Thank you Adhimoola Krishnan and Ramalakshmi. I'll try to post a reply as soon as time permits, may be in a day or two. Sorry for the delay...
Now over to Adhimoola Krishnan and Ramalakshmi.
==========================
ஆதிமூலகிருஷ்ணன் has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....":
இந்தப்பதிவுக்கு பின்னூட்டமோ, உங்களுக்கு பதில் சொல்வதிலோ எனக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லை. இருப்பினும் நான் மிக மதிக்கும் பதிவர்கள் சிலரின் மதிப்பை நீங்கள் பெற்றிருப்பது இங்கிருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிகிறது. மகிழ்ச்சி. அவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் என் கருத்தை தெரியப்படுத்த விரும்பி இந்தப் பின்னூட்டம்.
'அழுக்கின் அழகு' சிறுகதை ஒரு ஃபார்மெட்டுக்குள் எழுதப்பட்ட கதை. மேலும் அந்தக்கதையின் முடிவில் பின்குறிப்பாக..
//அதுகுறித்து எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமலே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸாஃப்ட்வேர் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ, சித்தாள் பெண்களனைவரும் சரியானவர்களென்றோ இந்தக்கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அது போன்ற எண்ணம் நமக்கும் இல்லையென்பதையும் இங்கே பதிகிறேன்.//
என்ற என் கருத்தையும் தந்துள்ளேன். எல்லா படைப்புகளுமே படைப்பாளியின் முழு தத்துவார்த்தத்துடன் மலர்ந்துவிடுவதில்லைதான். எழுத்துக்களும் பல சமயங்களில் அரசியல் சாயம் பூசிக்கொண்டுதான் எழுதப்படுகின்றன. அதையும் மீறி அறிவுஜீவிகளாக தன்னை நினைத்துக்கொண்டிருப்பவர்கள் இந்தக்கதையை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடும்தான். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ள பத்தியில் எவற்றின் தொடர்ச்சியாக என்னை கலாச்சார காவலன் என்று சித்தரித்திருக்கிறீர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
//பெரும்பாலான பதிவுகள் கலாச்சார காவலர்களின் மறு பிரதியாகவே இருக்கின்றன....காந்தி புனிதமானவர், யாமறிந்த மொழிகளில் தமிழ் தான் இனிமை, குடிப்பழக்கம் சமுதாயத்தின் மிகப் பெரிய தீமை, தாய்மை வணங்கப்பட வேண்டியது, பெண்கள் மூடிக் கொண்டிருந்தால் தான் அழகு இல்லாவிட்டால் அசிங்கம் இப்படி நிறைய....சுட்டி வேண்டுமென்றால் பதிவர் ஆதிமூல கிருஷ்ணனின் அழுக்கின் அழகு..//
இது உங்கள் கூற்று. இதன் ஒரு வரியை உங்களுக்கு எதிராக திருப்பினால் எவ்வளவு அநாகரீகமாக மாறிவிடும்.? எவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் என்ற பொறுப்பில்லாத உங்களை என்ன சொல்வது நான்? அதையும் தவிர்த்து பெண்கள் உடைகளை திருத்தமாக அணிவது என்ற கருத்தை நான் சொல்லவந்ததாகவும், அது கலாச்சார காவலர்த்தனம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட மேற்கூறிய பிற குற்றச்சாட்டுகளுக்கு என் பதிவுகளிலிருந்து எடுத்துக்காட்டு தரமுடியுமா? அல்லது பெண்கள் விஷயம் மட்டும்தான் என்னுடையது, பிற பிறரைப்பற்றியது எனில் அவற்றின் இணைப்புகளையும் தரவேண்டியதுதானே?
மாற்றுக்கருத்தும், பிடிக்காதவற்றைச் சொல்வதும் இயல்பானது என்றே நான் எண்ணுகிறேன். அதற்கு அனைவருக்கும் உரிமையிருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதில் ஒரு கண்ணியம் இருக்கவேண்டும். சரியான வாதம் இருக்கவேண்டும். சாட்டப்பட்டவர் வெட்கி ஒத்துக்கொள்வதாக இருக்கவேண்டும்.
மாறாக என் குறித்தும், நண்பர் பரிசல் குறித்தும் நீங்கள் சொல்வதைப்போல இருக்கலாகாது என நான் நினைக்கிறேன்.
பரிசல்காரன் மிகக்குறுகிய காலத்தில் 500க்கும் அதிகமான ஃபாலோயர்களையும், 3 லட்சத்தைத் தாண்டிய ஹிட்ஸையும் பெற்ற புகழ்மிக்கவர். இது அவரது எழுத்தால் எத்தனை பேரை கவர்ந்திருக்கிறார் என்பதைக்குறிக்கிறது. அத்தனை பேரைக்கவர்ந்த எழுத்து உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அதை இப்படித்தான் பதிவு செய்வதா.? நீங்கள் எழுதிய வரிகளில் கண்ணியமோ, குறைந்த பட்ச நியாயமோ இருப்பதாகப் படுகிறதா உங்களுக்கு.?
இதே கருத்துக்களை வேறு மாதிரியும் என்னால் கேட்டிருக்கமுடியும். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடும். தொடர்ந்து இதுபோல எழுதுங்கள், உங்கள் தைரியம் பாராட்டப்படலாம்.
வாழ்த்துகள்.!
(இவ்வளவு புரிதல், ரசனை உள்ள நீங்கள் கொஞ்சம் இந்தத்தொடரின் நோக்கத்தையும் புரிந்துகொண்டிருக்கலாம். இது அழுத்தமாக ஒற்றைப்பெயரை மட்டும் குறிப்பிட்டு அதன் நீட்சியை ஒரு கவிதைபோல சிந்தித்து மகிழ உருவாக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல்களையும், தொகுதிகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கங்களையும் நீட்டி எழுதி மேதாவிலாசத்தை பறைசாற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டதல்ல. பிடிக்காதவர் இடத்தில் எனது அல்லது பரிசல்காரன் பெயரை மட்டும் குறிப்பிட்டிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் எண்ணிப்பாருங்கள். உங்கள் மீதான மரியாதையுடன் சேர்ந்து ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்திருக்காது? அதுசரி.. உங்கள் மீது தவறில்லை, அந்த நோக்கம் ஏற்கனவே சிதறடிக்கப்பட்டுவிட்டது.)
=========================
ராமலக்ஷ்மி has left a new comment on the post "எவர்சில்வர் தட்டும் பிடிக்காத பத்தும்....":
அன்புள்ள அதுசரி,
எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுத முடியாதுதான். இங்கே நீங்கள் கூறியிருப்பது ஏற்கனவே என் சுதந்திரதினப் பதிவில் நீங்கள் முன் வைத்த் கருத்துதான். அதை பிரசுரிக்கவும் செய்துள்ளேன். என்னை பெரிய கவிஞர் என நான் சொல்லிக் கொள்ளவில்லை. எனது பதிவொன்றிலேயே ‘நான் எழுதுபவையும் கவிதைகள்தானா’ எனத் திகைத்து நின்ற போது ‘அப்படியெல்லாம் யோசித்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவே முடியாது’ என நண்பர்கள் தந்த ஊக்கத்தில்தான் தொடர்ந்து எழுதினேன் என்றே குறிப்பிட்டிருப்பேன். உங்கள் போன்ற சிலருக்கு என் படைப்புகள் அத்தனை கஷடத்தைக் கொடுத்திருப்பதற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதையெண்ணி என் எழுத்துக்கு எந்த வேகத் தடையும் விதித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
பிரபலங்களோடு சேர்த்து பேசியிருப்பதாகப் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். அதேபோல் ஒரு பேச்சுக்கு சொல்ல வேண்டுமெனில் நானும் ஒரு பிரபலத்தை உதாரணப் படுத்துகிறேன். எனிட் ப்ளைட்டனை ஆரம்ப காலத்தில் பிபிசி குழந்தைகளுக்கு எழுதும் இவரைப் பேட்டி காண்பதா என ஒதுக்கியதைப் பற்றி ஒரு செய்தியை சமீபத்திய டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் படித்தேன். அதற்காக அவர் எழுதுவதை நிறுத்தி விடாமல் தன் பாணியிலேயே தொடர்ந்து, வெற்றியும் கண்டார். வலைப்பூவின் கட்டற்ற சுதந்திரம் எப்படி விரும்பியதைப் பதிய வழிவகுத்திருக்கிறதோ அதே போல விரும்புவதைச் சுட்டி வாசிக்கவும் சவுகரியம் தந்துள்ளது. விருப்பமற்ற பின் உங்களை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்திக் கொள்ள வேண்டாமென அக்கறையின்பால் கேட்டுக் கொள்கிறேன்.
விமர்சனங்கள் என்றைக்கும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் இது போன்ற விமர்சனங்களா என்று என்வரையில் எனக்குத் தெரியவில்லை. எனது சில கவிதைகளை [அப்படி நான் கூறிக் கொள்பவற்றை] ‘இணையத்திலிருந்து’ என்ற குறிப்புடன் செய்தித்தாள்கள் சிலவற்றின் வாரமலர்களில் அவர்களாகவே எடுத்து வெளியிடுகிறார்கள். இணைய இதழ்களும், பத்திரிகைகளும் என் படைப்புகளை அங்கீகரித்தே வருகின்றன. (இதை அச்சீவ்மெண்ட் என்றும் சொல்ல வரவில்லை). எளிமைக்காகவே என் எழுத்துக்களை விரும்புபவரும் உள்ளார்கள். உங்களுக்குப் பிடிக்காததால் எல்லோருக்கும் பிடிககாதென அர்த்தமில்லை என நீங்களே சொன்னபடி, பிடித்த அந்த வெகு வெகு சிலருக்காக மட்டும் தொடர்கிறேன். என்றைக்கேனும் என் படைப்புகளில் சில பள்ளிப்பாடத் திட்டத்தில் வருமேயானால் அதற்காக நான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையுமே கொள்வேன்:)!
மிக்க நன்றி.
அன்புடன்
ராமலக்ஷ்மி


