒரு கலகக்காரர், கலகக்காரர்களில் ஓர் இலக்கியவாதி என்று பதிப்பாளரே சொல்கிறார். (அவனே சொல்லிட்டானா? - கவுண்டமணி. அண்ணே ஒரு வெளம்பரம் - செந்தில்)

ஆண் பெண் இரண்டாக நீர் சுகித்திருக்கும் படி படைத்தோம். பைபிள். அறுபது வயது எழுத்தாளர் உதயா முப்பது வயது அஞ்சலியை படுக்கையில் கிடத்தி ஆடைகளை களைந்து பிளம்பர் வேலை...கதை ஆரம்பிக்கிறது. (இந்த கலகத்தையெல்லாம் நான் எட்டாங்கிளாஸ்ல தமிழ் புக்குக்கு நடுவுல மறைச்சே படிச்சிட்டனே - கோவிந்தன்)
அதற்கு பின் வெகு நேரம் வருவது அஞ்சலி உதயாவுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதும் கடிதம். கடிதம் கடிதம். கடி. தம். அப்படி லவ் பண்றேன், இப்படி லவ் பண்றேன். உன் குரல் கேட்டாலே ஆர்கஸம் வந்துடுது. (நான் கூட ஒரு படத்தில நாக்கை அறுத்துக்கிட்டேன் - லிவிங்ஸ்டன்)
ஆனால் அஞ்சலி எழுதும் கடிதத்தில் ஒரு நல்ல விஷயம். பக்கங்களை வேகமாக திருப்பி விடலாம். நானூத்து முப்பது பக்கத்தை பிரபல அறிஞர் ஆவி மதன் ஒரே இரவில் படித்திருக்கிறார். எழுத்தாளர் உதயா முதன்முதலாகஃப்ரஞ்ச்சில் ஒரு கவிதை படைத்திருக்கிறார். எனக்கு ஃப்ரஞ்ச் தெரியாது. (கடவுள் இருக்காண்டா கொமாரு - கோவிந்தன்)

அஞ்சலி உதயாவுக்கும், உதயா அஞ்சலிக்கும் மாறி மாறி மாறி மாறி கதற கதற ..ச்சை. இனிமேல் தினத்தந்தி படிப்பதில்லை. கடிதம் எழுதியது போக வருவது ப்ளாஸ்டிக் க்ளாஸ் 300, ஆடு வெட்டும் கத்தி 1, காய் வெட்டு கத்தி 1, பச்சை மிளகாய்- 2 கிலோ, மிளகு 250 கி, ஓல்டு சிந்தால் சோப் -4, மாங்காய் - 2 கிலோ, பகார்டி -4, ரெமி மார்டின் -2. எட்டு பக்கத்திற்கு பிச்சாவரத்தில் கார்னிவல் கொண்டாட தேவையான குறிப்புகள். நாவல் நானூறு பக்கம் ஐயா. எப்படித் தான் நிரப்புவது.

கலகக்கார ஞானி சாருவின் ப்ளாக்கிலிந்து உதயா நிறைய திருடி இந்த நாவலில் உபயோகித்திருக்கிறார். பல பல ப்ளாகுகள் எழுத்துக்கள் கூட மாறாது இந்த நாவலில் வருகிறது.சாரு அடுத்த முறை உதயாவை பார்க்கும் போது பேசிக் கொள்வார்.

உதயா ஒரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர். உண்மையில் அவன் தான் கலகக்காரன். பதிமூன்று வயது அஞ்சலிக்கு செக்ஸ் டார்ச்சர் தரும் திவாகர் நாயின் திவாகர் நாய் இல்லாமல் வருவதில்லை திவாகர் நாயின் கையைக் காலை வெட்டிப் போட துடிக்கும் உதயா மொராக்கோவின் டாஞ்சியர்ஸ் பற்றி பெருமையாக பேசுகிறான். ஐரோப்பாவில் ஓரினச் சேர்க்கைக்கே தடை இருந்த போது டாஞ்சியர்ஸில் ஏகப்பட்ட பையன்கள் ஒவ்வொரு விடுதியிலும் கிடைப்பார்களாம். இவர்கள் எல்லாம் விரும்பியே செய்தார்களா இல்லை செக்ஸ் டார்ச்சர் செய்யப்பட்டார்களா என்பதெல்லாம் உதயாவுக்கு தேவையில்லை. டாஞ்சியர்ஸில் கிடைப்பார்கள், அதனால் அது எழுத்தாளர்களின் புகலிடம். பெரும் கலகம். மாபெரும் புரட்சி. (அவங்களுக்கெல்லாம் பையன்களை புணர்ந்தால் தான் இலக்கியம் வருமா? - கோவிந்தன்)

தினமலருடன் ஒவ்வொரு ஞாயிறும் வாரமலர் என்று புத்தகம் வரும். அதில் வரும் கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டும். ஆனால் அத்தனை பரிசுகள் கொடுத்தால் நோபல் கமிட்டி திவாலாகி விடும் என்பதால் கொடுப்பதில்லை. எழுதுபவர்களும் அதைக் கேட்டு உண்ணாவிரதம் இருப்பதில்லை. அது அவர்கள் பிரச்சினை. நமக்கென்ன வந்தது. கதை அதுவல்ல. அதில் திண்ணை என்று ஒரு பகுதி வரும். காந்தி 1942 வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்ற போது அவரது கோவணத்தை தொட்டு பார்த்த வெள்ளையர்கள் இந்திய துணி எத்தனை மென்மையாக இருக்கிறது என்று வியந்தார்கள், அதைக் காப்பி அடித்து தான் மான்செஸ்டரில் ஓரு ஆலையே நிறுவினார்கள். இட்லிக்கு உளுந்து ஊறப்போடும் போது அதனுடன் கொஞ்சம் வெந்தயமும் சேர்த்து ஊற வைத்தால் இட்லி குஷ்புவைப் போல குண்டாக அழகாக வரும். பார்வதி குளிக்கப் போகும் போது தன் அழுக்கை திரட்டி ஒரு பிள்ளையை உருவாக்கி  காவலுக்கு வைத்துப் போனாள். பார்வதியை பார்க்க வந்த சிவனை அந்த பிள்ளை உள்ளே விட மறுக்கவே சிவகணங்கள் தலையை துண்டித்து விட்டனவாம். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி அழுது புலம்பவே சிவனின் கட்டளைப்படி ஒரு யானையின் தலை பிள்ளைக்கு பொறுத்தப்பட்டது. இவர் தான் இன்றைக்கு நாம் கேட்பதெல்லாம் அருளும் பிள்ளையார்.காரைக்குடி முக்குறுணி பிள்ளையாருக்கு முக்குறுணி அரிசியில் கொளுக்கட்டை படைத்தால் நாட்டுக்கே அரசரகலாம். இப்படி அரிய பெரிய தகவல்கள் எல்லாம் திண்ணையில் கிடைக்கும். எக்ஸைலிலும் கிடைக்கும்.

நான் இருபத்தைந்து வருடமாக நூறு பேருக்குத் தான் எழுதிக் கொண்டிருந்தேன். தமிழ் சமூகமே என்னைத் துரத்துகிறது. (கணக்கு உதைக்குதே - கோவிந்தன்) தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்று உதயா புலம்பிக் கொண்டே இருக்கிறார். அய்யா, பேரன்பும் கருணையுள்ளமும் உள்ளவரே. எழுதியதையே எழுதினால் எப்படி ஐயா படிப்பார்கள்? எத்தனை முறை தான் படிப்பது? எழுதி முடித்ததும் எழுதியவன் இறந்து விடுகிறான்.பின் நவீனத்துவம். சில எழுத்துகளை படிக்கும் போதே வாசிப்பவனும் செத்தொழிகிறான். வேலாயுதம் படத்தை நூறு முறை பார்த்தவர்கள் கை தூக்குங்கள்.

படம் என்றதும் ஞாபகம் வருகிறது. மொகாபத்தேன் என்று ஒரு படம். எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?. ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய். பெரிய நட்சத்திர பட்டாளம்.  படம் செம மொக்கை. என் வாழ்க்கையில் அப்படி ஒரு அறுவை படத்தை பார்த்ததில்லை. மூன்று மணி நேர படத்தில் நான் நூற்று அறுபது நிமிடம் தியேட்டருக்கு வெளியே பாரில் தான் உட்கார்ந்திருந்தேன். ஆனால் ஒரு நன்மை. அதற்கு பின் நான் எந்த ஹிந்தி படமும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே பீதியாக இருக்கிறது. காசும் மிச்சம். நேரமும் மிச்சம்.

எக்ஸைல் படிக்கும் போது அடிக்கடி தோன்றியது மொகாபத்தேன் தான். எதற்காக வேலை விட்டு நேரம் விட்டு படித்துக் கொண்டிருக்கிறேன் என்று என் மீதே கடும் வெறுப்பாக இருக்கிறது. இந்த நேரத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம். எதுவும் உருப்படியாக இல்லாவிட்டால் மெகா ஸீரியலாவது பார்க்கலாம்.
(அது தான் தெரியுதுல்ல வெண்ண. தேகம் படிச்சிட்டே இப்படித் தான் பேயடிச்சவன் மாதிரி பொலம்பிக்கிட்டு இருந்த. பின்ன புடுங்கறதுக்கா இந்த புக்கை வாங்கிப் படிக்கிற. பிக்காலி ஃபெல்லோ - கோவிந்தன்)

கோவிந்தா, நீ சொல்வது சரி. நான் இந்த புத்தகத்தை படித்திருக்கவே வேண்டியதில்லை. ஆனால் உதயாவின் ரசிகர் மன்றமும் தற்கொலைப்படையும் இந்த நூற்றாண்டின் மாபெரும் இலக்கியம் என்ற ரீதியில் இதை கூவிக் கொண்டிருக்கிறார்கள். ( இவர்களெல்லாம் மெகா ஸீரியலோ தமிழ்ப்படமோ பார்க்காதவர்கள் போலிருக்கிறது. கொடுத்து வைத்த புண்ணியவான்கள் - கோவிந்தன்). ப்ளாக், ட்விட்டர், பஸ், ப்ளஸ் போன்ற இடங்களில் உலவிக் கொண்டிருப்பதன் வினை இது. ஒன்று இதையெல்லாம் விட்டு விலக வேண்டும். அப்பொழுது இந்த கூச்சல் எனக்கு தெரியாது போய்விடும். அல்லது எனக்கு தமிழ் எழுதப்படிக்க மறந்து போக வேண்டும். தமிழை மறப்பது கஷ்டம் தான். ஆனால் எக்ஸைல் போன்ற மாபெரும் இலக்கியங்களை படிக்காமல் இருக்க அது தான் வழி என்றால் அதற்குமே நான் சித்தமாக இருக்கிறேன்.

எக்ஸைல் - வாசிப்பவர்கள் போக வேண்டியது.

Thursday, 22 December 2011

பின்னம்

”இப்பிடி ஒண்ணுக்கும் ஏலாம கெடக்கனே ஏ ராசா” பாட்டியின் அலறல் கேட்டுத் தான் கண்விழித்தேனா இல்லை கண்விழித்ததும் கேட்ட முதல் குரலா என்று எனக்கு ஞாபகமில்லை. அன்றைக்கு எழும் போதே வீடு வினோதமாக இருந்தது. “சனியனுங்களுக்கு அவிச்சு கொட்டி முடியலை” திட்டிக் கொண்டே இட்லி சுடும் அம்மா மூலையில் சேரில் உட்கார்ந்திருந்தாள். அப்பாவை வழக்கம் போல காணவில்லை. காலையிலயே கடை திறக்க போயிருக்கலாம். கூடத்தில்  அக்காவின் டிவி அண்ணனின் டேப் ரிக்கார்டர் என்று எந்த சத்தமும் இல்லை. வீடு பேரமைதியாக இருக்க பாட்டியின் குரல் மட்டும் அலறலும் அழுகையுமாக கேட்டுக் கொண்டிருந்தது.
நான் கொஞ்ச நேரம் அம்மாவை பார்த்து விட்டு அவள் எதுவும் சொல்லாமல் போக கண்ணை கசக்கிக் கொண்டேன். வியாழக்கிழமை தான் ஆகிறது. ஸ்கூலுக்கு போகணும். இன்னிக்கு ஸ்கூல் இருக்கா இல்லியா. அம்மா இன்னேரத்துக்கு திட்ட ஆரம்பித்திருப்பாளே. ஒரு வேளை லீவ் எதுவும் விட்டுட்டாங்களா. யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்கா வந்து உலுக்கினாள். எருமை மாடு மணி எட்டாகுது இப்பத் தான் எந்திரிச்சி நெளிஞ்சிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா ஸ்கூலுக்கு நேரமாகுது. நான் அவிழ்ந்து கிடந்த டவுசரை மேல ஏற்றிக் கொண்டு “பாட்டி ஏன் அழறா...இட்லி சுடலியா”
அக்கா தள்ளி விட்டாள். தாத்தாவுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில சேத்துருக்காம். நீ திங்கிறதிலயே இரு. இட்லியும் கிடையாது ஒண்ணும் கிடையாது. போற வழியில சாமியண்ணன் கடைல கொட்டிக்க. இல்லாட்டி ஒரு நாள் பட்டினியா கெட. ஒண்ணும் செத்துட மாட்ட.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல் விளக்காமல் வாய் கசப்பாக இருந்தது. நான் ட்ரவுசரை பிடித்து கொண்டு “தாத்தாவா. அவர் தான் செத்து போயிட்டாரே”
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது. “சனியன் சனியன் இதெல்லாம் எங்கருந்து தான் வந்திச்சுன்னு தெரியலை. காலைல எந்திருச்சதுமே எழவெடுக்குது”. அம்மா எப்பொழுது எழுந்தாள் எப்பொழுது அறைந்தாள் என்று தெரியவில்லை. எனக்கு கன்னம் எரிந்தது. நான் முகத்தைப் பொத்திக் கொண்டு “தாத்தா செத்துப் போயிட்டாருன்னு நீ தான சொன்ன”. அம்மா அடுத்து கை ஒங்குவதற்குள் அக்கா என்னை தள்ளி விட்டு கத்தினாள். “ஆமா எதுக்கெடுத்தாலும் இவனைப் போட்டு அடி. உங்கிட்ட அடி வாங்கி சாகறதுக்கு தான் இவன் பொறந்திருக்கான்”.
ஸ்கூலுக்கு போகும் போது அக்கா தான் சொன்னாள். அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பது பாட்டியின் அண்ணன். எனக்கு தாத்தா முறை. கோலாலம்பூரில் பைக்கில் போகும் போது அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக மெட்ராசுக்கு தந்தி வந்து மெட்ராஸில் இருந்து காலையில் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கிறார்கள். பாட்டி அழ ஆரம்பித்து விட்டாள்.
=====================
அம்மா கதை சொல்லியிருக்கிறாள். அம்மாவின் அப்பாவுக்கு வலது கை சரியாக வராது. நொண்டி என்று சொல்ல முடியாது என்றாலும் நொண்டி என்று தான் சொல்வார்கள். அதை மறைத்து பாட்டிக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். பாட்டியின் அண்ணன் மனைவி மதனிக்கு இது எல்லாம் தெரியும்.  அவள் என் அம்மாவின் அப்பாவுக்கு உறவு முறை. ”எனக்க தங்கச்சிக்கு நொண்டிப்பயலை கட்டி வச்சிட்டியேடி. தாயோளி மவளே. அமுக்குணியாட்டம் இருந்து குடிய கெடுத்துட்டியேடி”. மதனிக்கு அது பொறுக்காது. “எவம்ட்டல ஏறி வர்ற. உம்ம கண்ண பொடனிலயா  வச்சிருந்துச்சி. அவனுக்கு கைய பாக்க துப்பில்ல. எம்மிட்ட ஏறி வர்ற. கெட்டினவன்னா அப்பிடித்தாம். பிரியனுக்கு கை ஒடஞ்சாலும் காலு ஒடஞ்சாலும் இருந்து பார்க்கணும். நாளைக்கு நீரு கை காலு ஒடஞ்சி நொண்டியா கெடந்தாலும் ஒம்ம தங்கச்சி மாதிரி நான் ஆவலாதி சொல்ல மாட்டேன் பாத்துக்கிடும். யோக்கியமான பொட்டச்சின்னா கெட்டினவன பாப்பா. ஒம்ம தங்கச்சி கதை வேற மாதிரில்லா. அதான் ஊரெல்லாம் சீப்பட்டு கெடக்கு கத”.
விடம் கொண்ட பாம்பை போல பாட்டியின் அண்ணாவுக்கு ஏறி விட்டது. “தேவிடியா முண்ட. என்ன சொல்லிட்டடி. ஒன்ன மாதிரி சீப்பட்ட பரம்பரைன்னு நெனைச்சிட்டியா. நொண்டியாம்ல நொண்டி.திருவாந்தரத்து நாயர் வம்சமிடி. இப்ப சொல்லுதேன் கேட்டுக்க. ஒனக்க அண்ணன் மாதிரி நாறப் பொழப்பு நான் பொழைக்க மாட்டேன். எனக்க கை காலு போச்சின்னா நாண்டுக்கிட்டு சாவேன். ஈனப்பொழப்பு எனக்க ரத்தத்தில ஓடல”. எப்படி என்று தெரியவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் மலேஷியா போனவர் அதற்கப்புறம் ஊருக்கு வரவேயில்லை. பிள்ளைகளின் படிப்பு பணம் வரும். ஊரில் திருவிழா காது குத்து கல்யாணம் என்றால் தென்னநேரி கேசவன் நாயர் என்று யாரேனும் மொய் எழுதிப் போவார்கள் ஆனால் ஒரு நாளும் பாட்டியின் மதனி பேருக்கு பணம் வராது.
==================================
அன்றைக்கு ஸ்கூல் முடிந்து வீடு வந்த போது வீட்டில் கும்பலாக இருக்க வாசலில் செபாஸ்டின் நாடாரின் டாக்ஸி நின்றிருந்தது.பாட்டி இன்னமும் அழுது கொண்டிருந்தாலும் வேறு சேலை கட்டியிருந்தாள். அம்மாவும் மாமாவும் ரெடியாக இருக்க அப்பா அதிசயமாக வீட்டில் இருந்தார். தென்னநேரி பாட்டி கூடத்தின் மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். “ஒத்த வார்த்த சொல்லிட்டன்னு ஒரு மனியன் இப்படி போவானா. ஒரு நாளு ரெண்டு நாளு இல்ல முப்பது வருசம் போயிட்டான். புள்ளைங்களுக்கு எழுதுவான் ஒரு நாளும் ஒங்கம்மா எப்பிடி இருக்கான்னு கேட்டதில்லை. மத்தவளுக மாதிரி எனக்கு அண்ணன் தம்பின்னு ஒருவனும் இல்ல நானும் ஒருத்தன்கிட்டயும் ஒத்த வார்த்த பேசினதுல்ல. ஆனாக்கும் எங்க சாமி விடுமா. வருசம் தவறாம பொங்க வக்கிறமே அவ கண்ணு அவிஞ்சா போச்சு. கேப்பாள்ல. அரசன் அன்னு கொல்வான் தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவானுவ. இந்தா கேட்டுட்டாள்ல. ஏ வயித்தெரிச்சல கேட்டுட்டாள. கால ஒடச்சிப்புட்டா. ஒடம்புல ரெத்தம் தெடமா இருக்க வரைக்கும் ஒடலாம். ஒடஞ்சி போனா பொண்டாட்டிக்கிட்ட வர வச்சிடுவாள.”
நான் மெட்ராஸை பார்த்ததே இல்லை. திருச்செந்தூரை விட பெரிய கடல் என்று ராஜாங்கம் சொன்னான். நான் மாமாவின் கையை பிடித்துக் கொண்டு “மாமா மாமா நானும் வர்றேன். எனக்கு ஸ்கூல் டீச்சர் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.”.
============================
வள்ளியூர் திருநெல்வேலி மதுரை திருச்சி. திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் பஸ் நிற்க மாமா என்னை எழுப்பி டீ வேணுமாடா என்று கேட்க நான் தலையை ஆட்டி இல்ல காப்பி என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. நான் கண் விழித்ததும் “இவந்தான் சின்னப்பையன். எட்டு வயசு ஆவுது. சூது வாது ஒண்ணும் தெரியலை.போனா போன எடம் வந்தா வந்தா எடம். ஒரு மாதிரி மந்தமா இருக்கான். திருச்செந்தூருக்கும் பழனிக்கும் மொட்டை போடறதா நேந்துக்கிட்டு இருக்கோம்.”. அம்மா சொல்ல பாட்டி குறுக்கிட்டு “இவனுக்க தெளியறதுன்னா அவனுக்க கொலதெய்வத்த நேந்துக்கிடணும். அதுக்கு  கும்போணம் பக்கமில்லா போவணும்”. அம்மா பதில் சொல்லாமல் பாட்டியை வெறிக்க மெட்ராஸ் மாமா “செரி செரி அப்புறம் பேசிக்கலாம். ஃப்ளைட் வர்ற டைம் ஆச்சு. இப்ப போனா சரியா இருக்கும்”.
===================================
நான் அதற்கு முன் மெட்ராஸ் ஏர்போர்ட் பார்த்ததில்லை. எப்பொழுதாவது வானத்தில் வெள்ளையாக கோடிருக்கும். அதைப் பார்த்து அந்த ஃப்ளைட் தூத்துக்குடிக்கோ மதுரைக்கோ போகிறது என்று பந்தயம் கட்டியதோடு சரி. சாரா எனக்கு முப்பது பைசா தரவேண்டும் என்று ஞாபகம் வந்தது. மெட்ராஸ் ஏர்போர்ட்டில் கடலில் அலையும் காகம் போல ஜனங்கள் இருந்தார்கள். மெட்ராஸ் மாமா என் கையை இறுக்கி பிடித்துக் கொள்ள நாங்கள் வரிசையில் நின்றோம்.
திடீரென்று ஒரு உயர்த்தி பிடிக்கப்பட்ட அட்டையை பார்த்து விட்டு மாமா கையை ஆட்டி கத்தினார். “ராஜேந்திரன். ராஜேந்திரன். ஐயம் ராஜேந்திரன்.”
மாமாவின் கூச்சலில் பயந்து போன நான் அவர் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த பக்கமாக பார்த்தேன். கண்ணாடி பேழையில் உடல் முழுவதும் மூடி ஊதிப் போன முகம் மட்டும் தெரியும் படியாக ஒரு பிணம்.
அப்பொழுது தெரியவில்லை. ஆனால் வெகு நாட்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. ஊருக்கு போக வேண்டியது தெரிந்ததும் தாத்தா விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார் என்பது.
=====================================================