Saturday 18 October 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்று விடு - பாகம் இரண்டு

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.



கைக்கிளை

என்ன ஆச்சின்னு தெரியல, இந்த கதையோட மூன்றாம் பாகம் தமிழ் மணத்துல லிங்க் ஆக மாட்டேங்குது...
அதனால மூன்றாம் பாகத்தை
இங்க போயி படிச்சிக்கங்க..

"பாலு பிரசாத்தோ காலு பிரசாத்தோ எவன் மந்திரி ஆனா எனக்கென்ன..ஒரு ஃபிகரு கூட டின்னரு சாப்ட விடாம தொல்லை பண்றானுங்க...அத விடு, போகச் சொல்றது தான் சொல்றானுங்களே எதுனா ஒரு நைட் கிளப்பு, பாரு கொறஞ்சது ஒரு பப்பு..இப்பிடி எதுனா சொல்றானுங்களா? எப்ப பாத்தாலும் ஒரு காடு இல்ல சுடுகாடு..இவனுங்கெல்லாம் எப்ப தான் திருந்துவானுங்களோ.."

விக்கிரமாதித்தன் கடும் எரிச்சலில் காரோட்டிக் கொண்டிருந்தான்..

"எல்லாம் அந்த சனியன் பிடிச்ச வேதாளத்தால வந்தது...எடின்பரோவுலருந்து சவுத் வேல்ஸ் டிரைவ் பண்றதுன்னா சும்மாவா.. நல்ல வேளை நைட்டுன்றதுனால டிராஃபிக் இல்ல..எல்லாம் குடிச்சிட்டு குப்புற படுத்துட்டானுங்க போல..இந்தா பிரிஸ்டால் வந்துருச்சி. இது தான் இங்லண்டோட பார்டர். க்ராஸ் பண்ணா வேல்ஸ் தான்..இன்னும் கொஞ்ச நேரம் தான்...வேல்ஸுல பொண்ணுங்கள்லாம் சும்மா சூப்பரா இருக்கும்னு சொல்றானுங்க.. எதுனா ஒழுங்கா செட்டாச்சின்னா இங்கயே செட்டிலாயிற வேண்டியது தான்..உஜ்ஜைனிக்கி போயி தான் என்ன பண்றது.. அதுக்கு முன்னாடி இந்த வேதாளத்த ஒழிச்சி கட்டணும்.."

இரண்டு நாட்களாக தண்ணி அடிக்க முடியாத கடுப்புடன் மாதித்தன் பிரக்கன் ரேஞ்சஸை அடைந்த போது சௌத் வேல்ஸுக்கே சொந்தமான "நேரங்கெட்ட நேரத்துல மழை" கொட்ட ஆரம்பித்தது..

============================

"கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டுட்டு ஆடுச்சாம்.. நம்மளே தண்ணி அடிக்க முடியாம வறட்சில இருக்கறப்ப வானத்துல இருந்து கொட்டுது...எல்லாம் விதி..ஆமா, இந்த காட்டுல வேதாளத்த எங்க தேடுறது..அந்த மொட்டை சனியன் எங்கனா மரத்துல இல்ல தொங்கி கிட்டு இருக்கும்..எந்த மரம்னு தேடுறது..சரி..இப்பிடியே போவோம்.."

விக்கிரமாதித்தன் வேதாளத்தை தேடி அந்த மழை கொட்டும் நள்ளிரவில் காட்டின் ஊடே நடக்க ஆரம்பித்தான்...

============================

"ஜின்னு என்றால் எனக்கு ரொம்ப பயமே...டாஸ்மாக்கு

ர‌ம்மு என்றால் என‌க்கு தெம்பு வ‌ருமே..

ஜின்னு என்றால் என‌க்கு ரொம்ப‌ ப‌ய‌மே..."

காற்றினிலே வ‌ரும் ஆசிடாக ஒரு கபோதி குர‌ல்....

எவ‌ன்டா அது இப்பிடி கேவ‌லமா பாடுற‌து....அந்த‌ மொட்டை ச‌னிய‌ன் கொர‌ல் மாதிரி இருக்கே... அப்பிடின்னா இங்க‌ தான் எங்க‌யாவ‌து ப‌க்க‌த்துல‌ இருக்கணும்..

இந்த‌ இருட்ல‌ வேற‌ ஒண்ணும் தெரில..இது என்ன காடா இல்ல ஆற்காடு வீராசாமியோடா தமிழ்நாடா.. இவ்ளோ இருட்டா இருக்கே..டார்ச் லைட் வேற இல்ல..சரி..லைட்டரை கொளுத்தி தேட வேண்டியது தான்..

விக்கிர‌மாதித்த‌ன் சுற்றிலும் தேட‌ ஆர‌ம்பித்தான்....

ச‌ற்று தொலைவில் யாரோ ஒரு ம‌ர‌த்த‌டியில் முதுகு காட்டி உட்கார்ந்திருப்ப‌து தெரிந்த‌து..

.. அட‌, யார்றாது..இந்த‌ நைட்ல‌ காட்ல‌ ம‌ர‌த்த‌டில‌ உக்காந்து என்ன‌ ப‌ண்றான்..அது என்ன‌ த‌லைல‌ தொப்பி...இல்ல‌ அது ஏதோ ச‌ட்டி மாதிரி இருக்கே.. த‌லைக்கு மேல‌ அது என்ன‌...ஆ...கொம்பு...அப்ப‌ இது அந்த‌ வேதாள‌ம் தானா? அப்பிடியே பின்னாடி இருந்து ஒரே அமுக்கா அமுக்கிற‌ வேண்டிய‌து தான்..பிர‌ச்சினை இன்னையோட‌ ஒழிஞ்ச‌து..

விக்கிர‌ம‌ன் வேதாள‌த்தின் மீது பாய்ந்தான்..

========================

"..த்த்தா.பாடு..எவ‌ன்டா அது..இந்த‌ நாட்ல ஒரு வேதாள‌த்த‌ கூட‌ க‌ற்போட‌ விட‌மாட்டானுங்க‌ போல‌ருக்கே.."

வேதாள‌ம் விக்கிர‌மாதித்த‌னை உத‌றி எழுந்த‌து...

"அட‌ச்சே..மாதித்தா...நீயா...நீ என்ன‌ செய்ற‌ இங்க‌...நைட்டானா பொண்ணுங்க‌ பின்னாடி சுத்த‌ற‌து தான‌ உன் வேல‌...இப்ப‌ என்ன‌ காட்டுக்குள்ள‌ சுத்துற.."

கேட்ட‌ வேதாள‌ம் த‌ன் த‌லையில் இருந்த‌ அலுமினிய‌ ச‌ட்டியை ச‌ரி செய்து கொண்ட‌து...

"ம்ம்ம்...அதுவா தாள‌மே..உன்ன‌ பாத்து ரொம்ப‌ நாளாயிடுச்சா..என‌க்கு ப‌ச‌லை ப‌ட‌ர்ந்துருச்சி..அதான் உன்ன‌ பாத்து டூய‌ட் பாடிட்டு போலாம்னு வந்தேன்..ஒரு குத்தாட்டம் போடலாம் வ‌ர்றியா ..."

"குத்தாட்ட‌ம் போட‌லாம் தான்...ஆனா நான் ப‌ச‌ங்க‌ கூட‌ல்லாம் ஆட்ற‌தில்ல‌ப்பா..அதுவும் நீ ம‌னுச‌ன்...எதுனா வேதாளி இருந்தா ந‌ல்லாருக்கும்....ம்ம்ம், எங்க‌ ந‌ம்ம‌ள‌ தேடி வ‌ர்ற‌தெல்லாம் உன்ன‌ மாதிரி மொட்ட‌ ப‌ச‌ங்க‌ளா தான் இருக்கானுங்க‌..என்ன‌ ப‌ண்ற‌து..."

வேதாள‌ம் ச‌லித்துக் கொண்ட‌து..

"அடிங்க‌...மொட்டை ச‌னிய‌னே..உன் மூஞ்சிக்கு டூய‌ட் பாட‌ வேதாளி வேற‌ கேக்குதோ? நீயும் உன் ம‌ண்டையும்..அது என்ன‌, த‌லையில‌ ஒரு ச‌ட்டியை க‌வுத்துருக்க‌? ஒன‌க்கு என்ன‌ பெரிய‌ இன்டியானா ஜோன்ஸுன்னு நென‌ப்பா எப்ப‌வும் தொப்பியோட‌ திரிய‌...அதுல உன் கொம்புக்கு ஓட்ட வேற.."

"அது தொப்பி இல்ல‌ மாதி..தொப்பி வாங்க ஏது காசு...இந்த‌ ஊர்ல‌ எப்ப‌வும் ம‌ழ‌ பெய்யுதா ..ம‌ழையில‌ ந‌னைஞ்சா ஜ‌ல்ப்பு புடுச்சிகிடுதுப்பா.. அதான் ஒரு ப‌ழைய‌ ச‌ட்டி கெட‌ச்சிது...ம‌ண்டைல‌ மாட்டிக்கிட்டேன்.."

"நீயும் உன் மண்டையும்..அதுக்கு மேல ஒரு சட்டி வேற..எப்ப‌வும் எதுனா கெளையில‌ தான் தொங்கிக்கிட்டுருப்ப‌..இப்ப‌ என்ன‌...ம‌ர‌த்த‌டில‌ உக்காந்து என்ன‌ ப‌ண்ற‌.."

"ஹிஹீஹீ...."

வேதாள‌ம் ப‌தில் சொல்லாம‌ல் சிரித்த‌து...

"என்ன‌ இளிப்பு...உண்மையைச் சொல்.."

விக்கிர‌ம‌ன் குர‌லை க‌டுமையாக்கிக் கொண்டான்..

"ஒண்ணும் பெரிசா இல்ல மாதி..சுள்ளி பொறுக்கிட்டு இருந்தேன்.."

"என்ன‌து..சுள்ளியா..எதுக்கு..."

"காய்ச்ச‌த் தான்..."

"காய்ச்சிற‌துன்னா.."

"ம்ம்ம்..க‌ஞ்சி காய்ச்ச‌ற‌து..ஒன‌க்கு ஒண்ணுமே தெரியாது பாரு..."

"ச‌னிய‌னே...நீ சொல்ற‌து ஒரு ம‌ண்ணும் புரிய‌ல‌..என்ன‌ காய்ச்ச‌ற‌ நீ"

"மாதி..இந்த‌ ஊர்ல‌ வெல‌வாசியெல்லாம் ஏறிப் போச்சி..ஒண்ணும் க‌ட்டுப்ப‌டியாவ‌ற‌துல்ல‌...ந‌ம்ம‌ வ‌ச‌திக்கு என்ன‌ ஸ்காட்சா வாங்க‌ முடியும்..அதான்..நானே காய்ச்சி அடிக்கிற‌துன்னு முடிவெடுத்துட்டேன்..அதுக்கு தான் அடுப்பெரிக்க சுள்ளி பொறுக்கிட்டு இருந்தேன்..நீ கெடுத்துட்ட..."

"ம்ம்க்க்கும்..உன் த‌லையை தான் எரிக்க‌ணும் தாள‌மே..ச‌ரி, நீ காய்ச்சின‌தெல்லாம் போதும்..உட‌னே கெள‌ம்பு..போய்க்கிட்டே இருக்க‌லாம்.."

வேதாள‌ம் சிரித்த‌து..

"போய்க்கிட்டே இருக்க‌லாம்னா எங்க‌.."

"ம்ம்ம்..உன் மாமியார் வீட்டுக்கு..வேற‌ எங்க‌..எல்லாம் அந்த‌ கெழ‌ட்டு ம‌ந்திர‌வாதி கிட்ட‌ தான்...நான் பாட்டுக்கு ஒரு ய‌வ‌ன‌ ராணியோட‌ டின்ன‌ர் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்..அந்த‌ ச‌டைய‌னுக்கு அது பொறுக்க‌லை..வேதாள‌த்த‌ புடிச்சாதான் ஆச்சின்னு அதையும் கெடுத்துட்டான்..."

"என்ன‌து கோழி புடிக்கிற‌ மாதிரி சொல்ற‌..வேதாள‌த்தை புடிக்கிற‌து அம்புட்டு ஈஸியா போயிடுச்சா...எல்லாம் நேர‌ம்..ச‌ரி அதை விடு..அது என்ன‌ ய‌வ‌ன‌ ராணி டின்ன‌ர்.."

"அதெல்லாம் உன‌க்கெத‌ற்கு தாள‌மே..பேசாம‌ல் என்னுட‌ன் கிள‌ம்பு..ம‌ற்ற‌தை நாளைக்கி பேசிக்க‌லாம்.."

வேதாளம் விக்கிரமனின் அவசரத்தை அலட்சியப்படுத்தியது..

"மாதித்தா.. ய‌வ‌ன‌ ராணியுட‌ன் புதுக் காத‌லா? என்ன இருந்தாலும் நீ உஜ்ஜைனி நாட்டவன்..அவளோ யவனப் பெண்..அவளுக்கும் உனக்கும் பொருந்தி வருமா? நீ ஏதோ த‌வ‌று செய்வது போல‌ தெரிகிறதே.. இப்ப‌டி பொருந்தாக் காத‌லில் வீழ்ந்து அவ‌ஸ்தை ப‌ட்ட இருவரின் க‌தையை சொல்கிறேன் கேள்..."

"நீயும் உன் க‌தையும்..அதை நீயே வைத்துக் கொள்.. என‌க்கு நேர‌மாகிற‌து..உட‌னே கிள‌ம்பு..இல்லை உன் கையக்கால ஒட‌ச்சி தூக்கிட்டு போயிருவேன்.."

"எங் கையக்கால ஒடைக்கிற‌து இருக்க‌ட்டும் மாதி...மொத‌ல்ல‌ இதுக்கு ப‌தில் சொல்லு..கைக்கிளைன்னா என்ன‌?"

கைக்கிளைன்னா....

மாதித்த‌ன் விழித்தான்...

====கைக்கிளை...அடுத்த‌ வார‌ம் விரியும்...=====

எலேய்..தொடர ஆரம்பிச்சி ரெண்டு வாரமாச்சி...இன்னும் கதைக்கே வர்ல..என்னடா படம் காட்றீங்க....

கொதிக்கும் மக்களுக்கு...கொஞ்சம் பொறுத்துக்கங்க..அடுத்த வாரம் கதைய ஆரம்பிச்சுருவோம்..அதுவரைக்கும் கொஞ்சம் நியூஸ் ரீல் பாருங்க..
என்ன ஆச்சின்னு தெரியல, இந்த கதையோட மூன்றாம் பாகம் தமிழ் மணத்துல லிங்க் ஆக மாட்டேங்குது...அதனால மூன்றாம் பாகத்தை இங்க போயி படிச்சிக்கங்க..

Wednesday 15 October 2008

குடிமகனே..பெருங்குடிமகனே.. சினிமா சில நினைவுகள்..தொடர் பதிவு

இங்க பிரிட்டன்ல பெரியாளுங்கள அடிக்கடி நியூஸ்ல காட்டுவாங்க. அப்பிடி ஒரு பெருந்தலைய சமீபத்துல பேட்டி எடுக்குறப்ப கேமராக்காரரு தப்பா ஃபோகஸ் பண்ணி பிபிசில நம்ம முகமும் தெரிஞ்சிருச்சி..எனக்கே அதிர்ச்சி தான்.. என்ன பண்றது, கேமராவ புடுங்கி ஃபில்ம உருவிரலாம்னு பார்த்தா அது டிஜிட்டல் வீடியோ கேமராவாம்.. லைவ் டெலிகாஸ்டிங்.. (அப்புற‌மா அவ‌ருக்கு த‌னியா டிரிங்க்ஸ் வாங்கி ட்ரீட் குடுத்து, அப்ப‌ப்ப‌ இப்பிடி காமிங்க‌ன்னு சொன்ன‌து தொழில் ர‌க‌சிய‌ம் :0)

அது மாதிரி, "சினிமா சில நினைவுகள்" அப்பிடின்னு யாரோ பெரியாளுங்க ஆரம்பிச்ச தொடர் பதிவுல குடுகுடுப்பைக்காரரு அவுட் ஆஃப் ஃபோகஸ்ல நிக்கிற நம்மளையும் கோத்து விட்டுட்டாரு...http://kudukuduppai.blogspot.com/2008/10/blog-post_14.html

"நான் பேட்டில்லாம் குடுக்குறது இல்லீங்களே"ன்னு சொல்லலாம்..ஆனா அதெல்லாம் பெரியாளுங்க சொல்றது.. நாமெல்லாம் மைக் கெடைச்சிட்டா ஒட்டன் சத்திரம் முக்கு சந்துல நின்னு பில் கிளிண்டனையே ஒண்டிக்கு ஒண்டி கூப்பிட்றவய்ங்க.. இந்தா ஆரம்பிச்சிட்டோம்ல?

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயசுன்னெல்லாம் ஞாபகம் இல்ல. "இவனை தனியா விட்டுட்டா எங்கேயாவது ஓடிப்போயிருவான்"னுட்டு, படத்துக்கு போகும் போதெல்லாம் எங்க அம்மா என்னையும் சினிமாவுக்கு கூட்டிப்போயிருவாங்க.. அதனால ரொம்ப படம் சிவாஜி படமா பாத்திருக்கேன்..

மொதப்படம்னு ஞாபகம் இருக்கிறது நான் ஆறாவது படிக்கிறப்ப, எங்க அம்மா கூட்டிப் போன "வசந்த மாளிகை". அது பக்கத்து தியேட்டர்ல அப்ப ரீ ரிலீஸ் ஆயிருந்துச்சி..

படம் பாத்துட்டு வந்து "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்..ஏன் ஏன் ஏன்" அப்பிடின்னு எங்க அப்பா முன்னாடி காஃபி கப்போட ஆடி, கன்ன‌த்துல அறை வாங்கின ஞாபகம் இருக்கு..

அப்புறம் அதே படத்துல வர்ற "குடி மகனே..பெருங்குடிமகனே" பாட்டுக்கு ஸ்கூல்ல கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு எட்டாங்கிளாஸ் பொண்ணோட டான்ஸ் ஆடி ஃப்ர்ஸ்ட் பிரைஸ் வாங்கினதும் ஞாபகம் இருக்கு..

உணர்ந்தது?? அந்த‌ வ‌ய‌சுல‌ என்ன‌த்த‌ உண‌ர்ற‌து? ஒண்ணுமில்ல‌!

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

த‌மிழ் நாட்டுல‌ க‌டைசியா பார்த்த‌ ப‌ட‌ம், ....
"என் வ‌ழி த‌னீ வ‌ழி... த‌டுக்காத‌"..

த‌லைவ‌ரோட‌ ப‌டைய‌ப்பா..

படம் ரிலீசான ரெண்டாவது நாளே சேலத்துல பார்த்தேன். ஈவ்னிங் ஷோ.

"சுத்தி சுத்தி வந்தீக.." பாட்டுக்கு நான் தம்மடிக்க தியேட்டரை சுத்தி சுத்தி வந்ததும், கேட்டுக்கு வெளில அடுத்த ஷோவுக்கா நின்ன ரசிக பெருமக்கள் "டேய் போடா உள்ள"ன்னு கொலை வெறியோட கத்துனதும் ஞாபகம் இருக்கு..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ச‌.ரோ.ஜா... பல பேரு நல்லாருக்குன்னு விமர்சனம் எழுதிருந்தாங்க.. பல தமிழ்மண பதிவர்களும் அடக்கம்..சரி, நல்லாருக்கும் போல அப்பிடின்னு பார்த்தா...பத்து நிமிஷத்துக்கு மேல பாக்க முடியலை.. கொலை வெறி வந்துருச்சி..படம் எடுத்த டைரடக்கர், விமர்சனம் எழுதுன எல்லாரையும் என்ன பண்றது?? இந்த படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்பு வேற..

சரோஜா...ச்சப்பை!

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

தாக்குற‌துன்னா? கொடுமையா இருக்கிற‌தா?? அப்பிடி பார்த்தா, ஒரு ஒண்ணு ரெண்டு ப‌ட‌த்தை த‌விர‌ எல்லாம் கொடுமையா தான் இருக்கு.அதெல்லாம் இங்க லிஸ்டு போட எடம் பத்தாது...ரொம்ப‌ கொடுமைன்னா... அர‌விந்த் சாமி, க‌ஜோல், பிர‌பு தேவா ந‌டிச்ச‌(?) மின்சார‌க் க‌ன‌வு ப‌ட‌த்தை சொல்ல‌லாம்..

ம‌த்த‌ப‌டி அதிர‌ வ‌ச்ச‌ ப‌ட‌ம்னா, க‌ம‌ல் ந‌டிச்ச‌ தெனாலி..எடின்பரோவுல பார்த்தேன்."எல்லாம் சிவ‌ ம‌ய‌ம் அப்பிடின்டு சொல்லுவாங்கோ..என‌க்கு எல்லாம் ப‌ய‌ ம‌ய‌ம்" அப்பிடின்னு க‌ல‌க்க‌லா ஆர‌ம்பிச்சாலும், ப‌ட‌ம் ந‌டுவுல‌ த‌ன‌க்கு ஏன் எல்லாம் ப‌ய‌மா போச்சின்னு க‌ம‌ல் சொல்வாரு.."எங்க‌ட‌ அம்மா ந‌ல்ல வ‌டிவான‌வ‌ங்க‌ தான்..குண்டு போடுறாங்கோ..குண்டு போடுறாங்கோ. நான் ஒளிஞ்சி கிண்டேன்..எங்க‌ட‌ அம்மா.."

இதைக் கேட்ட‌தும் நெஞ்சில் ஏதோ கிழிந்த‌து போன்ற‌ உண‌ர்வு..ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் ஒரு இன‌மே கொன்று குவிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து..கொல்ப‌வ‌ன் ம‌ட்டும‌ல்ல‌, அதை பார்த்து கொண்டு சும்மா இருப்ப‌வ‌னும் குற்ற‌வாளி தான். என் கையெல்லாம் ர‌த்த‌ம் ப‌டிந்திருப்ப‌து போன்ற‌ உண‌ர்வு.. அது இன்ன‌மும் இருக்கிற‌து.. அதை எப்ப‌டி, என்று க‌ழுவ‌ப் போகிறேன் என்று தெரிய‌வில்லை. க‌ழுவ‌ முடியுமா என்றும் தெரிய‌வில்லை..

இந்த சீனுக்கு பின் என்னால் படம் பார்க்க முடியவில்லை. வெளியே வந்து விட்டேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

எதுவுமில்லை..எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும். அதீத பணம் புழங்கும் சினிமாவில் அரசியல் இல்லாவிட்டால் எப்படி? அதனால் எதுவும் என்னை தாக்குவதில்லை.

ஆனால் "ஒண்டிக்கு ஒண்டி வர்றியா" என்று நடிகர் செந்தில் தி.மு.க தலைவரை அசிங்கமாக இழுத்தது எரிச்சலை ஏற்படுத்தியது உண்மை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அப்பிடி எதுவும் நடந்தா மாதிரி தெரியலையே.. ஆனா, எங்க தலைவரு நடிச்ச தளபதில, ராக்கம்மா கையத் தட்டு பாட்டுக்கு சந்தோஷ் சிவன் பட்டைய கெளப்பிருப்பாரு.. இப்பவும் அதை அடிக்கடி பாக்குறது உண்டு..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லை. நானே எழுத்துக் கூட்டி படிச்சிட்டு இருக்கேன். இதுல சினிமாவை வேற எப்பிடி படிக்கிறது?

7.தமிழ்ச்சினிமா இசை?

பெரும்பாலும் எரிச்சல்! இளைய ராஜாவின் இசை மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாவிட்டலும் மரியாதை இருந்தது.. அவருடைய திருவாசகம் கேட்டதும் அதுவும் குறைந்து விட்டது..

ஆனாலும் அடிக்கடி சில பாடல்கள் கேட்பது உண்டு..

"அலை பாயுதே" படத்தில் வரும்

"அலை பாயுதே கண்ணா என் மனம் அலை பாயுதே...
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ.."
பாட‌லும்,

வ‌சூல் ராஜாவில் வ‌ரும் "சிரிச்சி சிரிச்சி வ‌ந்தான் சீனா தானா டோய்" பாட‌லும் இப்போதைய‌ ஃபேவ‌ரைட். இந்த‌ பாட‌ல் கிட்ட‌த‌ட்ட‌ ரிக்கி மார்ட்டினின் Livin La Vida Loca போல் இருக்கிற‌து..செம‌ பீட்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஒலக மொளி படம் பாக்குறதுக்கெல்லாம் ஒரு அறிவு வேணும்.. நாமெல்லாம் மொத ரோ கோஸ்டி..எப்பிடி பாக்க முடியும்?? ஏதோ கொஞ்சம் ஆலிவுட்ட்டு படம் பாத்துருக்கேன்..Casino, Good Fellas, Lord Of War, Bourne Ultimatuம்.. சமீபத்துல The Departed.... இதெல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்லலாம்..
மத்த படி தாக்கிய படம்னா ரெண்டு ஹிந்தி படம்..

ஒண்ணு, ஹம் ஆப்கே ஹெய்ன் கோ(வ்)ன்.. இது வரை நான் பார்த்த படத்திலேயே கடும் கொலை வெறியை ஏற்படுத்தின படம்..கிட்டத்தட்ட சீரியல் கொலைகாரன் ஆயிடுவோனோன்னு எனக்கே பயமாயிடுச்சி.. இவனை பாத்து அவள் சிரிச்சா ஒரு பாட்டு, அவளை பாத்து இவன் இளிச்சா ஒரு பாட்டு, அண்ணி மல்லாக்க படுத்துட்டா ஒரு பாட்டு, அண்ணி குப்புற படுத்துட்டா ஒரு பாட்டு..அண்ணி செத்துட்டா?..வக்காலி, அதுக்கும் ஒரு பாட்டு...வந்த எரிச்சல்ல ஒட்டு மொத்த தியேட்டரையும் கொளுத்தணும் போல இருந்திச்சி..வெளிய போயி ஒரு தம்மை(!) மட்டும் தான் கொளுத்த முடிஞ்சிது..

கிட்டத்தட்ட இதே மாதிரி தாக்கிய இன்னொரு படம்.. ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா நடிச்ச மொஹாபத்தேன்....

அன்னிலருந்து ஹிந்தி படம் பாக்கிறத விட்டுட்டேன்! அத‌னால் இது ந‌ல்ல‌ தாக்க‌மே!

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லாம‌ பின்ன‌? ந‌ம்ம‌ பேக்கிர‌வுண்டு தெரியாம‌ இப்பிடி ஒரு கேள்வியா? ஏவிஎம் ச‌ர‌வ‌ண‌ன் எங்க‌ மாமாங்க‌! சொன்னா ந‌ம்ப‌ணும், இப்பிடில்லாம் ந‌க்க‌லா சிரிக்க‌ப்ப‌டாது!

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ம்க்கும்! நாளைக்கி மார்க்கெட் தொற‌ந்தா என்னோட‌ எதிர்கால‌மே என்ன‌ன்னு தெரிய‌லை! இதுல‌ த‌மிழ் சினிமாவோட‌ எதிர்கால‌மா? நான் என்ன‌ கிளி ஜோசிய‌மா பாக்கிறேன்? இருக்குற‌ நெல‌மைல‌, க‌டைசில‌ நான் அந்த‌ தொழிலுக்கு வ‌ந்துருவேன் போல‌!

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒண்ணுமில்ல. நான் இங்கிலீபிசு படம் பாப்பேன். ஓ, டம்ளர்கள் என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா?? இதெல்லாம் சப்பை மேட்டரு.. லியோனிய வச்சி பழைய படமா புது படமான்னு பட்டி மன்றம் நடத்துவாங்க. அதுவும் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டா, பழைய பட டி.வி.டி யெல்லாம் ப்ளாக் மார்க்கெட்ல விப்பாங்க.. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? ச்சும்மா ஜுஜூபி...ஊதிட்டு போய்ட்டே இருப்பாங்க!

அடுத்து கொக்கி படலம்...

யாரைனா கூப்டே ஆகணுமா? பயமாருக்கே..எனக்கு கொஞ்சம் பேரை தெரியும்(?)னாலும் அவங்களுக்கு என்னை தெரியாது...

சரி விடுங்க.. இந்த குப்பத்துல எல்லாம் பாத்தீங்கன்னா, எந்த வூட்ல கண்ணாலம் நடந்தாலும் அந்த ஊரு கவுன்சிலருக்கோ இல்ல எம்.எல்.ஏவுக்கோ "கண்டிப்பா வந்துருங்க தலைவரே" அப்பிடின்னுடு ஒரு பத்திரிக்கை வச்சிருவாங்க..பாக்க முடியாட்டி அவரு பி.ஏ.க்கிட்டயாவது கொடுத்துருவாங்க. அவ‌ரு வ‌ர‌ மாட்டாரு, அது வேற‌ விஷ‌ய‌ம்!

அது மேறி, நானும் ஒரு நாலு பேரை அன்புட‌ன் அழைக்கிறேன்..

1. நான் ப‌திவு எழுத‌ ஆர‌ம்பிச்ச‌ கால‌த்தில‌ருந்து தொட‌ர்ந்து பின்னூட்ட‌மிட்டு வ‌ரும் டீச்ச‌ர் துள‌சி கோபால் அவ‌ர்க‌ள்.

2. "த‌ம்ம‌ விட்டா பூச்செண்டு, த‌ம்ம‌டிச்சா அணுகுண்டு" என்று த‌மிழ்ப‌திவுல‌கை மிர‌ட்டி வ‌ந்தாலும், நான் எழுதிய‌ மொக்கை க‌தைக‌ளைக் கூட‌ பெரிய‌ ம‌ன‌துட‌ன் பாராட்டும் க‌ய‌ல்விழி அவ‌ர்க‌ள்.

3. "மாச‌த்துக்கு ஒண்ணு" என்று கோட்டா ஸிஸ்ட‌த்தில் எழுதினாலும், ந‌ச்சென்று எழுதும், "கும்போண‌ம் கோபால்" செல்வ‌ க‌ருப்பையா அவ‌ர்க‌ள்.

பின் குறிப்பு: இவ‌ங்கெல்லாம் ந‌ம்ம‌ ப‌திவை எப்ப‌ ப‌டிப்பாங்க‌, இல்ல‌ ப‌டிக்கிறாங்க‌ளான்னு என‌க்கு தெரிலை. அத‌னால‌ அவ‌ங்க‌ எழுதாட்டி, யாரும் என் வூட்டாண்ட‌ ஆட்டோ அனுப்பாதீங்க‌!





=======

Monday 13 October 2008

...மரங்கள் பூப்பதில்லை

நீண்ட நாட்களாய் அப்படியே..

ஊர்காக்கும் எல்லைச் சாமி போல்

நின்ற‌ இட‌ம் ந‌க‌ராம‌ல்..



க‌டும்ப‌னியில் எல்லாம் க‌ருகிவிட‌

அந்த‌ ம‌ர‌மும் மொட்டையாய்


இலையுதிர் காலத்தில் எல்லாம் சருகாய்

இதைச் சுற்றி நூறு ம‌ர‌ங்க‌ள்

எல்லாம் அப்படித் தான் இது மட்டும் விதி வில‌க்கா


வ‌ந்த‌து கோடை அப்ப‌டி ஒன்றும் சுட‌வில்லை
ஆனாலும் அதில் துளிரில்லை
கோடையில் பூப்ப‌தில்லை போலும்


ம‌ழை பெய்து எங்கும் ஈர‌ம் அந்த‌ ம‌ர‌த்திலும் கூட
ஆனாலும் எதுவுமில்லை அட்டையை த‌விர‌

போக‌ட்டும்...
வ‌ச‌ந்த‌ கால‌த்தில் பூக்காத‌ ம‌ர‌மில்லை..

அதுவும் வ‌ந்த‌து
காடெங்கும் ம‌ல‌ர்க‌ள்

அதில் மட்டும்
இலையில்லை பெய‌ருக்கும்..

வீழ‌க் காத்திருக்கும் விருட்ச‌ங்க‌ள்....

கால‌த்தை க‌வ‌னிப்ப‌தில்லை

க‌டைசி வ‌ரை அவ‌னுக்கு தெரிய‌வில்லை

ம‌ரித்த‌ ம‌ர‌ங்க‌ள் பூப்ப‌தில்லை.


Sunday 12 October 2008

கவுண்டமணியும் அன்புமணியும்



ஒரு படத்தில் பார்த்த ஞாபகம்..

கவுண்டமணி ஒரு கிராமத்தில் வைத்தியர். ஒரு நாள் காலையில் வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரிடம் ஒருவர் தலையை சொறிந்து கொண்டு வருகிறார்..

இனி...
"வாடா தீச்சட்டி தலையா என்ன ஆச்சி ஒனக்கு.."

வ‌ந்த‌வ‌ர் இளிக்கிறார்..
"நான் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணுங்க‌..அதுக்கு நீங்க‌ தான் ஒரு ம‌ருந்து சொல்ல‌ணும்.."

"சொல்லீருவோம்...மொத‌ல்ல‌ இங்க‌ வா. நீ பீடி குடிப்பியா.."

"அந்த‌ ப‌ழ‌க்க‌மே ந‌ம்ம‌க்கிட்ட‌ இல்லீங்க‌.."

"அப்ப‌ ப‌ட்டை அடிக்கிற‌து.."

"தொட்ட‌து கூட‌ இல்லீங்க‌.."

க‌வுண்ட‌ம‌ணி குசுகுசுப்பாக..

"தொடுப்பு எதுனா வ‌ச்சிருக்கியா.."

"அய்ய‌ய்யோ..இல்ல‌வே இல்லீங்க‌.."

க‌வுண்ட‌ம‌ணி க‌டுப்பாகிறார்...

"அப்ப‌ என்ன‌ ம‌சு**க்குடா நீயெல்லாம் நூறு வ‌ருஷ‌ம் வாழ‌ணும்..ம‌வ‌னே நீ நாளைக்கே செத்து போயிரு..இல்ல நானே ம‌ருந்து குடுத்து கொன்னுடுவேன்..காலைலேயே வ‌ந்துட்டானுங்க‌டா ட‌ப்பா த‌லைய‌னுங்க‌.."

பின் குறிப்பு: இத‌ற்கும் இப்பொழுது த‌மிழ் ம‌ண‌த்தில் தின‌ம் எட்டுக்காட்சிக‌ளாக‌ ஓடிக்கொண்டிருக்கும் "புகை என‌க்கு ப‌கை" ப‌திவுக‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இருக்கிற‌து என்று நீங்க‌ள் நினைத்தால் அத‌ற்கு க‌ண்டிப்பாக‌ நான் பொறுப்ப‌ல்ல‌..



ஆனா ஒண்ணு..


இப்பிடி இருந்த நாங்க...









இப்பிடி ஆயிருவோம்னு மட்டும் நினைக்காதீங்க‌





ஒரு ஆச்சரியக் குறி:
இந்த‌ ப‌திவுக்கு நெறைய‌ப் பேரு வ‌ந்த‌ மாதிரி தெரியுது. ஆனா, யாருமே அன்பும‌ணிய‌ ப‌த்தி ஒரு வார்த்தைக் கூட‌ இல்ல, அப்புறம் என்ன‌டா டைட்டில்ல அன்புமணின்னு கேக்க‌வே இல்லை..
என்ன‌ உள்குத்து எல்லாருக்கும் புரிஞ்சிருச்சா இல்ல‌ க‌வுண்ட‌ரை ப‌த்தி எழுதிருக்காண்டான்னுட்டு போயிட்டாங்க‌ளா?? ஒண்ணுமே புரிய‌லை!

Friday 10 October 2008

நவீன விக்கிரமாதித்தன் கதைகள் - மோகத்தைக் கொன்றுவிடு - பாகம் ஒன்று

முன் அறிவிப்பு 1: வழக்கம் போல இந்த தொடரில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே. கதை மாந்தர்கள் மற்றும் பதிவரின் நலம் கருதி அவர்களின் அடையாளங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன.

முன் அறிவிப்பு 2: காதல் தெய்வீகமானது, காமத்திற்கு அதில் இடம் இல்லை என்று கருதும் தெய்வீக காதலர்களும், காமமோ காதலோ அது ஆண்களின் ஏகபோக உரிமை, அது தான் இந்திய, தமிழக, சிந்து சமவெளி, ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ கலாச்சாரம் என்று சொல்லும் கலாச்சார காவலர்களும் தயவு செய்து இந்த தொடரை படிக்க வேண்டாம்.



காலைச் சுற்றிய பாம்பு!

"ஐ இல் ஹேவ் எ க்ராப் மீட் சூப் ஃபார் ஸ்டார்டர்ஸ்.. அன்ட் ஃபார் யூ மிங்ஸீ?"

"mmh. Just a corn soup Aathi.. I am on diet this week".

அம்பது கிலோ கூட இல்ல. இதுல டயட்டு வேறயா..கிளிஞ்சிரும்.. மாதித்தன் மனசுக்குள் நினைத்தாலும் சொல்லவில்லை.இந்த மஞ்சள் அழகி டின்னருக்கு வந்ததே பெரிய விஷயம்..எதையாவ‌து சொல்லி அதையும் கொடுப்பானேன்..
அந்த சனியன் பிடித்த வேதாளத்தால் அந்த ஸ்பானிஷ் சிட்டு தான் பறந்து விட்டது..சரி, இந்த சைனீஸ் அழகி வந்ததே நல்லது. என்ன, இவள் ட்ரிங்சும் பண்றதில்லை.. இவள் அடிக்கும் சிகரெட்டும் நமக்கு ஒத்து வருவதில்லை.. குப்பை லாரி க்ராஸ் பண்ண மாதிரி ஒரே கப்பு..சரி..காதல்னா சும்மாவா..கப்பைக் கூட சகிக்கலைன்னா எப்படி..இவளை எப்படின்னா மால்பரோவுக்கு மாத்திட்டா பிரச்சினை தீர்ந்தது..

பிடிக்குமேன்னு எடின்பரோவுலேயே காஸ்ட்லியான சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு கூட்டி வந்தா இவ டயட்டுங்கறா...இதுல இருக்கற பேரை வேற ரொம்பவே சுருக்கி ஆதியாம்..ஆதி..பாதி.. சரி, பொண்ணுங்க எப்பிடி கூப்டாலும் நல்லா தான் இருக்கு.. இனி வேதாளத்தையும் பார்ப்பதில்லை.. கதையும் கேட்பதில்லை. அந்த சனியனும், மந்திரவாதியும் எப்படி போனால் நமக்கென்ன..அவன் பாடு வேதாளம் பாடு..

"ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டுக்கத்தி..

பாடப்போறேன் என்ன பத்தி.. கேளுங்கடா வாயப்பொத்தி..."

நேர‌ங்காலம் தெரியாம‌ல் போக்கிரித்த‌ன‌மாக‌ மாதித்த‌னின் மொபைல் ஃபோன் செந்தமிழில் பாட‌ ஆர‌ம்பித்த‌து...

==========================

எவ‌ன்டா இது.. குடும்ப‌ மீட்டிங்ல‌ க‌ட்சிக்கார‌ க‌ள‌வாணி பூந்த‌ மாதிரி.. கண்ட நேரத்துல ஃபோன் பண்ணிக்கிட்டு.. உடன்பிறப்பேன்னு மாநாட்டுல சொன்னா அதுக்காக உள்ளயே வந்த மாதிரி இருக்கே..

"ஹ‌லோ.. ஆதி ஹிய‌ர்..."

"ஆதி...ஆதி...ஆஆஆஆதீஈஈஈஈஈஈஈ. த்தீத்தீத்தீ... நாயர் கடை டீட்டீட்டீ..ஹா ஹா ஹா..."

ம‌றுமுனையில் ப‌ல‌த்த‌ சிரிப்பொலி கேட்ட‌து..

அடிங்ங்க்க‌..எவ‌ன்டாது ந‌ம்ம‌ளுக்கு ஃஃபோன் ப‌ண்ணி ந‌ம்ம‌ளையே க‌லாய்க்கிற‌து..

"Who is this?"

"ஆதி... ஹ‌ஹஹாஹ்ஹா.. என்ன‌ விக்கிர‌மாதித்தா..ஓடிப்போன‌ சிட்ப‌ண்ட் க‌ம்பெனி கார‌ன் போல‌ பேரை மாற்றி விட்டாயா? அதுவும் ச‌ரி தான், த‌லைம‌றைவு வாழ்க்கை வாழ்ப‌வ‌னுக்கு அது தானே வ‌ழி.."

விக்கிர‌மாதித்த‌னா? ரெண்டு நாதாரிக‌ள் ம‌ட்டும் தானே முழுப்பெய‌ரை சொல்லிக் கூப்பிடும்? இது வேதாள‌மாக‌ தெரிய‌வில்லை.. அப்ப‌டியானால்.. அவனுமா...


விக்கிர‌ம‌னுக்கு வேர்த்த‌து..

"என்ன அரசே.. கட்சி மாறிய திருநாவுக்கரசர் மாதிரி சத்தமே இல்லை? நீ உஜ்ஜையினி அரசன் விக்கிரமாதித்தன் தானே?"

" நீ...நீங்கள்..நீங்கள்.."

"ஆம் விக்கிரமாதித்தா... ஆயிரம் ஆண்டுகளாக உன்னால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் மந்திரவாதி தான்... அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும். நீயோ ஆயிரம் ஆண்டுகளாக என்னை ஏமாற்றிக் கொல்கிறாய்.. நீ கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா?"

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கிறதே..

இந்த மந்திரவாதி இங்கு எப்படி வந்தான்..அதுவும் இந்த நேரத்தில்..

"மந்திரா..நீயா..நீங்கள்..நீங்கள் எப்படி இங்கு..இந்த நேரத்தில்.."

"என்ன விக்கிரமாதித்தரே..ஆச்சரியமாக இருக்கிறதா? தேரா மன்னா, செப்புவதுடையேன்.. நீ பிடித்து வருவதாக சொன்ன வேதாளம் எங்கே? ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல.. ஓராண்டு அல்ல.. ஈராண்டு அல்ல.. ஆயிரத்து பதினேழு புள்ளி எட்டு ஆண்டுகள்..அரசியல் வாதிகள் வாக்குறுதி கொடுப்பதே வாய்க்கரிசி போட்ட மாதிரி தான் போலும்.. வேதாளமும் வரவில்லை...உன்னையும் காணவில்லை..என்ன தான் செய்து கொண்டிருக்கிறாய்? "

"மந்திரா..பொரச்சி கலைஞர் போல் புள்ளி விவரங்களை எடுத்து விடாதே..ஆமாம், சொன்னேன், அதுக்கு என்ன இப்ப..நான் ஒண்ணும் உன்னை ஏமாற்ற நினைக்கவில்லை. மோன மாசம் கூட அதை பிடிக்க போனேன்..அது வழக்கம் போல கதை சொல்லி ஏமாற்றி விட்டது.."

"உன்னை எவன் கதை கேட்க சொன்னது..நீ என்ன சின்ன குழந்தையா..காக்கா கதை சொன்னிச்சி அதனால நரி வடையை எடுத்துட்டு போச்சின்னு சொல்ல? வெக்கமாக இல்லை?"

"மந்திரா..நீ புரியாமல் பேசுகிறாய்..."

"சரி, கதை சொன்னிச்சி.. அது நடந்து நாலு வாரம் ஆச்சி. அது போன மாசம்...நான் சொல்றது இந்த மாசம்..அதுக்கப்புறம் ஏன் போகலை?"

"ம‌ந்திர‌வாதி உன‌க்கு தெரியாத‌து இல்லை. என‌க்கு வேலைக‌ள் அதிக‌ம்.."

"ஆஹா.. என‌க்கு தெரியாதா உன் வேலையும், லீலையும்...வேலை நேர‌த்தில் பெண்க‌ளை துர‌த்துப‌வ‌ர்க‌ள் சில‌ர்.. பெண்க‌ளை துர‌த்துவ‌தையே வேலையாக‌ வைத்திருப்ப‌வ‌ன் நீ.. குடித்து கும்மாள‌ம் அடிப்ப‌து..அப்புற‌ம் குப்புற‌ ப‌டுத்து விடுவ‌து...கேட்டால் வேலையாம் வேலை.."

"ம‌ந்திர‌வாதி... மூட‌னாக‌ பேசாதே.. அமெரிக்காவில் ஸ்டாக் மார்க்கெட்டில் ந‌ட‌ந்த‌ பிர‌ச்சினைக‌ளால்...."

ம‌ந்திர‌வாதி விக்கிர‌ம‌னை முடிக்க‌ விட‌வில்லை.

"அமெரிக்கா அண்டார்டிக்கா..அடுப்புல‌ வ‌ச்சிட்டு ம‌ற‌ந்துட்டா க‌ருகிப்போயிரும் க‌த்திரிக்கா.. இந்த‌ க‌தையெல்லாம் என்னிட‌ம் விடாதே விக்கிர‌மாதித்தா..உன்னால் முடியாவிட்டால் சொல்.. நான் ஏதேனும் தமிழ்நாட்டு உட‌ன்பிற‌ப்பிட‌மோ இல்லை ர‌த்த‌த்தின் ர‌த்த‌த்திட‌மோ சொல்கிறேன்.. பாதாள‌த்தையே வ‌ளைப்ப‌வ‌ர்க‌ள் கேவ‌ல‌ம் ஒரு வேதாள‌த்தையா பிடிக்க‌ மாட்டார்க‌ள்?"

"ம‌ந்திரா நீ என்னை கேவ‌ல‌ப்ப‌டுத்துகிறாய்..உன‌க்கு என்ன‌ தான் வேண்டும்?"

"ம்ம்ம். அதுவா..ஒரு குவாட்ட‌ரும் கோழி பிரியாணியும் வேண்டும்..ஆயிர‌ம் வ‌ருட‌த்திற்கு அப்புற‌ம் இப்ப‌டி ஒரு கேள்வியா? வேறு என்ன‌, என‌க்கு அந்த‌ வேதாள‌ம் தான் வேண்டும்.."

"ச‌ரி, பிடித்து வ‌ருகிறேன். என‌க்கு கொஞ்ச‌ம் டைம் கொடு.. எப்ப‌டியும் இன்னும் ஆறு மாத‌த்தில் பிடித்து வ‌ருகிறேன்.."

"ஆறு மாத‌மா? விக்கிர‌மாதித்தா, நீ நில‌வ‌ர‌ம் புரியாம‌ல் க‌ல‌வ‌ர‌ம் செய்கிறாய்..இன்னும் ஒரு வ‌ருட‌த்திற்குள் இந்தியாவில் தேர்த‌ல் வ‌ருகிற‌து. என்னை பிர‌த‌ம‌ராக்க‌ வேண்டும் என்று இது வ‌ரை அஞ்சு பேர் யாக‌த்திற்கு ஆர்ட‌ர் செய்திருக்கிறார்க‌ள். நீ ம‌ட்டும் அந்த‌ வேதாள‌த்தை பிடித்து வ‌ந்து விட்டால் யாக‌த்தை நிறைவு செய்து விடுவேன். அத‌ற்கு தான் வேதாள‌ம் வேண்டும். நீ என்ன‌டா என்றால் ஆறு மாத‌ம் என்கிறாய்.."

"இருப்ப‌தே ஒரு ப‌த‌வி தானே ம‌ந்திரா. அத‌ற்கு எப்ப‌டி அஞ்சி பேர்?"

"அதெல்லாம் உன‌க்கெத‌ற்கு? வ‌ந்த‌வ‌ர்க‌ள் எல்லாம் பெரிய‌ ஆட்க‌ள். ஒருவ‌ர் காயாவ‌தி. ஏதொ புத்திர‌பிர‌தேச‌ முத‌ல்வ‌ராம்.ம‌க்கள் தொகையை த‌விர‌ வேறு ப‌ங்க‌ளிப்பு இல்லாத‌தால் புத்திர‌ பிர‌தேச‌ம் என்று பெய‌ராம்...இன்னொருவ‌ர் பாலு பிர‌சாத் யாத‌வாம். அவ‌ர் வீட்டில் எப்ப‌வும் பத்து எருமை மாடாவ‌து இருக்குமாம். அடுத்த‌வ‌ர் பெய‌ர் அத்துவாணியாம்.. எப்ப‌வும் எவ‌னுக்காவ‌து ஆணிய‌டிப்ப‌தே அவ‌ருக்கு தொழிலாம்...அடுத்த‌வ‌ர் தான் விசித்திர‌ம்.. அவ‌ர் பெய‌ர் கானியாவாம், இருப்ப‌து கானா நாட்டிலாம்...அவ‌ரை எப்ப‌டி இந்தியாவில் பிர‌த‌மராக்குவ‌து என்று என‌க்கே தெரிய‌வில்லை"

"ம‌ந்திரவாதி..நீ பெரிய ஆள் தான்.. ஆனால் உன் யாக‌த்திற்கு வேதாள‌ம் எத‌ற்கு..பாவ‌ம் விட்டுவிடேன்.."

"விக்கிர‌மாதித்தா...இந்த‌ ம‌காச‌த்ரு விநாச‌ யாக‌ம் ப‌ற்றி தெரியாம‌ல் பேசுகிறாய்..இத‌ற்கு வேதாள‌ம் மிக‌ அவ‌சிய‌ம். அய்யோ இந்தியா...அய்ய‌கோ இந்தியா..என்று க‌த்திக்கொண்டே அத‌ன் த‌லையில் தின‌ம் நூத்தியெட்டு தேங்காய் வீத‌ம் நூத்தியெட்டு நாட்க‌ளுக்கு உடைத்தால் தான் யாக‌ம் முடிவ‌டையும்.. ஆனியோ கோனியோ ம‌ந்திரியாக‌ முடியும்.. இதெல்லாம் உன‌க்கு புரியாது..உன்னால் அந்த‌ ஓடுகாலி வேதாள‌த்தை பிடித்து வ‌ர‌ முடியுமா முடியாதா? அதை ம‌ட்டும் சொல்.."

"ச‌ரி ம‌ந்திரா..பிடிக்கிறேன்..ஆனால் அது எங்கே இருக்கிற‌து என்று கூட‌ என‌க்கு தெரியாதே.."

"அந்த‌ க‌வலை உன‌க்கு வேண்டாம் விக்கிர‌மா..அதை நானே க‌ண்டு பிடித்து விட்டேன்..உன‌க்கு பிர‌க்க‌ன் ரேஞ்சஸ் தெரியுமா?"

"தெரியாது. அது எங்க‌ இருக்கு?"

"ஆமா, உன‌க்கு பாரையும், பாவைக‌ளையும் விட்டா என்ன‌தான் தெரியும்? அது செள‌த் வேல்ஸில் இருக்கு.. அந்த‌ வேதாள‌மும் அங்க‌ தான் இருக்கு.. உட‌னே கெள‌ம்புனா பிடிச்சிட்டு வ‌ந்திர‌லாம்.."

"என்ன‌ ம‌ந்திரா வெளையாடுறியா.. நான் எடின்ப‌ரோவுல‌ இருக்கேன். இங்க‌ இருந்து ச‌வுத் வேல்ஸ் ஐநூறு மைல்.. இப்ப‌ கிள‌ம்பினா கூட‌, போய் சேர‌ நாளைக்கி ஆயிடும்.."

"அதை தான் நானும் சொல்றேன் விக்கிர‌மா... உட‌னே கெள‌ம்பு. இப்ப‌ ம‌ணி ஏழு தான் ஆகுது.. வ‌ண்டிய‌ விர‌ட்டுனா எப்பிடியும் நைட்டு ப‌ண்ணென்டு ம‌ணிக்குள்ள‌ போயி சேந்துட‌லாம்.."

"இப்ப‌வா... நான் ரெஸ்டார‌ண்டுல‌ இருக்கேனே.."

"நைட்டானா நீ என்ன‌ ப‌ண்ணுவ‌ன்னு என‌க்கு தெரியும் விக்கிர‌மா.. கொஞ்ச‌ நாளைக்கி அதை த‌ள்ளி வை... நீ வேதாள‌த்தை பிடிப்ப‌தில் தான் எல்லாம் இருக்கிற‌து.. ம‌ற‌ந்து விடாதே...என்ன‌ போகிறாயா?"

"ச‌ரி போறேன்..வேற‌ வ‌ழி?"

"வெற்றிய‌டைய‌ வாழ்த்துக்க‌ள் ".


ப‌திலை எதிர்பார்க்காம‌ல் ம‌ந்திர‌வாதி காலை க‌ட் செய்தான்..

=======================

"What happened Aathi? Is everything OK.."

"ah, yeah.."

"Shall we order for main course then.."

நேர‌ம் தெரியாமல் இந்த‌ பொண்ணு வேற‌..

"mmh..Mingzee..I got a problem .. I got to go..I'm sorry.."

"Now? You have not even touched your starters..."

"Yeah...Sorry Mingzee...It's some emergency".

"Can I help.."

"No.Thanks...I'll catch you later.."

"mmh..ok..if you say so.."

அப்ப‌ இனிமே இவ‌ளும் அவ்வ‌ள‌வு தானா? இந்த‌ வேதாள‌த்தாலும் ம‌ந்திர‌வாதியாலும் தான் எவ்வ‌ள‌வு பிர‌ச்சினை...பாலு பிர‌சாத்தோ...காலு பிர‌சாத்தோ எவ‌ன் ம‌ந்திரி ஆனா ந‌ம‌க்கென்ன..ச‌னிய‌ன் பிடித்த‌ வேதாள‌த்தை கையை காலை ஒட‌ச்சாவ‌து இந்த‌ த‌ட‌வை பிடிச்சிர்ற‌து...

க‌டும் கோப‌த்தில் காரை கிள‌ப்பிய‌ விக்கிர‌ம‌ன், செள‌த் வேல்ஸ் செல்லும் மோட்டார் வேயில் காரை விர‌ட்ட‌ ஆர‌ம்பித்தான்..

=======அப்ப வேதாளம்?... அடுத்த வாரம் வரும்...=====

Friday 3 October 2008

கருணானிதி கேள்வி பதிலும்...கயவர்களின் இடைச் செருகலும்..

பத்திரிக்கையாளர்கள் யாரும் தன்னை சந்திக்க விரும்பாத நாட்களில் (மேட்டரு இருந்தாதான வருவாங்க) தி.மு.க தலைவர் " நமக்கு நாமே" ஸ்டைலில் தனக்கு தானே கேள்வி கேட்டு, அதற்கு எக்கு தப்பாக பதிலும் சொல்வது வழக்கம். அதை பதிப்பிக்கச்சொல்லி பத்திரிக்கைகளுக்கு அன்பு(!) வேண்டுகோளும் விடுவது உண்டு..
அப்படி அவர் இன்று அனுப்பிய கேள்வியும் நானே...அடிங்க... பதிலும் நாந்தேன்... அறிக்கையில் யாரோ சில கயவர்கள் புகுந்து இடைச்செருகல்கள் செய்து விட்டனர்.
அந்த கயவர்களின் கயமைத்தனம் உங்கள் பார்வைக்காக...

============

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இனியும் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என இந்திய கம்யூனிலஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கருணாநிதி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி- பதில் அ‌றி‌க்கை‌:
கருணானிதி:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசியிருக்கிறாரே?
தோழர் நல்லகண்ணு இப்படி பேசியிருப்பதுதான் ஆச்சரியத்தைத் தருகிறது. அவருமா இப்படி என்று! கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போதுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக மத்திய அரசினை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியிருக்கிறோம்.

கயவர்கள்: அடேங்கப்பா... தீர்மானமே ஏத்திட்டீங்களா?? அது எப்ப ஏத்துனீங்க, அதுக்கப்புறம் என்ன பண்ணாங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும். இலங்கை தமிழர்கள் எல்லாம் அதுக்கப்புறம் நமீதா டான்ஸும், உளியின் ஓசை படமும் பாத்துக்கிட்டு சந்தோஷமா இருக்காங்களோ?

கருணானிதி: இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது. இன்னும் சொல்லப்போனால் 23.4.2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானத்தை நான் முன்மொழிந்த போது, இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்கள் சார்பில் யாரும் சட்டமன்றத்தில் பேசவே இல்லை என்பதற்காக அவர்கள் தூங்கிவிட்டதாக சொல்ல முடியுமா?

கயவர்கள்: அப்பிடிங்களா?? மொதல்ல மின்வெட்டு இல்ல இல்லன்னு ஒரு மந்திரி சொல்லிக்கினு இருந்தாரு.. அப்பாலிக்கா நெதம் மூணு நேரம் மட்டும் தான் மின்வெட்டு இருக்குன்னு சொன்னாரு.. அவரு தூங்க்கினு இருந்தாரா இல்ல நாங்க தான் எலவச டி.வி. பாத்துட்டு தூங்கிட்டோமோ??

க‌ருணானிதி: இலங்கைத் தமிழர்களுக்கென்று உண்ணாநோன்பு அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மேடையில் இலங்கைத் தமிழர் பிரச்சனையை கருணாநிதி கொச்சைப்படுத்துவதா என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கிப் பேசியிருக்கிறாரே?
இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஐ.நா.மன்றம் வரையில் போய் கொச்சைப்படுத்திப் பேசியவரே பண்ருட்டி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அந்தப் பேச்சு என்ன தெரியுமா?
'நாங்கள் அகதிகள் விடயம் வரைக்கும் நிறுத்திக் கொண்டோம். நாங்கள் இலங்கை அரசின் கொள்கைகளையோ, அல்லது இலங்கை அரசின் நடவடிக்கைகளையோ விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான் தெளிவுபடுத்த விரும்புவது இலங்கையின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடுமாறு சொல்லவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்பது தான். இந்தியா எந்தப் பிரிவினை இயக்கத்தையும் ஆதரிக்க வில்லை...' -இப்படி பேசியவர்தான் இலங்கை பிரச்சினையை நாம் கொச்சைப்படுத்தியதாக கூறுகிறார்.

க‌ய‌வ‌ர்கள்: இதுல‌ கொச்சை ப‌டுத்துற‌ மாதிரி என்ன‌ இருக்கு? அவ‌ரு என்ன‌ சோத்தால‌ அடிச்ச‌ பிண்ட‌ங்க‌ள்னா சொன்னாரு? அதுவுமில்லாம‌ அவ‌ரு எப்ப‌ சொன்ன‌து? எப்ப‌ சொன்னாலும் ஒண்ணு தான்னு நீங்க‌ சொன்னா.... உங்க‌ க‌ட்சி கார‌ங்க‌ கூட‌த்தான் இந்திரா..ணி தாசின்னு சொன்னாங்க‌.... இப்ப‌வும் அது அப்பிடித்தானா?

க‌ருணானிதி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரத மேடையில், இந்திய மீனவர்கள் சிங்கள ராணுவத்தினால் தாக்கப்படும் கொடுமை நின்றபாடில்லை என்பது பற்றியும் பேசப்பட்டுள்ளதே?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து விரிவாக செய்திகளை வெளியிட்ட 'ஜனசக்தி' நாளேட்டில் முதல் பக்கத்திலேயே மற்றொரு செய்தியும் வந்துள்ளது. அந்தச் செய்திக்கான தலைப்பு 'மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா, இலங்கை ஒப்புதல்' என்பதாகும்.
அந்தச் செய்தியில், 'இந்திய மீனவர்கள் தொடர்ந்து பா‌கி‌ஸ்தா‌ன் நீரிணைப்பில் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு திட்டம் வகுக்க இந்தியா மற்றும் இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ரோஹிதா போகோலொகாமா சந்திப்பின் போது இதற்கான தக்கதொரு வழி முறையை ஏற்பாடு செய்ய தங்கள் துறைகளிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்தனர்' என்று கூறப்பட்டுள்ளது. மற்ற ஏடுகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.
குறிப்பாக இந்து நாளேட்டில் இது பற்றி வெளிவந்த செய்தியில் பாக். ஜலசந்தியில் இலங்கை ராணுவத்தினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறை குறித்து முடிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அயலுறவுத் துறை அமைச்சர் ரோகிதா போகலோகாமாவை புதன்கிழமை அன்று சந்தித்துப் பேசும் போது, பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசினார்.
அப்போது இந்திய மீனவர் பிரச்சனை பற்றி தத்தம் துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எல்லையை தாண்டி வருவதாகக் குற்றஞ்சா‌ற்‌றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குறி வைத்து தாக்குவது குறித்து பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
நாமும் மத்திய அரசிடம் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தொடர்ந்து பல வழிகளில் வலியுறுத்திக் கொண்டுதான் வருகிறோம்.

க‌ய‌வ‌ர்க‌ள்:
இந்தியா இல‌ங்கை தீர்வு காண‌ ஒப்புத‌ல்.... பின்ன அதெல்லாம் இல்ல‌, தீர்வு காண‌ மாட்டோம்னா ஒப்புத‌ல் போடுவாங்க‌?? ரொம்ப‌ மொக்கைத்த‌ன‌மா இருக்காது??
நீங்க‌ சொன்ன‌தை ஒழுங்கா, இன்னொரு த‌ட‌வை எழுத்துக்கூட்டி ப‌டிச்சி பாருங்க‌..
'இந்திய மீனவர்கள் தொடர்ந்து பா‌கி‌ஸ்தா‌ன் நீரிணைப்பில் இலங்கை கடற்படை யினரால் தாக்கப்படுவது அதிகரித்து வருவதால், அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு திட்டம் வகுக்க இந்தியா மற்றும் இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் ரோஹிதா போகோலொகாமா சந்திப்பின் போது இதற்கான தக்கதொரு வழி முறையை ஏற்பாடு செய்ய தங்கள் துறைகளிடம் பணியை ஒப்படைக்க முடிவு செய்தனர்'


அதாவ‌து, அவ‌ங்க‌ தீர்வும் சொல்ல‌ல‌, தீர்வு காண‌ப்போற‌தாவும் சொல்ல‌ல‌.. எங்க‌ ஆபிசு ஆளுங்க‌க்கிட்ட‌ சொல்றேன்பான்னு சொல்லிருக்காங்க‌... இது ஒரு மேட்ட‌ரா?? வ‌ழ‌க்க‌மா மீன‌வ‌ங்க‌ள்லாம் மீன் பிடிக்க‌ போனா, மீனு தான் மீன் பாடி வ‌ண்டில‌ போகும்.... நீங்க‌ள்லாம் க‌ச்ச‌த்தீவை தாரை வாத்து கொடுத்து ஆட்சியை காப்பாத்திக்கிட்டீங்க‌... இப்ப‌ மீன் பிடிக்க‌ போனா, மீன‌வ‌ருங்க‌ பாடி தான் வ‌ண்டில‌ போகுது..

க‌ருணானிதி:அப்போது இந்திய மீனவர் பிரச்சனை பற்றி தத்தம் துறை அதிகாரிகளிடம் பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எல்லையை தாண்டி வருவதாகக் குற்றஞ்சா‌ற்‌றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் குறி வைத்து தாக்குவது குறித்து பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

க‌ய‌வ‌ர்க‌ள்: ஆமா, அவ‌ரு ஆழ்ந்த‌ க‌வ‌லை தெரிவிச்சிட்டாரு... இனிமே மீனவ‌ருங்க‌ பாடு கொண்டாட்ட‌ம் தான்... இனிமே அவ‌ங்க‌ பொண்டாட்டி புள்ளைங்க‌ நெத‌ம் பொங்க‌ல் கொண்டாடுவாங்க‌ள்லா? எம்புட்டு சாதிச்சிருக்கீங்க‌..

க‌ருணானிதி:மானிய விலையில் பத்து மளிகைப் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
இதுவரை வந்துள்ள செய்திப்படி நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நல்லத் திட்டத்தை உத்தமர் காந்தி அடிகள் பிறந்த அக்டோபர் 2ஆ‌ம் தேதியன்றே தொடங்கப்பட வேண்டுமென்ற உயர்ந்த நோக்குடன் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக அக்டோபர் மாதத்திற்கு மட்டும் கூட்டுறவு அமுதம் அங்காடிகள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர்.

க‌ய‌வ‌ர்க‌ள்: காந்தி மீது தான் ஒங்க‌ளுக்கு எம்புட்டு பாச‌ம்? புல்ல‌ரிக்குது போங்க‌.. இன்னும் ச‌ரியா ஏற்பாடு ப‌ண்ண‌ல‌ன்னு சொல்ற‌துக்கு காந்தி வ‌ரையிலும் கூப்பிட‌ணுமா?? இம்புட்டு தெகிரிய‌ம் த‌மிழ்னாட்டுல‌ எவ‌னுக்கு வ‌ரும்னேன்??

=============
சொல்லத் தேவையில்லை.

இப்படி எக்குத்தப்பாக இடைச்செருகல் செய்யும் கயவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்