Monday, 8 February 2010

மரங்கொத்தி...! - 2


மரங்கொத்தி...! - 2

முந்திய பாகங்கள்: பாகம் 1
வழக்கமாக நான் குவாட்டருக்கு மேல் குடிப்பதில்லை...ஆனால்....வழக்கமாக நான் சென்னைக்கு ட்ரைனிலும் போவதில்லை...இன்றைக்கு அதிகமாகவே கிட்டத்தட்ட ஒரு ஹாஃப் என்று சொல்லும் அளவுக்கு குடித்திருந்தேன்....போதை பிடிக்கும் என்பதை விட, எனக்கு ரயில் பயணங்கள் பிடிப்பதில்லை...நான் தூங்க வேண்டும்...

"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பீ...இந்த சீட் தான்...."

அவனுக்கு முப்பத்தி ஐந்து வயதிருக்கலாம்...நெடுநெடுவென்று நல்ல உயரம்...அதற்கேற்ற சரியான உடல்வாகு...கோதுமை நிறம் என்று சொல்லும் கறுப்புக்கும் சுண்ணாம்பு வெண்மைக்கும் இடைப்பட்ட நிறம்...குனியும் போது முன் வந்து விழுந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிக் கொண்டான்...மீசை இல்லா முகத்தில் லேசான தாடி...அதிக சதையின்றி டைட்டான கன்னங்கள்...கூர்மையாய் மூக்கு....உதடுகள் மட்டும் கொஞ்சம் கறுப்பாக...சிகரெட்டாயிருக்கலாம்...கைகளில் நான் ரொம்ப காஸ்ட்லியாக்கும் என்று சொல்லும் வாட்ச்....

ஏன் எதற்கு என்ற விளக்கம் அபத்தம் என்றாலும்...எதிரில் வந்து உட்கார்ந்த அவனை எனக்கு பார்த்த நிமிடம் பிடித்துப் போனது...

"ஸாரிங்க...மொதல்ல தப்பான பெட்டியில ஏறிட்டேன்...அதான்...டபுள் செக் பண்ணிக்கிட்டேன்...எழுப்பிட்டேன் போல...தூங்கிட்டு இருந்தீங்களா...."

தியேட்டர்ல பாக்கறவனை "என்ன பாஸ், சினிமாவுக்கா" என்று கேட்பது...கல்யாணத்தில் பார்ப்பவனை "என்னங்க கல்யாணத்துக்கு வந்திருக்கீங்க போல" என்பது....தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி "தூங்கிகிட்டு இருக்கீங்களா..."இவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்றது...எனக்கு சிரிப்பாக இருந்தது...

"இல்ல பாஸ்...பரவால்ல...நானும் இப்பத் தான் ஏறினேன்....."

"நல்லவேளை....நான் கூட தூங்கறவரை எழுப்பிட்டோம்னு நினைச்சிட்டேன்...நீங்க மதுரையா..."

"ஆமா...அண்ணா நகர்...நீங்க..."

"நான்...ம்ம்ம்...வைசாக்...விசாகப்பட்னம்...பொறந்தது திருச்சி பக்கம்...ஆனா அம்மா அப்பா ரொம்ப நாளாவே ஆந்திராவுல செட்டிலாயிட்டாங்க..."

பொதுவாக எனக்கு பேசப் பிடிப்பதில்லை...எங்கேனும் பயணம் செய்தால் எந்த இலக்குமில்லாது சிந்தனையை அலைய விட்டு வெளியே படர்ந்திருக்கும் இருட்டை வெறிப்பது பிடிக்கும்....எல்லாவற்றையும் மறைக்கும் இருள் தான் எத்தனை அழகு....

ஆனால் அவனைப் பார்த்தால் அப்பாவி போல இருந்தான்...கேட்காமலேயே அம்மா அப்பா பூர்வீகம் எல்லாம் வருகிறது...இன்னும் கேட்டால் இவன் கொள்ளுத் தாத்தாவின் சின்ன வீடு எங்கே இருந்தது என்று அட்ரஸ் சொன்னாலும் சொல்வான்...

எனக்கு கொஞ்சமாய் ஆர்வம் ஏற்பட்டது....

"அப்ப உங்களுக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லுங்க...பாக உன்னாரா??"

அவன் பெரிதாய் சிரித்தான்....

"ஹஹ்ஹாஹ்ஹா....உன்னாரு உன்னாரு....எனக்கு மதர் டங் தெலுங்கு தாங்க...ரெட்டியாரு.......ஆனா திருச்சி பக்கம் தான் பூர்வீகம்...உங்களுக்கும் தெலுங்கு தெரியும் போலருக்கே..."

"ச்சேச்சே....அப்படியெல்லாம் இல்ல பாஸ்...சும்மா ஒரு ரெண்டு மூணு தடவை ஆந்திரா போயிருக்கேன்....அதனால கொஞ்சம் வார்த்தை தெரியும்..."

"சும்மா ஆந்திரான்னா எப்படி...எங்க போனீங்க....புட்டபர்த்தி...திருப்பதி...இல்ல பெத்தபுரா...."
அவன் கண்ணடித்தான்...

பெத்தபுரா...அட...ஆளு நம்ம டைப் போலருக்கே...

"ச்சேச்சே...பெத்தபுரால்லாம் இல்ல பாஸ்...கடப்பா...ராஜமுந்திரி...அப்புறம் அனந்தப்பூர்....நான் க்ரானைட் தேடி போனேன்..."

"க்ரானைட்டா....எதுக்கு....நீங்க என்ன பிஸினஸ் பண்றீங்களா இல்ல சும்மா வீடு கட்டவா..."

"பிஸினஸ் தான்...ஒரு பார்ட்டி க்ரானைட் கேட்டது....சரி, குவாரிலயே வாங்குனா கொஞ்சம் மார்ஜின் நிக்குமேன்னு நான் ஆந்திரா பக்கம் போனேன்....எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்..."

அவன் முகம் பிரகாசமானது....

"எனக்கும் பிஸினஸ் தான்...ஃபேமிலி பிஸினஸ்....டயர் ஃபேக்டரி வச்சிருக்கோம்...வைசாக்ல மூணு ஃபேக்டரி இருக்கு....வைசாக் ரப்பர்ஸ்னு பேரு....இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கோம்...பேரு சொல்லலை பாருங்க...எம் பேரு மதிவாணன்...மதிவாணன்.கே"

எனக்கு ஆச்சரியாக இருந்தது...மதிவாணன்...சுத்தமான தமிழ் பேராச்சே...ஆளு தெலுங்குன்னு சொன்னான்....

எனது கார்டை எடுத்து நீட்டினேன்...

"நான் செந்தில் வேல்...இந்தாங்க என்னோட கார்டு...நீங்க தெலுங்குன்னு சொன்னீங்க...ஆனா பேரு சுத்தமான தமிழ்பேரா இருக்கே...."

சிரித்தான்...எனக்கு ஏனோ மாதவன் ஞாபகம் வந்தது....

"அது ஒண்ணுமில்ல...எங்க தாத்தா அந்த காலத்துல தஞ்சாவூர் பக்கம் எம்.எல்.ஏவா இருந்தாரு...ஒங்களுக்குத் தான் தெரியுமே...நைன்டீன் சிக்ஸ்டீஸ்ல தமிழ்ல பேரு வச்சா அரசியலுக்கு யூஸ் ஆகும்னு....அதான்...சுத்தமான தமிழ்ப்பேரு..."

அரசியல் பேச ஆரம்‍பித்தால் பிரச்சினை என்று நினைத்தானோ என்னவோ...

"ஆமா...இப்ப எங்க போறீங்க...மெட்ராஸ்ல என்ன பிஸினஸ்காரியமா..."

"இல்ல பாஸ்...எனக்கு ரெண்டு வாரத்தில கல்யாணம்...அதான் ஃப்ரண்ட்ஸை பார்த்துட்டு இன்விடேஷன் வைக்க போறேன்..."

"அட....வெரிகுட்....ஹாப்பி மேரீட் லைஃப் செந்தில்...எனக்கெல்லாம் இன்விடேஷன் வைக்க மாட்டீங்களா..."

எனக்கு கூச்சமாக இருந்தது....பார்த்து அரைமணி நேரத்தில் எப்படி இவனால் இவ்வளவு நெருக்கமாக முடிகிறது...

"ச்சே...உங்களுக்கு இல்லாமையா...இந்தாங்க...ஆனா கண்டிப்பா வரணும்..."

"வராம? என்னைப் பத்தி ஒங்களுக்கு தெரியாது செந்தில்...ஓசி சாப்பாடுன்னா ஃப்ளைட் பிடிச்சாவது வந்துடுவேன்...."

"ஹிஹி...பறந்தாவது வந்தா சரி....ஆமா உங்க வொய்ஃப் எங்க...வைசாக்ல இருக்காங்களா?"

"ஆமா...ஆனா இப்ப திருச்சில எங்க ரிலேட்டிவ்ஸ் வீட்ல இருக்கா...எனக்கு மீனாட்சி கோயில் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை...என்ன இருந்தாலும் எங்காளுங்க கட்டின கோயிலாச்சே....அவளுக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லை...அதனால மதுரைக்கு அவ வரலை..."

"அப்ப நீங்க மட்டும் தான் மெட்ராஸ் போறீங்களா..."

"இல்ல...அவளும் எம் பொண்ணும் திருச்சில ஜாயின் பண்ணிப்பாங்க...அவங்களுக்குத் தான் இந்த இன்னொரு சீட்...அப்படியே மெட்ராஸ் போய் அங்கருந்து வைசாக் போறதா ப்ளான்...எம் பொண்ணை நீங்க பார்க்கணுமே...நாலு வயசு தான் ஆகுது...செம க்யூட்...செம வாலு...அப்படியே அவங்க அம்மா டைப்...அம்மாவும் பொண்ணும் சேந்துட்டா சமாளிக்க பத்துப் பேர் வேணும்...."

சொல்லும் போதே அவன் கண்களில் சந்தோஷம் தெரிந்தது...ம்ம்ம்...எனக்கும் இப்படி ஒரு க்யூட்டான குட்டிப் பெண்ணும் வாலான மனைவியும் இருந்தா நல்லாத் தான் இருக்கும்.....பார்ப்போம்...

இப்படியே பேசிக் கொண்டு அவன் வாங்கி வந்திருந்த இட்லியை இரண்டு பேரும் ஒரே இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ரயில் மணப்பாறை விராலிமலையை கடந்து திருச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது....

"இன்னும் கொஞ்ச நேரத்தில திருச்சி வந்துரும் செந்தில்...எப்படா அவங்களைப் பார்ப்போம்னு இருக்கு..."

ந‌ல்ல மனைவி குழந்தை போல நல்ல நட்பும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத திசையில் இருந்து தான் வருகிறது...அப்பாவுக்கு கிளியன் அண்ணாச்சி...இன்றிரவு எனக்கு....

நான் அவனை விலக்கி ஜன்னல் வழியாக கண்களை உயர்த்தினேன்...

இருட்டான ஐப்பசி மாத இரவில் பிரம்மாண்டமான நட்சத்திரம் போல விரிந்த திருச்சி நகரத்தை பாண்டியன் எக்ஸ்பிரஸ் வெகுநாளாய் பிரிந்திருந்த காதலன் போல வேகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.....

எனக்கு திடீரென்று மர‌ங்கொத்தி ஞாபகம் வந்தது...இருள் தான் பனைமரம்...ரயில் தான் மரங்கொத்தி...ரயிலின் எஞ்சின் இந்த இருட்டில் என் முகம் போல இருக்குமா....

========== பறக்கும்...=============

பி.கு. I know, this is another long post, and the story has not moved forward that much...But there is a reason for this particular episode. As this has already become a long post, next one will be published tomorrow....

மரங்கொத்தி...! -1

மரங்கொத்தி...! -1

இன்றோடு எத்தனையாவது நாளென்று தெரியவில்லை...ஆனால் நேற்றும் நேற்றிய முந்திய நாளும் இதே மரத்தின் இதே இடத்தை கொத்திக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது...அவ்வப்பொழுது இரை தேடி விட்டு பிறகு மீண்டும் இந்த நெடிது நின்ற பனை மரத்தின் இந்த இடத்தை கொத்திக் கொண்டிருப்பதே வேலையாக இருக்கிறது...ஏனோ தெரியவில்லை...சுத்தி நிற்கும் மரங்களை அலட்சியப்படுத்தி, இந்த மரமே குறியாக...

என் மூக்கு நீண்டு மேல் உதடு தாண்டி கீழ் உதடுடன் இணைந்து கூரிய அலகாக மாறி விட்டிருக்கிறது...நீளமான கைகள் குறுகி ஆங்காங்கே எலும்பு புடைத்து அதில் மயிர் முளைத்து முதுகின் இரு புறமும் சிறகுகள் நீண்டிருக்கிறது...கால்களின் பாதம் குறுகி நகம் நீண்டு பறவைக் கால்களாக, நான் அடிக்கடி அணியும் நீலப் பூக்கள் வரைந்த வெள்ளைசட்டை என் உடல் முழுதும் பரவி சிறு மயிர்களாக.....நான் என்பதன் அடையாளமாக முகம் மட்டும்....
இல்லையே...நான் மரங்கொத்தி இல்லை...எப்படி ஆனது இப்படி...

"தூத்துக்குடி அண்ணாச்சி வந்திருக்காவ...கீழ வர்றியா தம்பி...."
எங்கோ தூரத்தில் அசரீரி போல அம்மாவின் குரல் கேட்டதும் காட்சிகள் சட்டென்று கலைந்து விட்டது....ச்சே...கனவு....

ஆழ்மன ஆசைகளும், நிறைவேறாத எண்ணங்களும், பயங்களும் தான் கனவுகளாக வருகிறது...ஸிக்மன்ட் ஃப்ராய்டோ இல்லை வேறு யாரோ சொன்னது நினைவில் வந்து போனது...அதிகாலை கனவு பலிக்குமாமே...லேசாக சிரிப்பு வந்தது...பலித்தால் நன்றாகத் தான் இருக்கும்...ஆனால் கொஞ்சம் பெரிய சிறகுகள் வேண்டும்...

===============================

டிசம்பர் மாத அதிகாலையில் தண்ணீர் சிலீரென்றது...அவசரமாக முகம் கழுவி பல் துலக்கும் போது முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன்...மூக்கு கொஞ்சம் நீளம் தான் அப்பாவைப் போல‌...ஆனால் மரங்கொத்தி என்று சொல்ல முடியாது...ச்சே...என்ன இது...

கீழே வந்த போது கிளியன் அண்ணாச்சி ஒரு சொம்பிலிருந்து ஆறிப் போன கருப்பட்டி காப்பியை கிளாஸில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தார்...தூத்துக்குடி அண்ணாச்சி...ஒரு வகையில் தூரத்து சொந்தம்...அப்பாவுக்கு நெருங்கிய நட்பு....பெயரென்னவோ தங்கவேலன் என்றிருந்தாலும் கிளியன் அண்ணாச்சி என்று சொன்னால் தான் ஊரில் யாருக்குமே தெரிகிறது...நாலாப்பு படிக்கும் போது திட்டிய வாத்தியாரை சட்டையை பிடித்து தள்ளி விட சட்டை கிழிந்து இவர் கையோடு வந்து விட்டதாம்...கிழியன்....நாங்குனேரி மக்கள் வாயில் பட்டு கிளியன்...

"வாங்க மாமா...ரொம்ப நாளா ஆளக் காணோம்...எங்கயும் புதுசா வீடு பாத்திட்டீங்களா...."

"பிள்ளைக்கு அதே கேலிப்பேச்சு தான்....எய்யா....பாத்து நாளாச்சில்லா..அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலம்னு வந்தன்..."
கிளியன் எழுந்து வந்து என் இரு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார்...

"நீங்க எங்கயோ பாம்பே போனதா சொன்னாங்க...அதான் பம்பாயில வீடு சேத்துட்டீங்களான்னு நினைச்சேன்...எப்படியாவது ஒரு தடவை தூத்துக்குடி வந்து பாக்கலாம்னு நினைக்கிறேன்...இங்க வேலையை விட்டுட்டு வரமுடியல....அத்தை எதும் தப்பா எடுத்துக்க வேணாம்......வீட்ல அத்தை எல்லாம் நல்லா தான இருக்காங்க...அந்த கால் வலி இப்ப எப்படி இருக்கு..."

"எல்லாம் இருக்கா....சாள மீனு வாங்கினா ஏன் உழுவை மீனு வாங்கியாரலன்னு...நாட்டு வாய அடைச்சாலும் நாங்குனேரிகாரிய வாய அடைக்க முடியுமா...அதான் பம்பாயிக்கு ஓடிப் போறதுண்டு...."

"அதுஞ்சரி தான்....பம்பாயில மீனு பிடிச்சீங்களாக்கும்...."

அண்ணாச்சி கையிலிருந்த காப்பியை ஒரே மடக்காக குடித்து விட்டு சர்ச்சு பாதிரியாரின் முன் பாவ மன்னிப்பு கேட்பவர் போல தலையை குனிந்து கொண்டார்....

"அது உள்ளதும்...சேட்டு மீனு....கால்ல கல்லை கட்டினதும் சிக்குன பெருச்சாளி மாதிரில்லா கத்தறான்...எள‌வு இந்த சோலி பாக்கதும் ஒளப்பலாத் தான் உண்டு....இந்தாட்டம் ஊருல பத்து குறுணியாட்டும் வாங்காட்டி ஒம்ம மவள எவன் கட்டுவான்னுட்டு ஒங்க அத்தைக்காரி பாடு முடியல போ...அதுக்காட்டியுமில்ல இந்த மீனு பிடிக்குத சோலி...என்னைக்கு எவன் நம்ம கால்ல கல்ல கட்டுவானிட்டு ஒரு பக்கமா வருது தான்...உப்புத் தோசைக்காவது வழி செய்யணுமில்லா....இந்தா ஒனக்கு கல்யாணம் வச்சிருக்கு...ஒங்கய்யன் எனக்கு செஞ்சதுக்கும் ஒங்கம்ம போட்ட சோத்துக்கும் நான் திருப்பி செய்யணுமில்லா...ஒத்த புள்ள நீ...அதுக்கும் வக்கில்லாம என்ன மசுத்துக்கு நான் மாமனாக்கும்..."

அண்ணாச்சி தலையை குனிந்து கொள்ள வேண்டியது தான்...சோலி அப்படி...பச்சையாக சொல்ல வேண்டுமானால் அண்ணாச்சி ஒரு அடியாள்...காசு கொடுத்து காலை எடுத்துரு என்றால் முடித்து விடுவார்....சில நேரங்களில் கொலை மிரட்டலும் விடுப்பதுண்டு...துணிச்சலாக பார்ட்டியாக இருந்தால் ஆளைத் தூக்கிக் கொண்டு போய் காலில் கல்லைக் கட்டி நடுக்கடலில் இறக்குவதும் உண்டு....வெறும மிரட்டிறது உண்டு, கொலை செஞ்சதில்ல என்று அண்ணாச்சி சொல்வதை எந்தளவு நம்புவது என்று எனக்குத் தெரியவில்லை...முழு போதையில் ஏதேனும் உளறினால் தான் உண்டு....

"நல்லா செஞ்சீங்க போங்க...அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...ஆனா பார்த்து இருங்க...இப்ப போலீஸ் கெடுபிடியெல்லாம் ஜாஸ்தியா இருக்கு...எங்கனா குடிச்சிட்டு ஒளறி வைக்காதீங்க..."

அண்ணாச்சி சிரித்தார்...

"அதெல்லாம் இருப்பம்....அதக் கொண்டில்லா இங்கன எங்கியும் மீனு பிடிக்கிறதில்ல... ஒனக்க கல்யாணத்துக்கு செய்யணும்...அத நான் ஒங்கம்மைக்கிட்ட கேட்டுக்கிடுதேன்...பொண்ணு எந்த ஊரு...நம்மூர்க்காரியாக்கும்...."

"பொண்ணு கோயம்புத்தூரு...அம்மா போயி அத்தைக்கிட்ட பத்திரிக்கை வச்சாங்களே..."

"அதை கொண்டில்லா நான் இங்க வந்துருக்கன்....கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிக்கணுமுல்லா...."

"நீங்க இருந்து சாப்பிட்டு போங்க மாமா...எனக்கு வெளிய வேலை கெடக்கு...சாயந்தரம் மெட்ராஸு வேற போவணும்..."

"சாப்பாடு கெடக்கட்டு... பிள்ள பாத்து போயிட்டு வரணும்...இங்க அம்ம கெடக்கா...ஒன்னிய விட்ட அவளுக்கும் நாதியில்ல...பாத்துக்கிடு.. "

"சரிங்க மாமா...நான் வர்றேன்..."

சாப்பாடு கெடக்கட்டு என்று அவர் அலட்சியமாக சொன்னாலும் குறைந்த பட்சம் இருபது இட்லியும் எட்டு தோசையும் அரைச் சட்டி கருப்பட்டி காப்பியும் குடிக்காமல் அவரது காலை நேரம் ஆரம்பமாகாது என்று எனக்குத் தெரியும்....

===========================

கோரிப்பாளையத்தில் முருகேசனை பார்த்து மாதாமாதம் ரெண்டாயிரம் கிலோ வெள்ளாட்டுக் கறி...ஒரு வேலை முடிந்தது....அடுத்து மதுரா ஹோட்டலில் தஞ்சாவூர் ஏஜென்ட்...சொன்ன டிஸைன்படி சிவன் பார்வதி அம்மையுடன் ஆடும் சிலை...கொஞ்சம் லேட்டாகும்...எப்படியும் இந்த மாதக் கடைசியில் கப்பலேற்றி விடலாம்... தலையில் கங்கையுடன் கால் தூக்கி ஆடும் சிவன் எட்டடி....பக்கத்தில் அம்மை ஆறடி...அமெரிக்கா போகிறது....வண்டிப்பாளையம் போய் வாரம் ஆறு டன் தக்காளியும் மூணு டன் பச்சை மிளகாயும் ஏற்பாடு செய்ய வேண்டும்...இது மலேசியாவுக்கு.....கொரியாவிலிருந்து ஈரோட்டு மஞ்சள் கேட்கிறார்கள்...ஆனால் ஈரோட்டுக்காரர்கள் சொல்லும் விலைக்கு மார்ஜின் நிற்காது போலிருக்கிறது...

எனக்கு எக்ஸ்போர்ட் பிஸினஸ்...இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் உலக நாடுகளெங்கும் என்று சொல்லிக் கொள்ள ஆசை இருந்தாலும் இப்போதைக்கு அதிகம் சிங்கப்பூரும் மலேஷியாவும் தான்....பச்சை மிளகாய், சின்ன வெங்காயம்,அரைக் கீரை, புளிச்சக் கீரை, சேப்பங்கிழங்கு, தக்காளி, முருங்கைக் காய், வெள்ளாட்டுக் கறி, சில சமயம் சாமி சிலை என்று தான் எக்ஸ்போர்ட் போய்க் கொண்டிருக்கிறது....ஏதேனும் டெக்ஸ்டைல், க்ரானைட் என்று ஆர்டர் கிடைத்தால் நானும் ஃப்ரான்ஸ், லண்டன், ஜெர்மனி, அமெரிக்கா என்று பறக்கலாம்...ஆனால் ஏற்கனவே இருப்பவர்களை தாண்டி உள்ளே புகுவது....ம்ம்ம்ம்...மீனாட்சி கண் தொறந்தால் உண்டு....

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு நான் ரயில்வே ஸ்டேஷன் போய்....மதுரை ட்டூ சென்னை...பாண்டியன் எக்ஸ்பிரஸ்...ப்ளாட்ஃபார்ம் சிக்ஸ்...அறிவிப்பு கேட்டு..."கும்பலு அள்ளுது மச்சான்...இன்னிக்கு ஆம்னி பஸ்க்காரய்ங்களுக்கெல்லாம் கொள்ளை தான்...அங்க பல்லாவரத்துல நம்ம செந்தில் இருக்கான் மாப்ள...அவன்கிட்ட் நீ வர்றேன்ன்னு சொல்லிருக்கேன்...எக்மோருக்கு வர்றேன்னு சொல்லிருக்கான்..பாத்து பேசிக்க...ஏழாவது மாசம் இங்க வந்திருடி...புள்ள பொறந்தா அது வாடிப்பட்டில தான் பொறக்கணும்...." காது உரசிய குரல்களை கடந்து, முன் பதிவு செய்த என் சீட்டை அடைந்த போது மதுரை டிசம்பரின் மெல்லிய குளிரில் வியர்த்திருந்தது.....

பர்ஸ்ட் க்ளாஸ் ஏ.ஸி.....ஏற்கனவே அடித்திருந்த ஓல்டு மங்க் ரம்மும் சேர்ந்து...சரி, இன்னிக்கி நல்லாத் தூங்கலாம்.... நான் கையோடு கொண்டு போயிருந்த பெரிய டவலை போர்த்திக் கொண்டு தூங்க தயாரான போது...

"ஃபைவ் ஏ அன்ட்....ஃபைவ் பி....இந்த சீட் தான்...."

அவன் எனக்கு எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்தான்....
===========================
(பி.கு. இதன் முழுக் கதை ஏற்கனவே எழுதி விட்டேன்...ஆனால் வெகு நீளமாக இருப்பதால், பல பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது...அடுத்த பாகம் நாளை வெளியாகும்...முக்கியமான டிஸ்கி...நான் அவனில்லை!)