Wednesday 29 December 2010

கடுங்குண பெருவழுதியும் தாருவின் காகமும்

பன்னிரண்டு வாழைப்பழம் இருந்தால் அது ஒரு சீப்பு. ஆறு என்றால் அரை சீப்பு. இப்பொழுதெல்லாம் யாரும் தமிழில் சொல்வதில்லை. அரை டஜன். தமிழ் தான் பிரச்சினை. இல்லாவிட்டால் எதற்கு அவரங்ஸேபை அவுரங்க சீப்பு என்று எழுதுகிறார்கள். இப்படி கேட்டால் கலா டீச்சர் துரத்தி விடும். ஹிஸ்டரி. அதனாலயே கேட்பது வழக்கம். வெளியில் போய் படம் போஸ்டர் பார்க்கலாம். கொலையும் செய்வாள் பத்தினி என்று ஒரு பட கேப்ஷன். என்ன படம் ஞாபகமில்லை.

ஞாபகம் தான் பெரிய பிரச்சினை. இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிடுவது யார் என்று எனக்கு தெரியவில்லை. ஹிஸ்டரி க்ளாஸ் கட் பண்ணியதன் விளைவு. நரசிம்மவர்ம பல்லவன் மகேந்திரன் இரண்டாம் புலிகேசியா மூன்றாம் புலிகேசியா. தொலையட்டும். ஏதோ ஒரு நம்பர்.  கடுங்குண பெருவழுதிக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு என்று வசனம் சொல்லாதீர்கள். இவனை கழுவில் ஏற்றுங்கள் என்று உத்தரவிட்டால் எல்லாருக்குமே பீதியில் பேதியாகும். எதிரே சூரிய வெளிச்சத்தில் கம்பம் பளபளத்தது. போர்க்காலத்தில் நெய்க்கு பஞ்சம். ஆமணக்கு எண்ணெய் தடவி இருப்பார்கள் போலிருக்கிறது. கேஸ்டர் ஆயில். பெருவழுதியை யானை மீது ஏற்றி கம்பத்தின் நுனியில் உக்கார வைத்தால் படைவீரர்களுக்கு அன்றைய வேலை முடியும். அரசு வேலை என்றாலும் டென் ட்டூ ஃபோர் இல்லை.கருணாநிதி ஆட்சிக்கு வர இன்னமும் காலம் இருக்கிறது. .அவர்களும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பார்கள். மீதியை நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசை பார்த்துக் கொள்ளும். இது கொஞ்சம் காமெடி. நியூட்டன் வரும் முன்னரே புவி ஈர்ப்பு விசை இருந்தது.

என் முகத்தில் பல்லி ஒன்று விழுந்து ஓடியது. பத்து மணிக்கு மேல் படுத்திருந்தால் பல்லி விழுமோ. என்ன எழவோ. காலையில் பல்லி முகத்தில் விழித்தால் என்ன பலன். சித்தியானந்தாவை கேட்கலாம். அவர் தான் இப்பொழுது பாப்புலர் சாமி. ஆனால் அவர் கதவை மூடிக் கொண்டு எப்பொழுதும் பிஸி.டோரை திற ஏரு வரட்டும் என்று ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாராம். தமிழ் இலக்கியம் வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது.

புரண்டு படுத்தால் ஃபோன் அடிக்க ஆரம்பித்து விட்டது. தாரு. தாருவை உங்களுக்கு தெரியாது என்றால் நீங்கள் அவரை தினமும் படிக்காத கோடிக்கணக்கான வாசகர்களில் ஒருவர். பிரபல எழுத்தாளர். தமிழில் தான் எழுதுகிறார். பூடான், ம‌ணிப்புரி, சிக்கிம், மேகாலயா. பொங்கல் லாட்டரி இல்லை. இங்கெல்லாம் அவருக்கு கட் அவுட் இல்லாத இடமே இல்லை. மேகாலயாவில் காடுகளை அழித்து இவரது கட் அவுட் செய்து கொண்டிருக்கிறார்கள். பூடானுக்கு இங்கு இருந்து தான் ஏற்றுமதி. பூடான் இந்தியாவில் இருக்கிறது என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குஷ்பு இட்லி தின்றால் இப்படி தான் மூளை செத்துப் போகும்.


பெருவழுதியை யானை மீது ஏற்றி இருந்தார்கள். பெருவழுதி என்றால் வயதான கிழவன் என்று நினைக்காதீர்கள். குடும்ப பெயர். வயதென்னவோ இருபது சொச்சம் தான். ஆனாலும் அவன் கறுத்த‌ முகம் வெளுத்து போய் இருந்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் எல்லாம் இல்லை. மரண பயம்.இனி தப்பிக்க வழி இல்லை. இப்படி கழுவில் ஏற வேண்டும்  என்பது விதி. குல சாபம். தமிழ் குலம்.


தாருவின் குரல் சங்கீதம் போல் இருக்கும். அவருக்கு மட்டும். இன்னைக்கு ஈவ்னிங். ரிலீஸ் பண்றேன். தாரு இப்படி அடிக்கடி ரிலீஸ் பண்ணுவது வழக்கம் தான். மம்மி ரிடர்ன்ஸ். நோ வொண்டர். கண்டிப்பா வந்துடு. என் புக் ரிலிசூக்கு தமிழ்நாடே திரண்டு வரும்னு டைம்ஸ் ஆஃப் பூடான்ல போட்ருக்காங்க. என்னைத் தவிர எழுத யார் இருக்கா. மூணு லட்சம் பேரு வரணும். அண்ணா சாலைல நிக்க இடம் இருக்கக்கூடாது. இருந்தா தமிழ் இலக்கியம் செத்துடுச்சு.மன்சூர் அலிகானுக்கு இப்பொழுதெல்லாம் வாய்ப்பே கிடைப்பதில்லை.


யானை மீது இருந்த கடுங்குண பெருவழுதியை பாகன் அங்குசத்தால் குத்தினான். பெருவழுதிக்கு முறைக்கவும் தெம்பு இருக்கவில்லை. பரிதாபம். பாகனின் முகத்தில் வெள்ளையாய் பற்கள். இப்பொழுதெல்லாம் யானை பயப்படுவதே இல்லை. அங்குசத்தை கூர் தேய்க்க வேண்டும். சொல்லிக் கொண்டே பெருவழுதியின் இடுப்புத் துணி விலக்கி தொடையில் மெல்ல மெல்ல குத்தினான். அங்குசம் ஒரு அரை இஞ்ச் போயிருக்கும். பெருவழுதி கால்கள் வழியே சிவப்பு நிறம் வழிந்தது.

நான் போன போது அரங்குக்கு பின்னால் நாலு பேர் எதையோ கலக்கிக் கொண்டிருந்தார்கள். டாஸ்மாக் வாசம். தாருவுக்கு டாஸ்மாக் பிடிக்காது. எல்லாம் ஃபாரீன் சரக்கு தான். அஜீத் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணாங்களாம். பீர் எல்லாம் மனுஷன் குடிப்பானா. அதான். ஒரு லிட்டர் சரக்கு. ஒரு வாளி தண்ணி. மிக்ஸ் பண்ணி கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்ணப் போறோம். அட்வான்ஸ்ட் பின் நவீனத்துவம். அடுத்த வருடம் டிவி விளம்பரம். மஞ்சள் பையில் சிக்கன் பிரியாணி, ஓல்டு மங்க் ரம், ஊறுகாய்.இனி தமிழ் இலக்கிய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.  மூணு லட்சம் பேரு. எப்படியும் ஒரு லட்சம் பேர் வந்துடுவாங்க. கரூரில் கொங்கு முன்னேற்ற கழக மாநாடு. முப்பது லட்சம் பேர் வருகிறார்களாம். மணல் ஓடும் அமரவாதி ப்ரிட்ஜ். கழக கண்மணிகள் கட்டியது. தாங்குமா என்று தெரியவில்லை.

கந்தவேலா டைரக்டர் காகத்தை ரிலீஸ் செய்தார். அப்படியே போய் இருக்கலாம். இந்த நாவல் ஒரு தேவிகா புத்தகம். இதை வீட்டில் வெளியில் கம்மாக் கரையில் என்று எங்குமே படிக்க முடியாது. அவர் வேறு எங்கு வைத்து படித்தார் என்று தெரியவில்லை. ரூம் போட்டு படித்திருப்பார் போல.  தாரு பெய்லீசும் ஷிவாஸ் ரீகலும் அடிக்காமலயே உற்சாகம்.தானாக‌ வந்து ஆடு மாட்டுகிறது.

பாகன் கடுங்குண பெருவழுதியை கழுவில் தூக்கி வைத்தான்.

வெளியில் வந்து இருட்டான இடத்தில் மறைந்து நின்று கொண்டேன். கொஞ்சமாய் வெளிச்சம். யாரும் என்னை பார்க்க முடியாது. காகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.பன்னிரண்டு வாழைப்பழம் இருந்தால் அது ஒரு சீப்பு. ஆறு என்றால் அரை சீப்பு. இப்பொழுதெல்லாம் யாரும் தமிழில் சொல்வதில்லை. அரை டஜன். தமிழ் தான் பிரச்சினை. இல்லாவிட்டால் எதற்கு அவரங்ஸேபை அவுரங்க சீப்பு என்று எழுதுகிறார்கள். இப்படி கேட்டால் கலா டீச்சர் துரத்தி விடும். ஹிஸ்டரி. அதனாலயே...............

========================

Monday 6 December 2010

நந்தலாலாவும் தரை டிக்கட்டும்

நான் படம் பார்ப்பதில்லை. பொய் போல தெரிந்தாலும் அது தான் உண்மை. நான் பொழுதுபோக்குகிறேன்.  யோசித்துப் பார்த்தால் இசை மழையில் நனையவோ இயக்கத்தை வியக்கவோ கமல்ஹாசனின் அசைவில் எது மார்லன் ப்ராண்டோ எது அல்பசினோ என்றோ எனக்கு தோணுவதே இல்லை. திருவிழாவில் தொலைந்த குழந்தை கொஞ்ச நேரம் குரங்காட்டம் பார்ப்பது தான் நான் செய்வது. திருப்பி படியுங்கள். திருவிழா போன குழந்தை அல்ல தொலைந்த குழந்தை. இது வரையில் பார்த்த படங்களில் மிகவும் பிடித்தது எங்கள் வீட்டு பிள்ளை. எம்ஜிஆர் நடித்தது தான். ரொம்ப பழசு என்பவர்களுக்கு விக்ரம் நடித்த சாமி. தேவையான துக்கங்கள் என்னிடமே உண்டு. திரையில் மீண்டும் பார்க்கும் மனநிலை இல்லை.ஒற்றை வார்த்தையில் சொன்னால் ஒன்னரை ரூபாய் டிக்கட் எடுத்து மணலை குவித்து உட்காரும் தரை டிக்கட்டு.


ஆனால், உலகத் திரைப்பட நிபுணர்களையும் தரைடிக்கட்டுகளையும் ஒருங்கிணக்கும் ஒற்றை புள்ளி உண்டு. அம்மா என்று சொல்லித் தொலைக்காதீர்கள். தமிழ்படம். அம்மாவே இல்லாதவனுக்கும் இருப்பது நட்பு. அம்மாவையும் அப்பனையும் வெட்டி ஜெயிலுக்கு சென்றவனுக்கு கூட ஏதாவது நட்பு இருந்து தான் தீரும். அவனை எவருமே நட்பாக நினைக்காவிட்டாலும் அவன் யாரையாவது நட்பாக நினைத்துக் கொண்டிருப்பான். 

எப்படி திட்டமிட்டு யாரையும் காதலிக்க முடியாதோ அப்படியே திட்டமிட்டு நட்பும் ஏற்படுத்த முடியாது. ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத நேரத்தில் தான் உண்மையான நட்புகள் ஏற்படுகின்றன. சிறிய ஓடையாக ஆரம்பித்து பெருநதியாக பிரவாகமெடுக்கும் நதியைப் போல. நந்தலாலா நட்பெனும் நதியின் ஓட்டம். நதிக்கே உரிய சுழிவுகள், தடைகள், பெருக்கெடுப்பு. 


அம்மாவை பார்ப்பதற்காக பள்ளியிலிருந்து ஓடி வரும் ஒரு சிறுவனுக்கும் அதே நோக்கத்துடன் மனநிலை தவறியவர்களுக்கான இடத்திலிருந்து தப்பி வரும் நடுத்தர வயது ஆளுக்கும் நட்பு. எங்கே என்றால் இருவரும் மூத்திரம் அடிக்க போகும் இடத்தில். யோசித்து பார்த்தால் என்னுடைய எல்லா நட்புகளும் இப்படி தற்செயலாக நிகழ்ந்தவை தான். உண்மையில் அப்பொழுது ஏற்படுவது நட்பு கூட அல்ல. ஒரு தற்செயலான நிகழ்வு. எந்த நதியும் பெருநதியாக பிறப்பதில்லை. 


சந்தேகத்துடனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் முயற்சியுடனும் தொடரும் நட்பு போக போக பலமாகிக் கொண்டே போகிறது. கிளைநதிகள் போல இடையில் வந்து சேரும் மேலும் சில நட்புகள். 


ஒரு காட்சியில் மனநிலை தவறியவர் போல வரும் மிஸ்கினை பலர் சேர்ந்து அடிக்கிறார்கள். அப்பொழுது அந்த வழியாக வரும் பழைய நண்பர்களை கண்டவுடன் மிஸ்கினுக்கு வரும் பலம். நண்பனின் தோளைப் பிடித்துக் கொண்டு அவர் ஆடும் கொண்டாட்டம். அழகிய குறுங்கவிதை. அனுபவித்தவர்கள் பாக்கியவான்கள்.


மிஸ்கின், விபச்சாரி பாத்திரத்தில் வரும் ஸ்னிக்தா(?), சிறுவன் அகி ஒரு ட்ரக்கின் பின்னால் உட்கார்ந்து போய் கொண்டிருக்கிறார்கள். அகி உயிரைப் போல பாதுகாத்து வரும் அவன் அம்மாவின் படம் காற்றில் பறந்து போகிறது.மிஸ்கினை உலுக்க அந்த பாத்திரம் நல்ல உறக்கத்தில். ஸ்னிக்தா சத்தம் போட்டு ட்ரக்கை நிறுத்தி ஓடோடிப் போய் அந்த படத்தை எடுக்கிறார். அகி அதைப் பிடிங்கிக் கொண்டு ஓடுகிறான். அப்பொழுது ஸ்னிக்தாவின் முகம் காட்டும் உணர்ச்சிகள். In the end we remember not the words of our enemies but the silence of our friends. Martin Luther King.


லாரியின் ஹார்னை திருடி விட்டதாக மிஸ்கினை அடித்து நொறுக்கும் டிரைவர். மிஸ்கின் சொல்லும் ஒரே வரியில் அதிர்ந்து போய் அப்படியே உறையும் இடம். ஒரே ஒரு வசனம் கூட இல்லை. கடைசி வரை அந்த பாத்திரத்துக்கு வசனமே இல்லை. ஆனால் அந்த முகபாவங்கள். அந்த பாத்திரம் வரும் அத்தனை காட்சிகளும் உறைந்து போன இசை போல. 


சில நேரங்களில் நட்பின் வார்த்தைகள் வாள் போல. ஒற்றை அல்ல. பல வாட்கள் ஒரே நேரத்தில். மென்டல் என்று சொன்னதற்காக ஆட்டோ ட்ரைவரை அடித்து நொறுக்கும் மிஸ்கின், அதே வார்த்தையை சொல்லும் ஒரு ஆறு வயது பையனிடம் எதுவும் செய்ய முடியாமல் கதறும் இடம். நட்பு சுகம் மட்டுமல்ல, அது உயிர் வாதையும் கூட. உயிருடன் தோலை உரிக்கும் வாதை.


இந்த படத்தில் பல குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள். எனக்கு தெரிந்த முக்கியமான குறியீடு கடைசி காட்சியில் அம்மாவை மனநல விடுதியில் சேர்த்து விட்டு மிஸ்கின் வெளியே வருகிறார். அவர் உள்ளிருந்த இடம் இருட்டாகவும் வெளியே வருமிடம் வெளிச்சமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் இருளும் ஒளியுமே மிகப் பெரிய குறியீடு.நட்பெனும் பிரமாண்ட வெளிச்சம்.


சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் கவிதையின் சுகம் அதன் அனுபவமே.விளக்கம் அல்ல.பனிக் கொட்டும் நள்ளிரவில் கொஞ்சமான போதையுடன் விஸ்கியும் சிகரெட்டுமாக இப்படி ஒரு படம் பார்ப்பதும் கூட கவிதையின் கொண்டாட்டமே.கவிதை கலைமகள் என்று எவன் சொன்னான்?


நதி போல நகரும் படத்தில் பிரச்சினை என்றால் ஸ்னிக்தாவின் பாத்திரம் துருத்திக் கொண்டு தெரிகிறது. சிறுவன் அகி கடைசியில் ஸ்னிக்தாவை அம்மாவாக ஏற்க எந்த காரணமும் இல்லை. சில இடங்களில் இல்லை பல இடங்களில் இளையராஜா படுத்துகிறார். மெளனம் மிகப் பெரிய இசை. தமிழ்ப்பட சாபம் போல கடைசியில் வரும் காட்சிகள்.


இந்த படம் கிகுஜிரோவின் காப்பியா இல்லை இன்ஸ்பைரேஷனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எப்படி பார்த்தாலும் இது நிச்சயம் பார்க்க வேண்டிய படமே. இயக்குனர் மிஸ்கினை விட நடிகர் மிஸ்கின் வாழ்ந்து காட்டியிருக்கிறார். இயக்குனர் மிஸ்கினை பிடிக்காவிட்டாலும் நடிகர் மிஸ்கினுக்காக. 

இது காப்பியா ஒரிஜினலா என்ற விவாதத்தை நான் வேண்டுமென்றே விலக்குகிறேன். நான் இன்னும் கிகுஜிரோ பார்க்கவில்லை என்பதும் ஒரு காரணம். ஆனால், இந்த படம் காப்பியாக இருக்கும் பட்சத்தில் இயக்குனர் மிஸ்கினுக்கு என் வருத்தங்க‌ளையும் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் நடிகர் மிஸ்கின் இயக்குனரை தாண்டிப் போய்விட்டார். அதற்காக, மிஸ்கின் ஐ லவ் யூ என்று சொல்லத் தோன்றுகிறது.