Monday 7 September 2009

நவீன விக்ரமாதித்தன் கதைகள் - காதல் சொல்லி வந்தாய்- 3

அறிவிப்பு: இந்த கதையில் வரும் பெயர்கள்,சம்பவங்கள், பாத்திரங்கள்,அண்டா, குண்டா, சட்டி, பானை, ஊர், தெரு, கடை,இட்டிலி, சட்டினி, வடை, பொங்கல் எல்லாம் கற்பனையே...கண்டிப்பாக இருந்த, இருக்கின்ற, இனிமேல் இருக்கப் போகின்ற எவரையும் குறிப்பன அல்ல...அப்படி ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது வேதாளத்தின் பிழையே தவிர பதிவர் பொறுப்பல்ல!


அத்தியாயம் மூன்று - சூதாட்டம்


முந்திய அத்தியாயங்களை படிக்க அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு

ரசம் நல்லாருக்கு....மோர்ல கொஞ்சம் உப்பு பத்தலை...கங்குலி ரொம்ப நாளா ஆளையே காணோமே...காலையில தினமலர்ல என்னவோ போட்ருந்தான்...லெமூரியாக் கண்டம் நிஜமாவே கடல்ல மூழ்கிச்சா இல்ல கப்சா உட்றாய்ங்களா...க்யூபால பொண்ணுங்கள்லாம் ரொம்ப அழகாமே...ஆமா...ஃபிடல் காஸ்ட்ரோ இருக்காரா செத்துட்டாரா...சத்தமே இல்ல...
வேகமானது எது...கண்டம் விட்டு கண்டம் பாயும் கணையா..காற்றா...ஒலியா ஒளியா....எதுவுமே இல்லை...மனம் தான்...ரசத்தில் ஆரம்பித்து....லெமூரியாக் கண்டத்தில் மூழ்கி...க்யூபாவுக்கு தாவி... உடல் இடம் விட்டு அசையாது இருந்தாலும் மனம் இடைவிடாது அலைபாய்ந்து கொண்டே தானிருக்கிறது....மனஸ் தான் மனுஷ்யன்...சிவம் சிவனே என்று இருந்தாலும் சக்தியின் நர்த்தனம் இடைவிடாது நடந்து கொண்டே....

அந்த மனமும் ஒரு சில கண‌ங்கள் ஒடுங்கும்...வேகமாக பைக்கில் செல்லும் போது திருப்பத்தில் எதிர்பாராமல் ஒரு பஸ் வந்தால்....நன்றாக சாப்பிட்டு விட்டு கைக் கழுவ எழும்போது நொடிப் பொழுதில் மாரடைப்பு வந்தால்....எனக்கு ஓன்னும் தெரியாதுப்பா என்பது போல எதுவுமே செய்யத் தோன்றாது மானஸ தேவி கைகட்டி வேடிக்கை பார்க்கிறாள்...

"எங்க அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கார் சிவா...நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்..."

கல்பனா சொல்ல சொல்ல சிவராமனின் மனம் எதுவுமே சொல்லத் தெரியாமல்...வார்த்தைகள் தொலைந்து...

"சிவா...சிவா...நான் பேசறது கேக்குதா...."

சிவராமனின் மனம் மீண்டும் விழித்துக் கொண்டது....என்ன சொல்வது...இதை எதிர்பார்க்கவே இல்லை...இத்தனை நாள் எந்த எதிர்ப்பும் இல்லாமல்..இப்ப திடீர்னு என்ன...ஒரு வேளை...கல்பா விளையாடுகிறாளா...

"என்ன கல்பா இது...திடீர்னு....சும்மா விளையாடுறியா..."

அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை....

"இல்ல சிவா...சீரியஸா தான் சொல்றேன்...உன் கிட்ட பேசணும்...ப்ளீஸ் வாயேன்..."

"நீ எதுக்கு ஒத்துக்கிட்ட...போன தடவை பேசும் போது கூட உங்கப்பா எதுவுமே சொல்லலியே..."

பேச பேச சிவராமனின் குரலில் சூடு ஏறியது....

"என்ன சிவா...நீயும் திட்டற....என் கிட்ட சொல்லவேயில்ல...இப்ப தான் சொன்னாங்க...."

ச்சே...அவங்க அப்பா செஞ்சதுக்கு கல்பாக்கிட்ட சண்டை போட்டு என்ன பிரயோஜனம்..சிவராமனுக்கு திடீரென்று வருத்தமாக இருந்தது....

"சரிடா....சும்மா பொண்ணு பார்க்க தான வர்றாங்க....அதுக்கு ஏன் கவலைப்பட்ற...பிடிக்கலைன்னு சொல்லிட்டா முடிஞ்சது..."

"இல்ல சிவா...எனக்கு பிடிக்கலை....நீ வாயேன்..."

கல்பாவின் குரல் அழுவது போல் மாறிக் கொண்டிருந்தது...

"சரி சரி...இப்ப அம்மா மட்டும் தான் இருக்காங்க....மாலு கம்ப்யூட்டர் க்ளாஸ் போயிருக்கா....அரை மணில வந்துருவா....அவ வந்ததும் நான் வர்றேன்...அன்னபூர்ணா வந்துட்டு ஃபோன் பண்ணவா...."

"சரி...எட்டு மணிக்கு வந்துடுவியா...."

"வரேன் கல்பா...நீ சும்மா கவலைப்பட்டுக்கிட்டு இருக்காத....எல்லாம் பார்த்துக்கலாம்..."
ஒக்கே சிவா...பை..."

"பை..."

சொல்லிவிட்டானே தவிர, சிவராமனின் மனம் அடங்காமல் ஆடியது...கல்பா என்பது தீர்மானமான விஷயம்...இத்தனை நாள்....கல்பாவின் இடத்தில் வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடிந்ததில்லை....மாலதிக்கு கல்யாணம் முடித்து விட்டு மெஸ்ஸை கொஞ்சம் பெரிதாக்க வேண்டும்....வேலைக்கு ஒரு ஆள் வைத்து காலை, மதியம், இரவு என்று முழு ஹோட்டலாக மாற்றலாம்...அடுத்து கல்யாணம்...அதற்குள் இப்படி... மாலதி ஏன் இன்னும் காணோம்....சீக்கிரம் வந்தா நல்லது....
=============================

சிவ‌ராமன் பெல்ட் தேய்ந்த‌ வெட்கிரைன்ட‌ர் போல‌ ஒலி எழுப்பும் தன் ப‌ழைய‌ டி.வி.எஸ் ஃபிஃப்டியை அன்ன‌பூர்ணா கெளரிசங்கர் வெளியே நிறுத்திய‌ போது சாய்பாபா காலனி முழுவ‌துமாக‌ இருண்டிருந்த‌து....எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அழுத்தமான காஃபியின் மணம்...இடையிடையே எழும் சூடான‌ கல்லில் உருகும் நெய்யின் வாசனை...லேசாய் கருகும் வெங்காயம்.....பார்சலுக்காக வெயிட் செய்யும் சின்ன பையன்கள்...வெளியே ஓரமாக தம்மர்கள்...மெல்லிய இருட்டில் அன்னபூர்ணா கெளரிசங்கர் திருவிழாக் கூட்டமாக....ஜெகஜோதியாய்...

இது தான்...இப்படித் தான் ஒரு ஹோட்டல் வேண்டும்...அன்னபூர்ணாவுக்கு போட்டியாக...சரவண பவன் மாதிரி பெரிசா...செயின் ரெஸ்டாரன்ட்...ச்சே...ஒரு நாலு லட்சம் இருந்தா நச்சுன்னு ஆரம்பிச்சி ஒரு ஆளா நின்னுடலாம்....பணம்....எல்லாத்துக்கும் பணம் வேணும்...வெறுங்கையால எத்தனை முழம் போட்றது...இதுல கல்பா வேற...புதுசா ஒரு பிரச்சினையை சொல்றா...எதைன்னு சால்வ் பண்றது...சாண் ஏறுனா பத்து மைல் சறுக்குது...என்ன வாழ்க்கைடா இது....

வாழ்க்கையின் வழுக்கல்களை சிவராமன் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்த போது திடீரென்று மிக நெருக்கமாக ஒரு குரல் கேட்டது....

"ஸாரி சிவா...வந்து நேரமாச்சா"

"ஆங்...ம்ம்....இல்ல கல்பா...இப்ப தான் வந்தேன்..."

இன்னொரு சூழ்நிலையில் அன்னபூர்ணியின் ஜோதியில் என் க‌ல்பா தேவ‌தையாக‌ நின்றாள் என்று சிவ‌ராம‌ன் வ‌ர்ணிக்க‌ கூடும்...ஆனால் க‌விதைபாடும் நிலையில் இருவ‌ருமே இல்லாத‌தால் நாமே இருட்டில் அவ‌ளை உற்றுப் பார்த்துக் கொள்ள‌ வேண்டிய‌து தான்...அள‌வான‌ உய‌ர‌ம்...இட்லி போல் குண்டாக‌வும் இல்லை...ரவா தோசை போல் ஒல்லியாக‌வும் இல்லை...உய‌ர‌த்திற்கு ஏற்ற‌ உட‌ம்பு....சினிமா ந‌டிகையை சொன்னால் தான் எல்லாருக்கும் தெரிகிற‌து என்ப‌தால்....கொஞ்ச‌ம் அசின் போல்....த‌மிழ்நாட்டு பெண்க‌ளின் அழ‌கான‌ க‌ண்க‌ள்....முக‌ம் ம‌ட்டும் சோக‌மாக‌...கையில் ஏதோ வாட்ச்...என்ன ப்ராண்ட் என்று இருட்டில் தெரியவில்லை...அப்புற‌ம்......போதும்....போதும்...அடுத்த‌வ‌னின் கேர்ள் ஃப்ர‌ண்டை உற்று பார்த்த‌து....

"க‌ல்பா...உள்ள‌ போலாமா...காஃபி...."

"ம்ம்....ச‌ரி...சீக்கிர‌ம் போக‌ணும் சிவா...வீட்ல‌ சொல்லாம‌ வ‌ந்துட்டேன்..தேடுவாங்க‌...."

"ஏன்....எப்ப‌வும் சொல்லிட்டு தான‌ வ‌ருவ...இப்ப‌ என்ன‌..."

க‌ல்ப‌னாவிட‌ம் இருந்து ப‌தில் ஏதும் வ‌ர‌வில்லை....

"ச‌ரி விடு....திடீர்னு இப்ப‌ என்ன‌ க‌ல்பா....எதுக்கு உங்க‌ அப்பா மாப்பிள்ளை பார்க்கிறார்...நான் அவ‌ர்ட்ட‌ பேச‌வா..."

"சார்....என்ன‌ கொண்டு வ‌ர‌ட்டும்....இட்லி...பொங்கல்....தோசை...ர‌வா தோசை...நெய் ரோஸ்ட்...ஆனிய‌ன் ஊத்த‌ப்ப‌ம்...சோளா பூரி...சாம்பார் இட்லி...."

"இருங்க‌..இருங்க‌...அதெல்லாம் இப்ப‌ வேணாம்...மொத‌ல்ல‌ ரெண்டு காஃபி...உன‌க்கு ஸுக‌ர் வேணாம்ல‌ க‌ல்பா...ஒரு காஃபி ஸுக‌ர் இல்லாம‌..."

ம்ம்ம்ம்....க‌ட‌லை பார்ட்டி போல‌ருக்கு என்று ச‌ர்வ‌ர் நினைத்திருக்க‌லாம்...சொல்ல‌வில்லை....
"சொல்லுப்பா...நான் உங்க‌ வீட்ல‌ வ‌ந்து பேச‌வா...இன்னும் ஒரு வ‌ருஷ‌ம் டைம் குடுங்க‌...நானே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்னு சொல்றேன்...."

க‌ல்பனா மெள‌ன‌மாய்...வேக‌மாய் சுழ‌லும் சீலிங் ஃபேனையே பார்த்துக் கொண்டிருந்தாள்....

"எதுனா சொல்லு க‌ல்பா...நீ சொல்லு...நான் என்ன‌ செய்ய‌ணும்..."

க‌ல்பாவின் முக‌ம் ஏனோ இறுகிப் போயிருந்த‌து....

"நாளைக்கு பொண்ணு பார்க்க‌ வ‌ர்றாங்க‌...இப்ப‌ என்ன‌ பேசி என்ன‌ செய்ய‌...."

சிவராம‌னுக்கு திடீரென்று துக்க‌மாக இருந்த‌து...வ‌ர்ற‌து வ‌ர‌ட்டும்...இப்ப‌வே க‌ல்யாண‌ம் செஞ்சிக்கிட்டா என்ன‌....

"அப்ப‌டியில்ல‌ க‌ல்பா....நீ ச‌ரின்னு சொல்லு....நாளைக்கே கூட‌ க‌ல்யாண‌ம் செஞ்சிக்க‌லாம்...நான் ஏற்பாடு செய்ய‌ட்டா..."

"சார்...ரெண்டு காஃபி....ஒன்னு ச‌க்க‌ரை இல்லாம‌...."

இர‌ண்டு பேருக்குமே காஃபி குடிக்கும் மூட் இல்லை...

"இப்படி வச்சிட்டு போங்க....எடுத்துக்க‌றோம்..."

க‌ல்ப‌னா மெதுவாக‌ சிரித்தாள்....

"என்ன‌ க‌ல்பா...சிரிக்கிற‌..."

"ஒண்ணுமில்ல‌...நாளைக்கு க‌ல்யாண‌ம் செஞ்சிகிட்டா எப்ப‌டி இருக்கும்னு நினைச்சேன்...சிரிப்பு வ‌ந்துருச்சி....வெளையாடாத‌ சிவா...ஒன‌க்கு சிஸ்ட‌ர் இருக்கா...எங்க‌ வீட்ல‌யும் என‌க்கு பின்னாடி ரெண்டு த‌ங்க‌ச்சிங்க‌ இருக்காங்க‌....நாம‌ ஓடிப் போய் திடீர்னு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டா இவ‌ங்க‌ க‌தி..."

"ம்ம்ம்...அப்ப‌ என்ன‌ ப‌ண்ற‌து..."

"ஒண்ணும் ப‌ண்ண‌ வேணாம்னு தோணுது...நாளைக்கு வ‌ர‌ட்டும்...வ‌ந்து பார்க்க‌ட்டும்...என‌க்கு பிடிக்க‌லைன்னு சொல்லிட‌றேன்...அப்புற‌ம் ரெண்டு நாள் கழிச்சி நீ வ‌ந்து பேசு...இப்ப‌ எதுவுமே பேச‌ வேண்டாம்..."

சிவ‌ராம‌னுக்கு க‌ச‌ப்பாக‌ இருந்த‌து...என்னோட‌ ல‌வ்வ‌ரை எவ‌னோ ஒருத்த‌ன் பார்க்க‌ நானே பெர்மிஷ‌ன் கொடுக்கணும்...ப்ப‌ச்....

"ம்ம்ம்ம்....மாப்பிள்ளை பத்தி எதுனா சொன்னாங்க‌ளா....என்ன‌ பேரு...எங்க‌ வேலை பார்க்கிறான்...எந்த ஊரு..."

"ஏதோ சொன்னாங்க‌...ம‌கேஷாம்...எங்க அப்பாவோட பழைய ஸ்டூடண்ட்...இங்க கோயம்புத்தூர் தான்...கணபதி..."

"எங்க வேலை பார்க்குறார்னு சொல்லலியா....ஃபோட்டோ எதுவும் காட்னாங்களா...."

"இல்ல‌ சிவா.....அவ‌ங்க‌ளுக்கு தான் என்னைப் பார்க்க‌ணும்...என‌க்கு இன்ட்ர‌ஸ்ட் இல்ல‌...நான் எதுக்கு பார்க்க‌ணும்...ச‌ரி...ரொம்ப‌ லேட்டாயிருச்சி....நான் கிள‌ம்புறேன்...நாளைக்கு அவ‌ங்க‌ வ‌ந்து பார்த்துட்டு போன‌தும் உன‌க்கு ஃபோன் ப‌ண்ண‌வா...."

"ச‌ரி...எதுக்கும் ப‌ய‌ப்ப‌டாத‌ க‌ல்பா...பிடிக்க‌லைன்னு சொல்லிடு...அப்புற‌ம் நான் வ‌ந்து பேசிக்கிறேன்...."

"ச‌ரி சிவா...நாளைக்கு சாய‌ந்த‌ர‌ம் தான் வ‌ர்றாங்க‌...நான் பத்து மணிக்கா ஃபோன் ப‌ண்றேன்...."
"ச‌ரி...நான் வெய்ட் ப‌ண்றேன்..."

கிள‌ம்பிப் போன‌ க‌ல்ப‌னாவையே பார்த்துக் கொண்டிருந்த‌ சிவ‌ராம‌னுக்குள் ஏனோ ஒரு ப‌ய‌ப்ப‌ந்து உருள‌ ஆர‌ம்பித்த‌து......

=================== தொட‌ரும் ======================

21 comments:

அது சரி(18185106603874041862) said...

நமக்கு நாமே திட்டம்.....

பழமைபேசி said...

//அது சரி said...
நமக்கு நாமே திட்டம்.....
//

மனுசன் சார்லட்ல விமானம் புடிச்சு, நார்போஃக் வ்ர்றக்குள்ள நமக்கு நாமே திட்டமா? பொறுமை அண்ணாச்சி, பொறுமை!

பழமைபேசி said...

இதுக்குத்தான் கோயமுத்தூர்குள்ள வெளியாளுகளை விடாம வெச்சிருந்தோம்... எங்கூர்ப் புள்ளைகளைக் கடத்துறதே வேலையாப் போச்சி....

கல்பனா இனி என்ன செய்வாளோ? வீட்ல இன்னும் ரெண்டு பேர் வேற இருக்காங்களே?

Unknown said...

ஸ்டார்ட் பண்ண உடனே டாப் கியர் போட்டு பறந்துட்டு இருக்கிங்களே தல.. அடுத்த எபிசோட் எப்ப?

KarthigaVasudevan said...

// பழமைபேசி said...

கல்பனா இனி என்ன செய்வாளோ? வீட்ல இன்னும் ரெண்டு பேர் வேற இருக்காங்களே?//


அதானே...கல்பனா இனி என்ன செய்யப் போறா?

நம்ப முடியாது மகேஷைப் பிடிச்சிருக்குன்னு அவ சொல்ற மாதிரி கதையைக் கொண்டு போனாலும் போகலாம் இந்த வேதாளம்!!!

"யாரறிவார் கதை செல்லும் பாதையை"

கல்பாவை சிவராமன் கூட சேர்த்துட்டா சுபம் ...நாளைக்கே அடுத்த பாகம் போடுங்க அதுசரி .முதல் ரெண்டு பாகங்களை விட இந்த பாகம் கொஞ்சம் வேகமாத் தான் இருக்கு...பார்க்கலாம்.
:)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//அது சரி said...
நமக்கு நாமே திட்டம்.....
//

மனுசன் சார்லட்ல விமானம் புடிச்சு, நார்போஃக் வ்ர்றக்குள்ள நமக்கு நாமே திட்டமா? பொறுமை அண்ணாச்சி, பொறுமை!

08 September 2009 0
//

அட அதுக்கில்ல தல...ஈமெயில்ல கமெண்ட் பார்க்க...

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
இதுக்குத்தான் கோயமுத்தூர்குள்ள வெளியாளுகளை விடாம வெச்சிருந்தோம்... எங்கூர்ப் புள்ளைகளைக் கடத்துறதே வேலையாப் போச்சி....

கல்பனா இனி என்ன செய்வாளோ? வீட்ல இன்னும் ரெண்டு பேர் வேற இருக்காங்களே?

08 September 2009 00:45


//

ஆமாங்...ஒங் ஊர் புள்ளியள கடத்துறதுக்கு வண்டி கட்டி வாறோமாக்கும்...:0))

அவன் உள்ளூர்க்காரப் பய தான...அப்புறம் என்னவே??

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
ஸ்டார்ட் பண்ண உடனே டாப் கியர் போட்டு பறந்துட்டு இருக்கிங்களே தல.. அடுத்த எபிசோட் எப்ப?

08 September 2009 02:14

//

நன்றி முகிலன்...அடுத்த எபிசோட் அனேகமா இந்த வார இறுதியில்...

அது சரி(18185106603874041862) said...

//
மிஸஸ்.தேவ் said...

//
அதானே...கல்பனா இனி என்ன செய்யப் போறா?

நம்ப முடியாது மகேஷைப் பிடிச்சிருக்குன்னு அவ சொல்ற மாதிரி கதையைக் கொண்டு போனாலும் போகலாம் இந்த வேதாளம்!!!

"யாரறிவார் கதை செல்லும் பாதையை"
//

அது எனக்கும் தெரியாதுங்கோ...வேதாளம் அடுத்த வாரம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்....

//
கல்பாவை சிவராமன் கூட சேர்த்துட்டா சுபம் ...நாளைக்கே அடுத்த பாகம் போடுங்க அதுசரி .முதல் ரெண்டு பாகங்களை விட இந்த பாகம் கொஞ்சம் வேகமாத் தான் இருக்கு...பார்க்கலாம்.
:)
//

என்னது...சுபம் போட்றதா?? கதையே இன்னும் ஆரம்பிக்கலை...அதுக்குள்ள எப்படி??

:)))

அது சரி(18185106603874041862) said...

//
உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

08 September 2009 10:06
//

நான் வந்து பார்க்கிறேனுங்க...தகவலுக்கு நன்றி..

குடுகுடுப்பை said...

எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அழுத்தமான காஃபியின் மணம்...இடையிடையே எழும் சூடான‌ கல்லில் உருகும் நெய்யின் வாசனை...லேசாய் கருகும் வெங்காயம்.....பார்சலுக்காக வெயிட் செய்யும் சின்ன பையன்கள்...வெளியே ஓரமாக தம்மர்கள்...மெல்லிய இருட்டில் அன்னபூர்ணா கெளரிசங்கர் திருவிழாக் கூட்டமாக....ஜெகஜோதியாய்...//

வெளியே ஒராமாய் தம்மர்களின் ஒருவன் அது சரி.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அழுத்தமான காஃபியின் மணம்...இடையிடையே எழும் சூடான‌ கல்லில் உருகும் நெய்யின் வாசனை...லேசாய் கருகும் வெங்காயம்.....பார்சலுக்காக வெயிட் செய்யும் சின்ன பையன்கள்...வெளியே ஓரமாக தம்மர்கள்...மெல்லிய இருட்டில் அன்னபூர்ணா கெளரிசங்கர் திருவிழாக் கூட்டமாக....ஜெகஜோதியாய்...//

வெளியே ஒராமாய் தம்மர்களின் ஒருவன் அது சரி.

09 September 2009 21:28
//

ஹிஹி..ஹி...அப்பிடியெல்லாம் நின்னாத் தான் எதுனா கதை ஒட்டுக் கேட்க முடியுது தல :0))

மங்களூர் சிவா said...

/
ஆனால் க‌விதைபாடும் நிலையில் இருவ‌ருமே இல்லாத‌தால் நாமே இருட்டில் அவ‌ளை உற்றுப் பார்த்துக் கொள்ள‌ வேண்டிய‌து தான்.
/

இதெல்லாம் சொல்லனுமா?
:))))

ராஜ நடராஜன் said...

//வேகமானது எது...கண்டம் விட்டு கண்டம் பாயும் கணையா..காற்றா...ஒலியா ஒளியா....எதுவுமே இல்லை...மனம் தான்...ரசத்தில் ஆரம்பித்து....லெமூரியாக் கண்டத்தில் மூழ்கி...க்யூபாவுக்கு தாவி... உடல் இடம் விட்டு அசையாது இருந்தாலும் மனம் இடைவிடாது அலைபாய்ந்து கொண்டே தானிருக்கிறது....//

ஆஹா!ஆஹா!(அகோ!அகோ!இது பழமையண்ணன் தப்பு கண்டுபிடிப்பாரேங்கிறதுக்கு)

ராஜ நடராஜன் said...

//சட்டினி, வடை, பொங்கல் எல்லாம் கற்பனையே...கண்டிப்பாக இருந்த, இருக்கின்ற, இனிமேல் இருக்கப் போகின்ற எவரையும் குறிப்பன அல்ல...அப்படி ஏதேனும் ஒற்றுமை இருந்தால் அது வேதாளத்தின் பிழையே தவிர பதிவர் பொறுப்பல்ல!//

இந்த டிஸ்கி எப்போயிருந்து:)

ராஜ நடராஜன் said...

//எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அழுத்தமான காஃபியின் மணம்...இடையிடையே எழும் சூடான‌ கல்லில் உருகும் நெய்யின் வாசனை...லேசாய் கருகும் வெங்காயம்.....பார்சலுக்காக வெயிட் செய்யும் சின்ன பையன்கள்...வெளியே ஓரமாக தம்மர்கள்...மெல்லிய இருட்டில் அன்னபூர்ணா கெளரிசங்கர் திருவிழாக் கூட்டமாக....ஜெகஜோதியாய்...//

இந்த வர்ணனை நல்லாயிருக்கு.ஆனா அதுக்கு முந்தின வரிகள் கௌரிசங்கர்-காந்திபுரம்,அன்னபூர்ணா-ஆர்.எஸ்.புரம்,சாய்பாபா காலனி-வடகோவையைத் தாண்டி.

(கெளரிசங்கர்,அன்னபூர்ணாவெல்லாம் சரவண பவனுக்கு தாத்தாக்களா இருந்திருக்க வேண்டியவங்க.உள்ளூர் மணம்,மவுசு உலகத்தமிழுக்கு தெரியாமேயே போச்சு)

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்ம்....க‌ட‌லை பார்ட்டி போல‌ருக்கு என்று ச‌ர்வ‌ர் நினைத்திருக்க‌லாம்...//

:))))

ராஜ நடராஜன் said...

இந்த இடுகை படிச்சு முடிஞ்சதும் கொஞ்சம் கதை புரியுது.இனி பின்னூட்டம் என்ன சொல்லுதுன்னு பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//நம்ப முடியாது மகேஷைப் பிடிச்சிருக்குன்னு அவ சொல்ற மாதிரி கதையைக் கொண்டு போனாலும் போகலாம் இந்த வேதாளம்!!!//

இது எப்படி இருக்குது:)

ராஜ நடராஜன் said...

இனி இன்னும் பின்னோக்கிப் போகிறேன்.