Tuesday 19 April 2011

சொல்லக்கூடாத கதை


இலக்கில்லா பாதையின் 
முடிவிலா பயணத்தில்
வழிகள் பல உண்டு
என் வழி தனிவழி அல்ல
எனக்கு முன்னே பலர் தேய்த்த தடங்கள்
பின்னே வருபவனுக்கு என் தடம் எவனோ ஒருவனின் பாதம்.
வழிப்பயணத்தில் துணையாய்
வருகிறார்கள் போகிறார்கள்
என்னைக் கேட்டு வருவதில்லை
எத்தனை கேட்டாலும் போகாது இருப்பதில்லை.
வழிப்போக்கனின் வார்த்தைகள் 
காற்றில் வரைந்த கோடுகள்
கண்ணுக்கும் தெரிவதில்லை காதிலும் கேட்பதில்லை.

என் சுவாசம் தவிர காற்றில்லாத கால் இல்லாத மண்டபத்தில்
எவனோ ஒருவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.
அவனுக்கு முகம் இல்லை ஆனாலும் பல முகங்கள்.

எவருக்கும் சொல்வதில்லை.
இது சொல்லக் கூடாத கதை.
கேட்பவர்களுக்கு பிடிப்பதில்லை
ஆனாலும்
வழிப்பயணத்தில் எனக்கு நானே சொல்லும் கதை.
ஏனெனில் இது என் கதை.
உனக்கு மட்டும் ரகஸியமாய்.
உறுதியாய் சொல்கிறேன் உனக்கு ரசிக்காது.

எனக்கு பூனைகளை பிடிக்காது
ஆனாலும் பூனைகளுக்கு என்னை பிடித்தே இருக்கிறது.
ஒரு போதும் விட்டு விலகுவதில்லை.
எதிர்பாராத நேரங்களில் எங்கோ ஒரு பூனைக்குரல்.

முன்னம் ஒரு பழம்பூனையின்
முன்கால் நகம் தவிர்த்து
கால் நீட்டி நானிருந்தேன் ஒர் பின்னிரவில்.

எங்கிருந்தோ ஒரு பூனை
அடக்கமாய் அமைதியாய் என் அறையில்.
வெகு நேரம் கவனிக்கவில்லை
அதன் நகங்கள் என் முகம் கிழிக்கும் வரையில்.

எரிந்த கன்னம் தடவி 
கண் சுருக்கி பார்த்தேன்.
இரவில் வந்த பூனை இருட்டின் நிறம்.
குட்டையாய் வால்
உடைந்து போய் ஒரு கால்.
பின்புறத்தில் வால் நுழைத்து
தன் கால்களின் காயத்தை தானே நக்கியபடி.

பெரிய பூனையல்ல குட்டியுமல்ல.
அதன் தலை கொஞ்சம் பிளந்திருந்தது
யாரேனும் பலமாய் அடித்திருக்கலாம்.
பிரியமானவர்களின் கால் நக்க
வெறுப்பில் உதைத்திருக்கலாம்.
உரசுதல் பூனை குணம்.
உடலெங்கும் புழுதிப் படலம்
மண்ணில் இட்டு புரட்டியது போல.
தூக்கியெறியப்பட்ட பூனைகள்
என்னைத் தேடி வருகின்றன.
நூற்றாண்டு காலமாய் தீராப்பசியுடன் என்னை தின்று தீர்க்கின்றன.
எஞ்சிய எலும்புகள் பிறிதொரு நாள் வரும் பூனைக்கு.
விரும்பி அழைப்பதில்லை
ஆனாலும் அவை வாராதும் இருப்பதில்லை.

சில பூனைகள் தூக்கி எறியவென்றே பிறக்கின்றன.
இதுவும் அதில் ஒன்றாக இருக்கக் கூடும்.
பூனையின் இருப்பை மறக்கவில்லை.
மறக்கவும் கூடாத பூனையது.
நீண்ட வழி நடந்த வலி
கால்களெங்கும் பரவ கண்மூடி தூங்கிப் போனேன்.

விழித்தெழா வண்ணம் என் மீது பூனை படர்ந்திருந்தது
இரவில் சிறிதாய் இருந்த அதன் கால் நகங்கள்
ஒற்றை இரவில் பெரு வளர்ச்சி.

அதன் பற்கள் எனக்கு வெகுநாள் பழக்கம்
ஏற்கனவே பலமுறை 
இது மீண்டும் ஒரு முறை.
செய்யக் கூடியது ஏதுமின்றி
வெறுமனே நான் இருக்க
கண் உயர்த்தி பாத்த பூனை
புன்னகையுடன் தின்ன ஆரம்பித்தது என்னை.

சொல்லி வைக்கிறேன்
நீ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
எவருக்கும் சொல்லாதே
இது சொல்லக்கூடாத கதை.

சொல்லி விட்டவன் எழுந்தான்.
என் முன்னே நீண்டது பூனையின் தடம்.

Monday 18 April 2011

கட்டுவிரியனின் குட்டி


மந்தையிலிருந்து பிரிந்த நொண்டி ஆட்டுக்குட்டி மிரண்டு நிற்பது போல பஸ் நிற்க வள்ளியூரெல்லாம் எறங்கு. கண்டக்டரின் குரலில் முன் சீட்டின் கம்பிகளில் அரைத் தூக்கத்தில் அழுந்தியிருந்த முகத்தை நகர்த்தி மடியிலிருந்த மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு இறங்கிக் கொண்டேன். மண்ணில் துளை தேடும் பூரான் போல பஸ் நகர்ந்து செல்ல வள்ளியூர் பஸ் ஸ்டாண்ட் இருண்டிருந்தது. பாலு அண்ணாச்சியின் டீக்கடை ஒரு சீனி மிட்டாய்க் கடை தவிர எல்லா கடைகளும் பூட்டி இருந்தன. தங்கசாமி ஓட்டல் சுவரில் சாய்ந்து ஒரு கிழவி தூங்கிக் கொண்டிருந்தாள். மடியில் முகம் வைத்து ஒரு சின்னப் பயல். பேரனாக இருக்கும். திருநெல்வேலிக்கு நேர் பஸ் கிடைக்கவில்லை. மெட்ராசிலிருந்து திருச்சி. அங்கிருந்து மதுரை. மதுரையிலிருந்து திருநெல்வேலி வந்து வள்ளியூருக்கு டவுன் பஸ் பிடித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. வடலி விளைக்கு அடுத்த பஸ் எப்பொழுது என்று தெரியவில்லை.


பாலு அண்ணாச்சி கடைக்கு எதிர்ப்புறமாக பஸ் நின்றதில் நான் இறங்கியதை பார்க்கவில்லை போலிருக்கிறது. பார்த்தாலும் என்னை தெரியுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை தெரிந்தும் தெரியாதது போல இருக்கலாம். பாலு அண்ணாச்சி அப்பாவின் நண்பர். அண்ணாச்சி அண்ணாச்சி என்று அழைத்தாலும் பாலு அண்ணாச்சிக்கு கல்யாணம் கட்டி வைத்தது அப்பா தான் என்று அம்மா சொல்வாள். மாடு வாங்க போகணும். பரப்பாடி பக்கம். வெள்ளன வந்துடுன்னு புரோக்கர் சொல்லிருக்கான். அவனுவள நம்ப முடியாதுல்லா. ஏமாத்துறத தொழிலா பண்ணிட்டு இருக்கவனுவ. அதான் துரைய கூட்டி போகலாம்னு வந்தேன். நல்லா பல்லு பாப்பான்லா. அழுக்கு லுங்கியை தொடை வரை ஏற்றிக் கட்டி பாலு அண்ணாச்சி வாசலில் வந்து நின்றது ஞாபகம் இருக்கிறது. அப்பா இருந்த வரை அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் அவருக்கு தலையில் நிறைய முடி இருக்கும். இப்பொழுது வழுக்கையாக இருக்கிறது. அப்பா செத்து பத்து வருடமாகி விட்டது. பாலு அண்ணாச்சி இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதில்லை. பத்து வருடத்தில் இவ்வளவு வழுக்கையாகுமா என்று யோசித்துக் கொண்டே சீனி மிட்டாய் கடை பக்கத்தில் போய் நின்று கொண்டேன். கடை ஆள் என்னை பார்த்து விட்டு கையில் இருந்த பழைய பேப்பரை படிக்க ஆரம்பித்தான். பொட்டலம் கட்ட வந்த பேப்பராக இருக்கும். என் வயது தான். அனேகமாக கடை முதலாளியின் மச்சான். வடலி விளைக்கு பஸ் எப்பொழுது என்று கேட்கலாம்.

யோசித்துக் கொண்டே மஞ்சளான வெளிச்சத்தில் சீனி மிட்டாய்கள் குவித்து வைத்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா இருக்கும் வரை எந்த ஊருக்கு போனாலும் ஓலைப் பெட்டியில் மிட்டாய் இல்லாது வர மாட்டார். அக்காக்களும் நானும் எத்தனை கருக்கல் ஆனாலும் இதற்காகவே முழித்துக் கொண்டிருப்போம். பெரிய அக்கா அவள் பங்கையும் எனக்கு தந்து விடுவாள். அவளுக்குத் தேவை டவுன் சோப்பு தான். நல்லா மணக்குது என்பாள். அவள் அப்படி தந்திருக்காவிட்டாலும் அவளை எனக்கு பிடிக்கும். வடலி விளையிலேயே ரொம்ப ஸ்டைல் என் அக்கா தான். அவள் சோட்டு பெண்கள் எல்லாம் நாலு நாளைக்கு ஒரு முறை குளிக்கும் போது அக்கா குளிக்காமல் இருந்து நான் பார்த்ததே இல்லை. அப்பா செத்த மறுவாரம் குளித்து விட்டு அம்மாவுடன் வந்து வள்ளியூரில் தான் பீடி இலை வாங்கி வந்தாள். இன்னமும் சுத்திக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவள் தூரத்தில் வரும் போதே பீடி நாற்றம் அடிக்கிறது. நாலு வருடமாக சின்ன அக்காவும் பீடி சுத்த ஆரம்பித்து விட்டாள். அவள் மீதும் அதே நாற்றம். வீடே பீடி நாற்றம் அடிக்கிறது. போன வாரம் வந்த வாகைக் குளம் மாப்பிள்ளை பீடி சுத்துற பொண்ணுன்னா சேத்து வச்சிருப்பா. நாப்பது பவுன் போட்டு அவள வெளிய திருவ கூட்டி வர வண்டி வாங்கி தர்றதுன்னா கெட்டிக்கிறேன் என்றார். அக்காவிடம் இருவது பவுன் இருக்கிறது. அதையும் அடகு வைத்து தான் அம்மையை டவுன் ஆஸ்பத்திரியில் வைத்து பார்த்தாள். அம்மைக்கு நெஞ்சிழுப்பு. நட்ட நடு ராத்திரியில் மூச்சை இழுத்துக் கொண்டு பேச்சு மூச்சில்லாது பிணம் போல் கிடந்தாள். அக்கா மட்டும் பார்த்திருக்காவிட்டால் அம்மைக்கு இன்னேரம் சோலி முடிந்திருக்கும்.

ஒரு சீனி மிட்டாய் தின்றால் நல்லாருக்கும். நினைத்துக் கொண்டே பாக்கெட்டை தடவி பார்த்தேன். ஒரே ஒரு அஞ்சு ரூபாய் இருக்கிறது. கண்டக்டர் கொடுத்த என்னை மாதிரியே கிழிந்த அழுக்கான அஞ்சு ரூபாய். மெட்ராஸ் மாமா கொடுத்ததில் மிச்சம். பதினாலு வயசாகுது இன்னும் பிராந்தன் மாதிரி உன்  சேலைய புடிச்சிக்கிட்டே திரியறான். என் கிட்ட அனுப்பு நான் வேலை எடுத்து வைக்கேன். ஒங்கம்மல்ல என்ன படிக்க போட்டா. நான் எங்கடமைய செய்யனும் பாத்துக்க. அவர் சொல்லி தான் அக்கா அனுப்பி வைத்தாள். துணிக்கடையில் வேலை. மாசம் தொள்ளாயிரம் சம்பளம்.  டீ நகரில் துணிக்கடை. மாமா வீடு மாம்பலம். மாசா மாசம் முன்னூறு கொடுத்தால் மாமா வீட்டிலயே தங்கிக் கொள்ளலாம். மதிய சாப்பாடு கடையில் கொடுப்பார்கள். அது தான் நல்ல சோறு. காலையில் சாப்பிட நேரம் இருக்காது. கடையை மூடி விட்டு வர கருக்கல் ஒரு மணி ஆகும். வீட்டில் கணியாகுளத்துக்காரி சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பாள். அத்தையை கணியாகுளத்துக்காரி என்று தான் அக்கா சொல்வாள். கூடவே ஊறுகாய் இல்லாவிட்டால் உப்பும் மிளகாயும். அதை தின்று விட்டு படுத்தால் காலையில் பல்லை விளக்கி விட்டு நடந்தே துணிக்கடை போய் விடலாம்.

பக்கத்து நகைக் கடையில் நகை சீட்டு சேர்ந்திருக்கிறேன். மாசம் இரநூறு கட்டியது போக மூணு மாசத்தில் அக்கா பேருக்கு ஆயிரத்து ஐந்நூறு அனுப்பி இருக்கிறேன். இன்னும் ரெண்டு சீட்டு போட்டால் நாலு வருசத்தில் அஞ்சு பவுன் சேர்க்கலாம். கடன் வாங்கியாவது சின்ன அக்கா கல்யாணம் பேசலாம். கணியாகுளத்துக்காரியின் மவன்காரனுக்கு எட்டாப்பு பரிட்சை வரும் வரை எல்லாம் சரியாகத் தான் போனது.

ரெண்டு வாரத்துக்கு முன்னே அவள் ஆரம்பித்து விட்டாள். படிக்க புள்ளைய இருக்க எடத்துல பிராந்தன கொண்டாந்துல்லா வச்சிருக்கு. நாலெழுத்து படிச்சவனுவன்னா தெரியும். இவன் அம்மைக்கு சீல துணி தொவைச்சி போட்டவன். இவனுக்கு வடிச்சி கொட்டணும்னு என் தலைல எழுதி வச்சிருக்காம்ல. கொற மாசம் பார்ப்பன். இவன் போகாட்டி நான் கெளம்பி போய்டறேன். எம்மொவனை படிக்க வைக்க எனக்கு தெம்பிருக்கில்லா. இப்பம் சொல்லுதன். ஒமக்கு ஒம் மொவன் படிக்கணுமா இல்ல உம்ம அக்கா மொவன் இங்க இருக்கணுமா முடிவு பண்ணிக்கும். நாள பின்ன பல்லுல நாக்க போட்டு ஒரு சொல்லு சொன்னீருன்னா நாக்க அறுத்துப்புடுவன். ஒம்ம மாதிரி வடலிவெளை சீன்ரம் புடிச்ச குடும்பம் இல்ல பாத்துக்கிடும்.

இன்றை காலை எழும்போதே மாமா எழுந்திருந்து என்னை பார்த்து என்னடே கெளம்பிட்டியா என்றார். இந்த மாசம் முடிஞ்சா வேற பெல்ட் வாங்கணும். நான் லூசாகி இருந்த பேண்ட்டை இறுக்கிக் கொண்டே ஆமா மாமா, லேட்டாகிடுச்சில்ல. இருக்கட்டும்டே, நான் உங்க மொதலாளிட்ட பேசிட்டேன். ஒனக்கு இங்க சரிப்படாது பாத்துக்க. நான் பம்பாயில வேல எடுத்து வச்சிட்டு சொல்லுதேன். நீ ஊர்ல போய் இருடே. இன்னா, ஊருக்கு போக காசு. ஒம் பைய எடுத்துக்கிட்டு கடைக்கு போ. அங்க பக்கத்துல தான பஸ் ஸ்டாண்டு. கருக்கல்ல பஸ் பிடிச்சா விடிய விடிய வள்ளியூர் போய்டலாம். அம்மைய கேட்டதா சொல்லு. கருத்தா போவணும் பாத்துக்க. பிராந்தன் மாதிரி நிக்காத.

நின்று கொண்டே இருந்ததில் எனக்கு முழங்கால் வலித்தது. மெட்ராஸிலிருந்து கால் நீட்ட முடியாமல் வந்தததால் இருக்கலாம். தங்கசாமி ஹோட்டல் மூடி இருந்தாலும் பரோட்டா குருமா வாசம் வந்தது. மதியம் சாப்பிட்டது. நான் மெதுவே நடந்து ஹோட்டலின் பக்கம் வந்தேன். கிழவி சுவற்றில் சாய்ந்து வாய் ம் பிளந்து தூங்கிக் கொண்டிருக்க இடுப்பில் சுருக்குப்பை நீட்டிக் கொண்டிருந்தது. நான் அவள் அருகில் உட்கார்ந்து சுருக்குப்பையில் இருந்த காசை எடுத்துக் கொண்டேன். சில நூறு ரூபாய் தாள்கள், சில இருவது ரூவாய், கசக்கி மடித்து கிழிந்து போன ஒரே ஒரு அஞ்சு ரூபாய் தாள். இங்கிருந்து என்னை பாலு அண்ணாச்சி மட்டுமே பார்க்க முடியும்.

மீண்டும் வந்து நின்ற என்னை மிட்டாய் கடை ஆள் ஆர்வமின்றி பார்த்து “என்ன வேணும்வே?”. நான் அவனிடம் இரண்டு அஞ்சு ரூபாய் கொடுத்து “பத்துரூவாக்கு முட்டாய் கட்டு” என்று சொல்லி பழைய பேப்பரில் அவன் பொட்டலம் கட்டி கொடுத்த சீனி மிட்டாய்களை வாங்கிக் கொண்டேன்.

தங்கசாமி ஓட்டலின் பக்கம் போகாது மூத்திர நாத்தம் அடிக்கும் சுவற்றின் பக்கமாக பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே வந்து மிட்டாய் பொட்டலத்தை பிரித்து தலையும் வாலுமாக சுருண்டு இருக்கும் கட்டுவிரியன் குட்டிகள் போல இருந்த சீனி மிட்டாயை கடித்துக் கொண்டே நான் இருட்டில் நடக்க ஆரம்பித்தேன்.
======================================

Tuesday 5 April 2011

ஓர் இரவு


அதாவது நீங்காப் பெருவெளியை புறந்தள்ளி நீல நிழல்களை கடந்து அங்கே ஒரு எறும்பின் துதிக்கை பிடித்து தொங்கும் போது அது துதிக்கை இல்லை அறுந்து விழுந்த பல்லியின் வால் என்று தெரிந்து அதை கையோடு எடுத்துக் கொண்டு எதிரில் வந்த ஏசுவை பார்த்து குட் மார்னிங் சொல்லிவிட்டு செல்லும் கவிதை பற்றி ஜி நாகராஜன் என்ன சொல்றாருன்னு கோணங்கியை கேட்டா அவரை ஏன் கேக்கறீங்க சுஜாதா எதுவுமே எழுதலைன்னு ஜெயமோகன் சத்தம் போடற அதே டைம்ல உத்தம தமிழ் எழுத்தாளன் குற்றாலத்துல குளிச்சதுக்கு காரணமே நான் தான் அப்படின்னு சாரு டவுசரை அவரோட டவுசரை தான் அவுத்துட்டு சொல்றப்ப கோணங்கி அப்படியெ மெரண்டு போயி தருமு சிவராமு கைய பிடிச்சிண்டு நகுலனோட வீடு எங்கன்னு கேட்டா அவரு காட்டுனது இந்திரா பார்த்தசாரதியோட வீடுன்னு நான் சொன்னேன்.

ரொம்ப நாளா ஆளையே காணோம். நேத்து சுப்புணி திடீர்னு வீட்டுக்கு வந்து ஏண்ணா நல்லா கருவாட்டு கொழம்பு வைப்பேளான்னு கேக்கரான் கடங்காரன். ஒரு எழுத்தாளனை பாத்து கேக்க வேண்டிய கேள்வியாய்யா இது? அப்படின்னா ஒனக்கு கருவாட்டு கொழம்பு வைக்கத் தெரியாதான்னு எனக்கு ஈமெயில் வருது. என்ன எழவுடா இது. எனக்கு கருவாட்டுக் கொழம்பு வைக்கத் தெரியும்னு நான் என்ன போஸ்டர் அடிச்சா ஓட்ட முடியும்?

இவங்களோட இதே எழவா போச்சின்னு வெளிய கெளம்புனா அங்க கருணாநிதி வந்திட்ருக்காரு. அவரு பாடு என்னை விட மோசம். எம் பையனை கொலைகாரன்னு சொல்லிட்டாங்க, கொலைகாரன்னு சொல்லிட்டாங்கன்னு ஒரே பொலம்பல். என்னை இருந்தாலும் தெரிஞ்சவா பாருங்க. என்னங்கய்யா ஆச்சுன்னு கேட்டேன்.

யதா யதா யதாய. அபிஷ்ட்டு. நான் சொல்லலை. மஹாபாரதத்துல கிருஷ்ண பரமாத்மா சொல்றார். அவரு ஆயிரஞ் சொல்வார். ஒமக்கென்னவோய். அதில்லங்காணும். விதி விதின்னு சொல்றால்லியா. அதான். என்னங்கய்யா ஆச்சுன்னு கருணாநிதிய கேட்டா அவரு ஒரு பாட்டம் பொலம்பி தள்ளிட்டு துணிஞ்சவனுக்கு சுடுகாடு. தள்ளாடுறதுக்கு தமிழ்நாடு. தம்பி வா. டாஸ்மாக்கு போகலாம் வான்னு கூப்ட்டாரு. இதுக்கே அசந்து போயிடாதேள். தா கிருஷ்ணன் தானே வெட்டிண்டு செத்தாருன்னு சொல்லிட்டாருன்னா என்ன பண்ணுவேள். அவா சொன்னா அப்பீலு ஏதுன்னேன். குடும்பத்துக்கு பெரியவா இல்லியோ?

தமிழர்கள் கலையுணர்வு இல்லாத மொன்னைகள். ஃப்ரான்ஸில் யாரும் டாஸ்மாக்கில் குடிப்பதில்லை. நான் டப்ளின்ல மட்டும் தான் குடிப்பேன்னு சாரு சண்டைக்கு வந்துட்டார். அவரு கைல டவுசர் வேற. அந்த டவுசரை போட்டா தான் உங்களுக்கு அடுத்த நோபல் பரிசுன்னு சொல்லிட்டேன். நிஜமா சொல்றியா நிஜமாவே சொல்றியா அப்ப அடுத்த நோபல் எனக்கு தான்னு என்னோட எல்லா ஃப்ரண்டுக்கும் சொல்லிடவான்னு அவரு ஒரே அஜால் குஜால் மூடுக்கு வந்துட்டாரு.

அடிக்கடி அதை கழட்டி ஆட்டாதேள். நாத்தம் பிடுங்கறதுன்னு சொன்னா யூ ஃபக்கர்னு சாரு திட்ட ஆரம்பிச்சிட்டார். ஷிவாஸ் ரீகல்னு சொன்ன பின்னாடி தான் அடங்கினார் போங்கோ. ஆனா விதி யாரை ஓய் விட்டது? சிவனே வெறும் கோமணத்தோட அலைஞ்சாரு இல்லியோ?

எல்லாரையும் கூட்டிண்டு டாஸ்மாக் போனா கூட வர்றது கருணாநிதின்னு அங்க எல்லா பேருக்கும் தெரிஞ்சு போச்சு. என்ன இருந்தாலும் கடை முதலாளி இல்லியோ. அதனால அவருக்கு பிடிச்ச கேசட்டு போட ஆரம்பிச்சிட்டா. மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, மறக்காது எமக்கு இடுவீர் முத்திரைன்னா அது துரை முருகன் சொல்றார். நம்ம டி.ராஜேந்தர் எப்பிடில்லாம் எழுதிருக்கார் பார்த்தீங்களா தலைவரேன்னு.

நாசமா போச்சு. அய்யா அது அண்ணா துரை இல்லியான்னு நான் கேட்டா துரை முருகனுக்கு செம குழப்பம். என்னா துரையா...அண்ணன் எப்ப வந்தாரு..ஒருத்தரும் ஒண்ணும் சொல்லலியேன்னு அழகிரி பையனை தேட ஆரம்பிச்சிட்டார். ஒரே எழவு போங்கோ.
இங்க இத்தனை குழப்படி நடக்குது. பக்கத்துல ஒரு ஆளு உக்காந்து அவரு பாட்டுக்கு குடிச்சிண்டு இருந்தார். மக்களுக்கு சொரணையே இல்ல பாருங்கோ. எனக்குன்னா பத்திண்டு வர்றது. என்னவோய் எருமை தண்ணி குடிச்சா மாதிரி குடிக்கறேள்னு கேட்டுட்டேன். அதுக்கு அவரு சொல்றாரு, எம் பேரு குமாரு. குவாட்டர் குமாருன்னு.

குமாருன்னா என்னவோய். என்ன நடந்தாலும் குடிப்பேளான்னு கேட்டுட்டேன். அவரு குவாட்டர் பாட்டிலை காலி பண்ணிண்டு அந்த கடங்காரன் வடிவேலு மாதிரி அவ்வ்வ்னு அழ ஆரம்பிச்சிட்டார். அழுதுண்டே சொன்னது. இப்ப தான் என்னை எல்லாரும் குவாட்டர் குமாரு குவாட்டர் குமாருன்னு கூப்பிடறா. அதுலயும் சில நீசாள் குவாட்ட்ருன்னுன்னு சொல்றா. என்னோட பேரு குமரன். எங்காப்பாருட்ட ஒரு மாம்பழம் கேட்டேன். அந்தாளு எப்பவுமே ஒன் சைடு. எங்கண்ணனுக்கு கொடுத்துட்டான். அன்னைக்கு கடுப்பாயி அடிக்க ஆரம்பிச்சவன் இன்னை வரைக்கும் அடிச்சிட்டே இருக்கேன். என்னைய யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறா மாங்கா ஊறுகா கூட கிடைக்க மாட்டேங்கிறதுன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டான்.

விதின்னு சொன்னா யாரு நம்பறேள். குமரனோட விதி அன்னைக்கு அப்படி இருந்துருக்கு. பின்ன என்ன ஓய்? அவரு சொல்லி முடிச்சதும் என்டர் ஆனது ஜெயமோகன். சாருவை தேடி வந்தவரு குமரனை கண்டதும் குஜால் ஆகிட்டார்.

அப்பனுக்கு சொன்ன சுப்பனா இருந்தா ஜெயமோகனுக்கு என்னவோய்? சுஜாதாவையே எழுத தெரியுமான்னு கேட்டவரு.சுப்பனை விடுவாரா. இது தாண்டா இந்து ஞான மரபுன்னு பறந்து பறந்து அடிக்க ஆரம்பிச்சிட்டார். அவரு ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு, தெரியுமோல்லியோ?

வெயிட்டுன்னா விஷ்ணுபுரம்னு நினைச்சிடாதேள். அந்த வெயிட்டு விழுந்தா மனுஷா பொழைப்பாளா? நசுங்கிப் போய்டுவா ஓய். காலத்தை வட்டமின்னு சொல்றேளே நேக்கு புரியலைன்னு ஜெயமோகண்ட்ட கேப்பாளா ஓய்? இல்ல தெரியாம தான் கேக்குறேன் கேப்பாளா? இதாண்டா அதுன்னு சுத்தி சுத்தி அடிக்க ஆரம்பிச்சுட்டார். நேக்கே கண்ணை இருட்டிண்டு வந்தது போங்கோ.

இவ பண்ண கூத்துல குடலு கலங்கி போயிருக்கச்ச ட்வீட்டர்ல மெசேஜ் வருது. லெதர் பார்ல இருக்கேன். மயில் கால் சூப்பு வச்சிருக்கான் பாருங்க. நாகூர்ல கூட நான் இப்படி சாப்பிட்டதில்லை. முழு மயிலை அப்படியே உப்பு, பச்சை மிளகாய் தடவி சுட்டு கொடுக்கிறார்கள். எழுத்து தான் என் உயிர். நான் வெளிய எட்டிப் பார்த்தே நாலு நாளாச்சி. இப்பொழுது கூட கேரள கிழமூதிக்கு எட்டு கட்டுரை எழுதிக்கிட்டு தான் இருக்கேன்னு மெஸேஜ். என்னடா இதுன்னு பார்த்தா சாரு. இவரு இங்கன்னா இருக்காரு. அப்புறம் என்ன லெதர் பாருன்னு அவராண்ட போய் கேட்டுட்டன்.

அவரு சொல்றாரு. நான் இந்த வேலிமுட்டி, கள்ளு, பட்டசரக்கு எல்லாம் அடிப்பேன். அதில்லங்காணும் இங்க எங்க லெதர் பாரு வந்துச்சின்னேன். அதைக் கேட்டா நான் பாரிஸ் போனப்ப பாரிஸ் கார்னர் இல்லவோய் பாரீசு பிரான்ஸ் பக்கத்துல இருக்குன்னார். சரி போனப்ப அங்க ஒரு லேடி மெட்ரோல மூத்திரம் அடிக்குது. நான் அந்த மூத்திரத்தை முத்தமிடுகிறேன்னு சொல்றாரு. அய்யே அந்த கருமத்துக்கு எதுக்கு அவ்வளவு செலவு பண்ணுவானேன்? மெட்ராஸிலயே செய்யலாமேன்னேன். இது ஒரு தப்பா ஓய். அப்படின்னா நீ தேகம் படின்னு சொல்லிட்டு அவரு மயில் தலையை கடிக்க ஆரம்பிச்சுட்டார். என் மூஞ்சில விளம்பர போஸ்டர் ஒட்டலையோன்னோ அதுவரைக்கும் சந்தோஷம் போங்கோ.

பெருமாளே இதுக்கு மேல நம்மாள முடியாதுன்னு ஒரு ஓரமா ஒளிஞ்சிக்கலாம்னு போனா அங்க ஒருத்தர் டேபிளுக்கு கீழ உக்காந்து ஆட்டுக்காலை கடிச்சிண்டு இருக்கார். துஷ்டன்னு நினைச்சிண்டே எனக்கு ஓட்டை வாய் கேட்டேளா துஷ்டன்னு நினைச்சிண்டே என்ன ஓய் இங்க உக்காந்திருக்கேள் அப்படின்னா அவரு சொல்றாரு நான் எஸ்.ரா. என்ன நடந்தாலும் கண்டுக்க மாட்டேன்னு. இதென்னடா எழவா போச்சின்னு பார்த்தா காலை தூக்கி காமிச்சி அவரு காலு இல்லவோய் ஆட்டுக்காலு ஆட்டுக்காலை தூக்கி காமிச்சி இது பழனி மலை ஆடு அப்படின்னார். எனக்கு கேடு காலம் பாருங்கோ. மலைல நின்னு உங்களுக்காக பாலே நடனம் ஆடுச்சே அந்த ஆடான்னு கேட்டுட்டேன். அம்மா செஞ்சா அடை பாட்டி சுட்டா வடை அதை சுட்டுடுச்சி ஒரு நரி இந்த கதை அதோட சரி அப்படிங்கிறார். எங்காத்துக்காரி அடை செஞ்சா எருமை சாணில தட்டின வறட்டி மாதிரின்னா இருக்கும்னு நினைச்சிண்டே படுத்தாதீங்க வோய்னு சொல்லிட்டேன். விடுவாரா? அவரு விடுவாரா? விட்டா என்ன எஸ்ரா அது வெறும் ரா. நான் உறுபசில இருக்கேன். கீழ கிடந்த ஒரு இலையை வச்சே ஒம்போது பக்கத்துக்கு கட்டுரை எழுதுவேன். இன்னைக்கு இவ்ளோ பெரிய காலு அதுவும் ஆட்டுக்காலு சிக்கிடுச்சி. அடுத்து வருது பாரு பத்தாயிரம் பக்கத்துக்கு என்னோட புக்கு. ஒனக்கு மட்டும் சொல்றேன். அதுக்கு டைட்டிலு பெரும்பசி. முன்னுரையே முன்னூறு பக்கத்துக்குன்னார். நேக்கு பீதியில பசியே அடங்கிப் போச்சு.

கருவாட்டு கொழம்பு வைக்கலாமான்னு எந்திரிச்சா கருணாநிதி ரொம்ப கோவமா முன்னாடி நிக்கிறாரு. உளியின் ஓசை தந்த இடிச்ச புளி இப்படி நிக்கலாமாங்கய்யான்னு கேட்டேன். நான் தான் சொன்னேனில்லையோ எனக்கு ராகு எட்டுல சட்டமா உக்காந்துட்டான். நான் யானை இவன் எறும்பு. என்னை இலக்கியவாதியில்லைன்னு சொல்லிட்டான்னு ஜெயமோகனை பார்த்து ஒரே சத்தம். இல்லைங்கய்யான்னு நான் சொல்ல வாய் தான் திறந்தேன். இதெல்லாம் அவா சதி நீ போய் பெண் சிங்கம் பாருன்னார். எனக்கு ஏழரைல சனி எட்டுல ராகு. எப்படி விடும். அதில்லைங்கய்யா குமரிமுத்து இலக்கியவாதின்னா நீங்களும் பெரிய இலக்கியவாதிதாங்கய்யான்னு சொல்லிட்டேன்.

அதுக்குள்ள டாஸ்மாக்கை மூட ஆரம்பிச்சிட்டா. அப்பாடா இன்னைக்கு தப்பிச்சோம்னு நினைச்சா ஒரு ஆட்டோ வந்து நின்னது. இதென்னான்னு பார்த்திண்டு இருக்கும் போதே ஜெயமோகன் யார்ட்டயோ போன்ல சொல்றார். இவய்ங்களை ஊட்டி குருகுலத்துக்கு அனுப்பி வைக்கிறேன். அங்க வச்சி கவனிச்சிக்கோன்னு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.