Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, 20 March 2009

கள்ளுப் பானையும் கருவாட்டுக் குழம்பும்


ஏழாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன்...நல்லா ஞாபகம் இருக்கு..ஏன்னா அப்ப தான் ஒரு வருசமா தம்மடிக்க கத்துக்கிட்டு வீட்டுக்கு தெரியாம இருக்க நெல்லிக்கா, எலுமிச்ச இலைன்னு கையில தேச்சிக்கிறது..."இப்பவும் இங்க எல்லாரும் நல்ல சொகம்...நலமறிய ஆவல்" அப்படின்னு ஆரம்பிச்சி "இந்த பண்டிகைக்கு குடும்பத்தோட வந்துரணும்...சின்னவளும் வர்றேன்னு சொல்லிருக்கா..." அப்படின்னு எங்க அம்மாவுக்கு தாத்தா தீபாவளிக்கு வர சொல்லி "இங்கிலாந்து" லெட்டர் போட்ருந்தாரு...

ஊருன்னா ரொம்ப தூரம்...எங்க அம்மாவை கேட்டா தின்னவேலிம்பாங்க...ஆனா அது தின்னவேலில இருந்து அங்கிட்டு ஒரு மூணு மணி நேரம் போகணும்...மதுரை போயி, அங்க வேற பஸ்ஸு மாறி, தின்னவேலி போயி....அப்புறம் வள்ளியூர் வரும்...ஆனா அது எங்க ஊரு இல்ல....வள்ளியூர்ல இருந்து காலைல ஒண்ணு மதியம் ஒண்ணு அப்புறம் நைட்டு கடைசி பஸ்ஸு ஒண்ணு கெளம்பி போகும்..கிட்டத்தட்ட திசையன் விளை பக்கத்துல ஒரு ச்சின்ன கிராமம்...

ஒரு வழியா கருக்கல்ல ஊருக்கு போயிட்டோம்..அப்ப தான் அந்த ஊருக்கு போறேன்..ஊரெல்லாம் நெறைய பனை மரம்...ஊருக்கு நடுவுல ஒரு பெரிய சர்ச்சு...சூசையப்பராம்....ரொம்ப நல்ல மக்கள் ஆனா ஆம்பளைங்க நிறைய பேரு சட்டை போடாம இருந்தாங்க...மக்களை விட அதிகமா ஆடு...கோழி..சின்ன பொண்ணுங்க பசங்க எல்லாருக்கும் என்னை, எங்க அக்கா, அண்ணனையெல்லாம் பார்த்து ரொம்ப சிரிப்பு....ஏன்னு கேட்டா நாங்க பேசுற தமிழு நல்லாவே இல்லியாம்.....

தாத்தாவுக்கு என்னை பாத்து ரொம்ப சந்தோஷம்...நான் ஹாஸ்டல்ல இருந்து படிச்சதுனால அவரு என்னை அப்ப தான் ரெண்டாவது தடவையா பார்க்கிறாரு..மொத தடவை பார்த்தப்ப டவுசர் போடாம இருந்தனாம்...(மனுசனுக்கு கொழுப்ப பாருன்னு நினைச்சிக்கிட்டேன்..)

தீவாளின்னா சும்மாவா...எல்லாருக்கும் ட்ரஸ் எடுக்கணுமில்ல...அதனால எங்க அம்மா, சித்தி, மாமா எல்லாரும் பக்கத்துல டவுனுக்கு கெளம்பி போயிட்டாங்க...டவுனுன்னா திசையன்விளை...இல்லாட்டி வள்ளியூரு..சரியா ஞாபகம் இல்ல...அப்படியே நம்ம உடன்பிறப்புகளையும் அதாங்க...எங்க அண்ணனுங்க, அக்காவையெல்லாம் கூட்டிக்கிட்டு போயிட்டாங்க...நான் பக்கத்து தெரு எட்வினு, அவங்க அக்கா தேவக்கனி இவங்க கூட பம்பரம் சுத்த போயிட்டதுனால என்னை விட்டுட்டு போயிட்டாங்க...ஐடியா குடுத்தது வழக்கம் போல எங்க அக்கா தான்னு நினைக்கிறேன்...

நான் திரும்பி வந்து ஒரே அழுகை...என்னடே பொட்டக்குட்டி மாதிரி அழுதுகிட்டு இருக்கன்னு எங்க தாத்த என்னை வெளிய கூட்டிக்கிட்டு போயிட்டாரு...எங்கயா?? வேற எங்க...சாயங்காலம் ஆனா அவரு தெனமும் போற எடத்துக்கு தான்...

அவருக்கு டெய்லி கள்ளு குடிச்சாகணும்...நைட்டானா ஊருக்கு கொஞ்சம் வெளிய ஜெயராஜூ தோட்டத்து பின்னாடி கள்ளு விப்பாங்க...நல்லா புளிச்ச கள்ளு... அவரு ஒரு மூணு சட்டி கள்ளு குடிச்சாரு...சைடுக்கு சுருட்டு...அப்புறம் ஏதோ வறுத்த கறி...நானும் பார்த்துட்டே இருந்தேன்...இந்தாளு எப்பிடி குடிக்கிறார்னு பாக்குறதுக்கா நம்மள கூட்டி வந்தாரு....தாத்தா எனக்கு அப்பிடின்னேன்...அவருக்கு பயங்கர சிரிப்பு...அவரு சேக்காளிங்க வேற...தாத்தனுக்கு தப்பாத பேரன்...விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணு மொளைக்குமான்னு சொலவடை வேற...ஒனக்கு இல்லாமயாடேன்னுட்டு எங்க தாத்தா இல்ல வேற யாரோ ஒரு சட்டில கள்ளு குடித்தாங்க...குடிச்சா.....ய்யே...செம புளிப்பு...ஏதோ பத்து நாள் வச்சிருந்த மோர் மாதிரி....ஆனா விடாம குடிச்சிட்டேன்...பின்ன ஏழாங்கிளாஸ் படிச்சிக்கிட்டு இதைக் கூட குடிக்க முடியாட்டி என்ன அர்த்தம்??

அப்புறமா அ‍ப்பிடியே ஜெயராஜூ தோட்டத்து நடுவுல நடந்து தாத்தா என்ன பாட்டி வீட்டுக்கு கூட்டிப் போனாரு...பாட்டிக்கு நாங்க வருவோம்னு தெரியுமா இல்ல அவங்க வழக்கமா சமைக்கிறது அப்படி தானான்னு தெரில...நல்லா குண்டு குண்டா கொஞ்சம் ரோஸ் கலர்ல அரிசி...நெத்திலி கருவாட்டு கொழம்பு...அது நெத்திலி கருவாடுன்னு எனக்கு அப்ப தெரியாது...ஏன்னா எங்க வீட்ல எல்லாரும்ம் சைவம்....அரிசி என்ன இவ்ளோ குண்டா இருக்கு எனக்கு ஓட்டல்ல வாங்கி குடுன்னு தாத்தாக் கிட்ட மொதல்ல அடம்பிடிச்சாலும் அப்புறமா நானும் சாப்டுட்டேன்...சும்மா சொல்லக் கூடாது...நெத்திலி கருவாடும் குண்டு அரிசியும் செம காம்பினேஷன்...

நல்லா தின்னு முடிச்சதும், இந்த பயல வீட்டுல உட்டுட்டு வர்றேன்ன்னு எங்க தாத்தா என்ன திருப்பி வீட்டு பக்கத்துல விட்டுட்டு திரும்பி போயிட்டாரு...இங்க வந்தா டவுனுக்கு போயிருந்த உடம்பொறப்பெல்லாம் வந்துட்டாங்க...என்னைப் பார்த்ததுமே அடிக்கணும்னு தோணும் போல...எங்கடா போன கொரங்குன்னு எங்க அக்கா நறுக்குன்னு ஒரு கொட்டு...சாப்ட்டு தூங்குடான்னு எங்க அம்மா சொன்னாங்க...நான் சாப்டுட்டேன்னு சொன்னேனா.... எங்க அம்மாவுக்கு டவுட் வந்துருச்சி...சாப்ட்டியா...என்ன சாப்பிட்ட...தெனமும் சாம்பாரும் மோரும் சாப்ட்றவங்க கிட்ட கருவாடு சாப்ட்டேன்னு சொல்ல எனக்கு என்ன கோட்டியா புடிச்சிருக்கு...கத்திரிக்கா கொழம்பு...தாத்தாவோட சாப்பிட்டேன்னு சொன்னேன்...எங்க அம்மாவுக்கு அவ்ளோ கோவம்...பின்னிட்டாங்க...கருவாடு சாப்டதுக்கு இம்புட்டு அடியான்னு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்தேன்...

ரொம்ப நாள் கழிச்சி புரிஞ்சது...அடி கருவாடு சாப்டதுக்கு இல்ல..கருவாட்டு கொழம்பு செஞ்சி சோறு போட்டது என்னோட இன்னொரு பாட்டி...ஆமா எங்க தாத்தாவுக்கு ரெண்டு வொய்ஃபாம்! ரெண்டு கல்யாணம் பண்ணக் கூடாதாமே?

(இப்ப எதுக்கு இந்த கருவாட்டுக் கதைன்னு கேக்குறவங்களுக்கு...மிஸஸ் டவுட்டோட இந்த பதிவை பார்த்ததும் என்னோட கொசுவத்தி புகைய ஆரம்பிச்சிடுச்சி..அதான் இந்த மொக்கை...)

(படம் உதவி: Google.com)

====================================