Thursday 22 December 2011

பின்னம்

”இப்பிடி ஒண்ணுக்கும் ஏலாம கெடக்கனே ஏ ராசா” பாட்டியின் அலறல் கேட்டுத் தான் கண்விழித்தேனா இல்லை கண்விழித்ததும் கேட்ட முதல் குரலா என்று எனக்கு ஞாபகமில்லை. அன்றைக்கு எழும் போதே வீடு வினோதமாக இருந்தது. “சனியனுங்களுக்கு அவிச்சு கொட்டி முடியலை” திட்டிக் கொண்டே இட்லி சுடும் அம்மா மூலையில் சேரில் உட்கார்ந்திருந்தாள். அப்பாவை வழக்கம் போல காணவில்லை. காலையிலயே கடை திறக்க போயிருக்கலாம். கூடத்தில்  அக்காவின் டிவி அண்ணனின் டேப் ரிக்கார்டர் என்று எந்த சத்தமும் இல்லை. வீடு பேரமைதியாக இருக்க பாட்டியின் குரல் மட்டும் அலறலும் அழுகையுமாக கேட்டுக் கொண்டிருந்தது.
நான் கொஞ்ச நேரம் அம்மாவை பார்த்து விட்டு அவள் எதுவும் சொல்லாமல் போக கண்ணை கசக்கிக் கொண்டேன். வியாழக்கிழமை தான் ஆகிறது. ஸ்கூலுக்கு போகணும். இன்னிக்கு ஸ்கூல் இருக்கா இல்லியா. அம்மா இன்னேரத்துக்கு திட்ட ஆரம்பித்திருப்பாளே. ஒரு வேளை லீவ் எதுவும் விட்டுட்டாங்களா. யோசித்துக் கொண்டிருக்கும் போதே அக்கா வந்து உலுக்கினாள். எருமை மாடு மணி எட்டாகுது இப்பத் தான் எந்திரிச்சி நெளிஞ்சிக்கிட்டு இருக்கு. சீக்கிரம் குளிச்சிட்டு வாடா ஸ்கூலுக்கு நேரமாகுது. நான் அவிழ்ந்து கிடந்த டவுசரை மேல ஏற்றிக் கொண்டு “பாட்டி ஏன் அழறா...இட்லி சுடலியா”
அக்கா தள்ளி விட்டாள். தாத்தாவுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில சேத்துருக்காம். நீ திங்கிறதிலயே இரு. இட்லியும் கிடையாது ஒண்ணும் கிடையாது. போற வழியில சாமியண்ணன் கடைல கொட்டிக்க. இல்லாட்டி ஒரு நாள் பட்டினியா கெட. ஒண்ணும் செத்துட மாட்ட.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பல் விளக்காமல் வாய் கசப்பாக இருந்தது. நான் ட்ரவுசரை பிடித்து கொண்டு “தாத்தாவா. அவர் தான் செத்து போயிட்டாரே”
பளீரென்று கன்னத்தில் அறை விழுந்தது. “சனியன் சனியன் இதெல்லாம் எங்கருந்து தான் வந்திச்சுன்னு தெரியலை. காலைல எந்திருச்சதுமே எழவெடுக்குது”. அம்மா எப்பொழுது எழுந்தாள் எப்பொழுது அறைந்தாள் என்று தெரியவில்லை. எனக்கு கன்னம் எரிந்தது. நான் முகத்தைப் பொத்திக் கொண்டு “தாத்தா செத்துப் போயிட்டாருன்னு நீ தான சொன்ன”. அம்மா அடுத்து கை ஒங்குவதற்குள் அக்கா என்னை தள்ளி விட்டு கத்தினாள். “ஆமா எதுக்கெடுத்தாலும் இவனைப் போட்டு அடி. உங்கிட்ட அடி வாங்கி சாகறதுக்கு தான் இவன் பொறந்திருக்கான்”.
ஸ்கூலுக்கு போகும் போது அக்கா தான் சொன்னாள். அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பது பாட்டியின் அண்ணன். எனக்கு தாத்தா முறை. கோலாலம்பூரில் பைக்கில் போகும் போது அடிபட்டு விட்டது. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக மெட்ராசுக்கு தந்தி வந்து மெட்ராஸில் இருந்து காலையில் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கிறார்கள். பாட்டி அழ ஆரம்பித்து விட்டாள்.
=====================
அம்மா கதை சொல்லியிருக்கிறாள். அம்மாவின் அப்பாவுக்கு வலது கை சரியாக வராது. நொண்டி என்று சொல்ல முடியாது என்றாலும் நொண்டி என்று தான் சொல்வார்கள். அதை மறைத்து பாட்டிக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். பாட்டியின் அண்ணன் மனைவி மதனிக்கு இது எல்லாம் தெரியும்.  அவள் என் அம்மாவின் அப்பாவுக்கு உறவு முறை. ”எனக்க தங்கச்சிக்கு நொண்டிப்பயலை கட்டி வச்சிட்டியேடி. தாயோளி மவளே. அமுக்குணியாட்டம் இருந்து குடிய கெடுத்துட்டியேடி”. மதனிக்கு அது பொறுக்காது. “எவம்ட்டல ஏறி வர்ற. உம்ம கண்ண பொடனிலயா  வச்சிருந்துச்சி. அவனுக்கு கைய பாக்க துப்பில்ல. எம்மிட்ட ஏறி வர்ற. கெட்டினவன்னா அப்பிடித்தாம். பிரியனுக்கு கை ஒடஞ்சாலும் காலு ஒடஞ்சாலும் இருந்து பார்க்கணும். நாளைக்கு நீரு கை காலு ஒடஞ்சி நொண்டியா கெடந்தாலும் ஒம்ம தங்கச்சி மாதிரி நான் ஆவலாதி சொல்ல மாட்டேன் பாத்துக்கிடும். யோக்கியமான பொட்டச்சின்னா கெட்டினவன பாப்பா. ஒம்ம தங்கச்சி கதை வேற மாதிரில்லா. அதான் ஊரெல்லாம் சீப்பட்டு கெடக்கு கத”.
விடம் கொண்ட பாம்பை போல பாட்டியின் அண்ணாவுக்கு ஏறி விட்டது. “தேவிடியா முண்ட. என்ன சொல்லிட்டடி. ஒன்ன மாதிரி சீப்பட்ட பரம்பரைன்னு நெனைச்சிட்டியா. நொண்டியாம்ல நொண்டி.திருவாந்தரத்து நாயர் வம்சமிடி. இப்ப சொல்லுதேன் கேட்டுக்க. ஒனக்க அண்ணன் மாதிரி நாறப் பொழப்பு நான் பொழைக்க மாட்டேன். எனக்க கை காலு போச்சின்னா நாண்டுக்கிட்டு சாவேன். ஈனப்பொழப்பு எனக்க ரத்தத்தில ஓடல”. எப்படி என்று தெரியவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் மலேஷியா போனவர் அதற்கப்புறம் ஊருக்கு வரவேயில்லை. பிள்ளைகளின் படிப்பு பணம் வரும். ஊரில் திருவிழா காது குத்து கல்யாணம் என்றால் தென்னநேரி கேசவன் நாயர் என்று யாரேனும் மொய் எழுதிப் போவார்கள் ஆனால் ஒரு நாளும் பாட்டியின் மதனி பேருக்கு பணம் வராது.
==================================
அன்றைக்கு ஸ்கூல் முடிந்து வீடு வந்த போது வீட்டில் கும்பலாக இருக்க வாசலில் செபாஸ்டின் நாடாரின் டாக்ஸி நின்றிருந்தது.பாட்டி இன்னமும் அழுது கொண்டிருந்தாலும் வேறு சேலை கட்டியிருந்தாள். அம்மாவும் மாமாவும் ரெடியாக இருக்க அப்பா அதிசயமாக வீட்டில் இருந்தார். தென்னநேரி பாட்டி கூடத்தின் மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். “ஒத்த வார்த்த சொல்லிட்டன்னு ஒரு மனியன் இப்படி போவானா. ஒரு நாளு ரெண்டு நாளு இல்ல முப்பது வருசம் போயிட்டான். புள்ளைங்களுக்கு எழுதுவான் ஒரு நாளும் ஒங்கம்மா எப்பிடி இருக்கான்னு கேட்டதில்லை. மத்தவளுக மாதிரி எனக்கு அண்ணன் தம்பின்னு ஒருவனும் இல்ல நானும் ஒருத்தன்கிட்டயும் ஒத்த வார்த்த பேசினதுல்ல. ஆனாக்கும் எங்க சாமி விடுமா. வருசம் தவறாம பொங்க வக்கிறமே அவ கண்ணு அவிஞ்சா போச்சு. கேப்பாள்ல. அரசன் அன்னு கொல்வான் தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்லுவானுவ. இந்தா கேட்டுட்டாள்ல. ஏ வயித்தெரிச்சல கேட்டுட்டாள. கால ஒடச்சிப்புட்டா. ஒடம்புல ரெத்தம் தெடமா இருக்க வரைக்கும் ஒடலாம். ஒடஞ்சி போனா பொண்டாட்டிக்கிட்ட வர வச்சிடுவாள.”
நான் மெட்ராஸை பார்த்ததே இல்லை. திருச்செந்தூரை விட பெரிய கடல் என்று ராஜாங்கம் சொன்னான். நான் மாமாவின் கையை பிடித்துக் கொண்டு “மாமா மாமா நானும் வர்றேன். எனக்கு ஸ்கூல் டீச்சர் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.”.
============================
வள்ளியூர் திருநெல்வேலி மதுரை திருச்சி. திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் பஸ் நிற்க மாமா என்னை எழுப்பி டீ வேணுமாடா என்று கேட்க நான் தலையை ஆட்டி இல்ல காப்பி என்று சொன்னது ஞாபகம் இருக்கிறது. நான் கண் விழித்ததும் “இவந்தான் சின்னப்பையன். எட்டு வயசு ஆவுது. சூது வாது ஒண்ணும் தெரியலை.போனா போன எடம் வந்தா வந்தா எடம். ஒரு மாதிரி மந்தமா இருக்கான். திருச்செந்தூருக்கும் பழனிக்கும் மொட்டை போடறதா நேந்துக்கிட்டு இருக்கோம்.”. அம்மா சொல்ல பாட்டி குறுக்கிட்டு “இவனுக்க தெளியறதுன்னா அவனுக்க கொலதெய்வத்த நேந்துக்கிடணும். அதுக்கு  கும்போணம் பக்கமில்லா போவணும்”. அம்மா பதில் சொல்லாமல் பாட்டியை வெறிக்க மெட்ராஸ் மாமா “செரி செரி அப்புறம் பேசிக்கலாம். ஃப்ளைட் வர்ற டைம் ஆச்சு. இப்ப போனா சரியா இருக்கும்”.
===================================
நான் அதற்கு முன் மெட்ராஸ் ஏர்போர்ட் பார்த்ததில்லை. எப்பொழுதாவது வானத்தில் வெள்ளையாக கோடிருக்கும். அதைப் பார்த்து அந்த ஃப்ளைட் தூத்துக்குடிக்கோ மதுரைக்கோ போகிறது என்று பந்தயம் கட்டியதோடு சரி. சாரா எனக்கு முப்பது பைசா தரவேண்டும் என்று ஞாபகம் வந்தது. மெட்ராஸ் ஏர்போர்ட்டில் கடலில் அலையும் காகம் போல ஜனங்கள் இருந்தார்கள். மெட்ராஸ் மாமா என் கையை இறுக்கி பிடித்துக் கொள்ள நாங்கள் வரிசையில் நின்றோம்.
திடீரென்று ஒரு உயர்த்தி பிடிக்கப்பட்ட அட்டையை பார்த்து விட்டு மாமா கையை ஆட்டி கத்தினார். “ராஜேந்திரன். ராஜேந்திரன். ஐயம் ராஜேந்திரன்.”
மாமாவின் கூச்சலில் பயந்து போன நான் அவர் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த பக்கமாக பார்த்தேன். கண்ணாடி பேழையில் உடல் முழுவதும் மூடி ஊதிப் போன முகம் மட்டும் தெரியும் படியாக ஒரு பிணம்.
அப்பொழுது தெரியவில்லை. ஆனால் வெகு நாட்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது. ஊருக்கு போக வேண்டியது தெரிந்ததும் தாத்தா விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார் என்பது.
=====================================================

5 comments:

vasu balaji said...

யப்பா சாமி! கையக் குடும். அருமை.ம்ம்ம்

க.பாலாசி said...

செமயான எழுத்துநடை தலைவரே... ஒரு மாதிரியான குடும்பச்சிக்கல்.. வீராப்பு மிக்க மனிதன்..

எதார்த்த மொழி... அருமையான கதை...

அது சரி(18185106603874041862) said...

|| வானம்பாடிகள் said...
யப்பா சாமி! கையக் குடும். அருமை.ம்ம்ம்||

நன்றி சார்.

கை தான? எலக்‌ஷன் எதுனா வந்தா உங்க வீட்டு சுவத்துல வரைய சொல்லிடறேன். :))

அது சரி(18185106603874041862) said...

||
க.பாலாசி said...
செமயான எழுத்துநடை தலைவரே... ஒரு மாதிரியான குடும்பச்சிக்கல்.. வீராப்பு மிக்க மனிதன்..

எதார்த்த மொழி... அருமையான கதை...||

நன்றி பாலாசி.

தலைவரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Santhini said...

எங்கேயிருந்து வருகிறது, இப்படியொரு மொழி லாவகம்.? அருமை , கிளைமாக்ஸ் சூப்பர்.