Wednesday 25 May 2011

தட்டுங்கள் திறக்கப்படும்....

தட்டுங்கள் திறக்கப்படும்
தவறாக புரிந்து கொண்டு யாரேனும் 
தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.


அவர்கள் மீது பிழையில்லை
தட்டச் சொன்னவன் நான் தான்.
ஆனால்

கவனியுங்கள்
என் கதவுகள் வெளிப்புறமாக பூட்டி இருக்கின்றன.

அந்த கதவுகளின் சாவி 
தொலைந்து போய் வெகுநாட்களாகி விட்டது.
இன்னேரம் எங்கோ இருக்க கூடும்
இல்லையேல் துருப்பிடித்தும் போயிருக்கலாம்.

இவ்விடத்தில் ரகஸியமாய் ஒன்று
அதை தூக்கி எறிந்தது நான் தான் என்று
எனக்கு தனியே ஒரு சந்தேகம் உண்டு.
ஒரு வேளை
அந்த சாவி என் முகத்தின் முன்னரே இருக்க கூடும்.
அறையின் கண்ணாடிகள் உடைந்து போனதில் 
எனக்கு என் முகம் மறந்து விட்டது.
அப்படியே சாவியும்.

வறண்ட குளத்தில் மூழ்கும் 
காற்றில்லா பந்தை பார்த்து 
காலில்லா ஒற்றைத் தவளை கத்திக் கொண்டே இருக்கிறது.
அதற்குத் தெரியும்
மெளனத்தின் பேரிரைச்சல் அதன் 
சத்தங்களை மென்று விழுங்கும் என்று.

தட்டுங்கள் திறக்கப்படும்.
ஆனால் 
கவனியுங்கள்.
என் கதவுகள் வெளிப்புறமாக பூட்டி இருக்கின்றன.

இருங்கள் வருகிறேன்.
இன்றைக்கும் யாரோ தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday 18 May 2011

குட்பை மிஸ்டர் கருணாநிதி!

எவருடைய நேரத்தையும் வீணாக்க எனக்கு விருப்பமில்லை.ஷா ஜஹான் தாரா ஷிகோ ஒளரங்கசேப் என்றால் உங்களுக்கு தாஜ்மஹாலும் மும்தாஜும் நினைவில் வந்தால் தயவு செய்து இந்த இடுகையை மூடிவிட்டு மானாட மயிலாட பார்க்க போங்கள். அது உங்களுக்கு நல்லது.  எனக்கும் நல்லது. 

யாருக்கும் தெரியாத ரகசிய வரலாறு இல்லை என்றாலும் மொகலாய பேரரசை பற்றி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பாபரில் ஆரம்பித்து ஒளரங்கசேபில் முடிந்த மொகலாய பேரரசு வரலாறுகளின் வரலாறாக நிற்கிறது. திராவிடர் கழகத்தின் அண்ணா துரையில் இருந்து தோன்றி திருக்குவளை மு கருணாநிதி வரை நீண்ட திமுக போல.

மறுக்க முடியாத உண்மை. திமுகவுக்கு தோல்விகள் புதிதல்ல. திமுகவின் ஆரம்பமே வெற்றியில் ஆரம்பிக்கவில்லை. அன்றைய காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியில் தான் ஆரம்பித்தது. அடுத்த தேர்தலில் கட்சி தலைவர் அண்ணாதுரையே தோற்றார். அண்ணாதுரைக்கு பின் கருணாநிதி முதல்வர் ஆகி சில வருடங்களிலேயே எம்.ஜி.ஆரிடம் தோல்வி. எம்.ஜி.ஆர் மறையும் வரை  பதிமூன்று வருடங்கள் தோல்வி. வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத தொடர் தோல்வி. 

ஒரே தோல்வியில் சிதறிப் போகும் கட்சிகள் மத்தியில் தொடர் தோல்விகளாலும் திமுக துவண்டு விடவில்லை. எம்.ஜி.ஆரின் அதிமுகவுக்கு ஒரே மாற்று சக்தி என்ற நிலையில் தொடர்ந்து கோட்டை போல இயங்கிக் கொண்டே தான் இருந்தது. அதற்கு பின் வெற்றிகளும் தோல்விகளும். 1991ல் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் ஏற்பட்ட படுதோல்வி. கருணாநிதி மட்டுமே தப்பி பிழைத்த தேர்தல் அது. வேறு எந்த கட்சியும் சிதறுண்டு போய் இருக்கும். ஆனால் திமுக பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து எழுந்து அடுத்த தேர்தலில் மீண்டும் ஆளுங்கட்சி.

ஆனால்....

பீனிக்ஸ் பறவை இப்பொழுது உரிக்கப்பட்ட கோழியாக நிற்கிறது.  எண்களை மட்டும் பார்த்தால் மற்ற தோல்விகளுடன் ஒப்பிடும் போது இது மாபெரும் தோல்வி இல்லை தான்.  ஆனால், மற்ற தோல்விகளுக்கும் இதற்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் மற்ற தேர்தல்களில் திமுக கிட்டத்தட்ட தனியாக நின்றது. இந்த தேர்தலிலோ காங்கிரஸ், பாமக என்ற பலமான கூட்டணி கட்சிகள், சன் டிவி கலைஞர் டிவி தினகரன் என்று ஊடக பலம். பல்வேறு நடிகர்கள் நடிகைகள் பிரச்சாரம் வீட்டுக்கு வீடு இலவசம் பண வினியோகம்.

இத்தனை இருந்தும் குறைந்த பட்சம் எதிர்கட்சியாக கூட வர முடியாத அளவுக்கு கருணாநிதியின் கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் கட்சி தான். அண்ணாதுரை ஆரம்பித்த திமுகவுக்கும் கருணாநிதி அழகிரி ஸ்டாலின் தயாநிதி கனிமொழி குடும்பம் நடத்தும் கட்சிக்கும் அதிகம் தொடர்பில்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதை நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல.

ஐந்தே வருடம் மத்திய மந்திரியாக இருந்த ஒருவர் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் செய்தது சமூக சேவை. அவர் மேல் வழக்கு போட்டால் அது பார்ப்பன சதி. ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி. பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்து மூன்று பேரை எரித்துக் கொன்ற பின்னர் கண்கள் பனித்தது இதயம் இனித்தது. கடன் வாங்கி பிஎஸ்ஸியும் பொறியியலும் படித்தவன் சென்னை மேன்ஷனில் தங்கி ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியின் பேரன்கள் நூறு கோடிக்கு படம் எடுப்பார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ், க்ளவுட் நைன் மூவிஸ், சன் பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனங்களுக்கு பெயர் வைத்து தமிழ் வளர்த்தது தனிக்கதை. எந்த நேரம் மின்சாரம் வரும் எந்த நேரம் மின்சாரம் போகும் என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது  கருணாநிதி ஏதேனும் பாராட்டு விழாவில் மூழ்கி இருப்பார். உன் உமிழ்நீர் அது தமிழ்நீர் என்று ஏதேனும் அல்லக்கை தமிழின் முகத்தில் மலத்தை கரைத்து ஊற்றிக் கொண்டிருக்கும்.

என்ன சொன்னாலும் காலை டிஃபன் முடித்து விட்டு மதிய உணவு நேரத்துக்குள் உண்ணாவிரதம் இருந்து உலக சாதனை புரிந்தவர் கருணாநிதி ஒருவர் தான். ஆணும் பெண்ணும் குழந்தைகளும் துரத்தி துரத்தி கொல்லப்படுவதைப் பற்றி கேட்டால் மழை விட்டாலும் தூவானம் விடாது என்று திமிரான பதில் வரும். கொத்து கொத்தாக கொல்லப்படுவது அவருக்கு தூவானம். கருணாநிதியின் தூவானத்திற்கு பின்னரே இரண்டு இனவெறி கொலைவெறி பேயரசுகளால் நாற்பதாயிரம் மக்கள் குடும்பம் குழந்தைகளுடன் ஒரே இரவில் கொன்று புதைக்கப்பட்டனர். இதையும் சில கொடூர மனம் கொண்ட அல்லக்கைகள் மறுக்க கூடும் என்பது வேறு கதை.

இந்த கருணாநிதி தான் இன்று மண்ணை கவ்வி இருக்கிறார்.  தன் மகனுக்கு இந்த இலாகா வேண்டும் மகளுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று டெல்லிக்கு ஓடி விட்டு தமிழ்நாட்டு மீனவன் சிங்கள இனவெறி அரசால் சுட்டு கொல்லப்பட்டு சடலம் கூட கிடைக்காவிட்டாலும் கடிதம் மட்டுமே எழுதும் கருணாநிதி தான் மண்ணை கவ்வி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரை உண்ணாவிரதம் அறிக்கை என்று நாடகம் ஆடிவிட்டு குடும்பத்திற்கு மந்திரி பதவி வாங்கிய கருணாநிதி தான் மண்ணை கவ்வியிருக்கிறார். 

தன் மகளின் பெயரை சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்த்ததும் இலங்கை பிரச்சினையை தீர்மானம் போட்ட கருணாநிதியின் முகத்தில் தான் மண் அடிக்கப்பட்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டவர்களை கூட தன் ஊழல் குடும்ப அரசியலுக்கு கேடயமாக பயன்படுத்திய கருணாநிதியின் முடிவுரை தான் எழுதப்பட்டிருக்கிறது.

முடிவுரை தான்.  பண பலம் கூட்டணி பலம் ஊடக பலம்  மத்திய அரசு மாநில அரசு என்று அதிகார பலம் அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த ஆதரவு என்று எல்லாம் இருந்தும் எதிர்கட்சி என்ற நிலையை கூட பெற முடியாத கேவலமான தோல்வி. போன தேர்தலில் கொசு என்று இவரின் கூட்டணிக் கட்சிகளால் வர்ணிக்கப்பட்ட அதே விஜயகாந்தின் கட்சியை விட கீழான நிலை. மக்களுக்கு இந்த நபரின் மீதான நம்பிக்கை முற்றிலும் அழிந்து போய்விட்டது. இரண்டாவது இடத்தை கூட இவருக்கும் இவரது மகன்கள், மகள்கள், பேரன்களுக்கு தர மக்களுக்கு விருப்பமில்லை. 

மிக நிச்சயமாக இது திமுகவின் முடிவு அல்ல. முடிவின் ஆரம்பம். நீதிக்கட்சி போல சோனியாவின் காங்கிரஸ் போல திமுக மெல்ல தேய்ந்து அழியும்.   மொகலாய பேரரசின் அழிவுக்கு அடிக்கல் நாட்டிய ஒளரங்கசேப் போல திமுகவின் அழிவுக்கு அடிக்கல் நாட்டிய பெருமகன் என்றே கருணாநிதியின் வரலாறு எழுதப்படும். 

பூம்புகார் வசனம் எழுதிய கருணாநிதிக்கு கண்டிப்பாக சிலப்பதிகாரம் தெரிந்திருக்கும். அப்படியே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கருதுகோளும். பகுத்தறிவின் போலி பகலவன்கள் மறுத்தாலும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அறம் கூற்றாகும். ஆகட்டும்!

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று சொன்ன அரசியல் சாணக்கியரே, உங்களுக்கான தூவானம் கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அறம் கூற்றாகும் எனில் மிக நிச்சயம் ஆரம்பித்து பெருமழையாக உம்மை மூழ்கடிக்கும். ஆகவே இப்பொழுதே சொல்லிக் கொள்கிறேன்.

குட்பை மிஸ்டர் கருணாநிதி!

==========================================================