Wednesday 1 June 2011

கொல்கத்தா சேரிகளும் ஜெயமோகனும் கொஞ்சம் அறச்சீற்றமும் (அ) அய்யாங்...ட்ட்டொய்ங் 5

இந்த தலைப்பிலேயே ஒரு பிரச்சினை இருக்கிறது. அய்யாங் டொய்ங் என்பதை விட அய்யகோ ட்ட்டொய்ங் என்பது தான் சரியாக இருக்கும். போய்த் தொலைகிறது விடுங்கள். கெடப்பது கெடக்கட்டும் கெழவனை தூக்கி மனையில் வை என்பது போல ஆகிவிடும்.

என்ன கருமத்துக்கு இந்த பழமொழி என்று உடனடியாக சீறாதீர்கள். நிறைய பேர் காத்திருக்கிறார்கள். போய் க்யூவில் நில்லுங்கள். டோக்கன் அப்புறம் தருவார்கள். சேரின்னு சொன்னா, ஆஹா வாழ்க்கைன்னா அங்க தான்யா இருக்கு என்று வெளம்பர ஃபீலிங். அப்படில்லாம் இல்லை என்று சொன்னால் போச்சு. அதெப்படி சொல்லலாம் சேரின்னா முகம் சுளிக்கிறது பார்ப்பானீயம் பாட்டி சுட்ட பணியாரம். கெளம்பி விடுவார்கள். ஓவர் டைமெல்லாம் உண்டாம். 

 எனக்கு வாசிப்பறிவும் இல்லை. புண்ணாக்கும் விற்பதில்லை. கருவாடு வேண்டுமானால் கிடைக்கும். அய்யா சேரியில் வாழ்வதற்கு க்யூவில் நிற்பவர்கள் எத்தனை பேர். அப்பார்ட்மெண்டில் இருப்பவர்களும் கடன் வாங்கியாவது வீடு கட்டுபவர்களும் சேரியில் இடம் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒரு டவுட்டு தான்.அய்யகோ அம்மாவின் அரசு இந்த நிலையை மாற்றுமா.  ஏழையாய் வாழ்வதில் ஒரு சுகம் இருக்கிறது என்று உருகும் இலக்கியவாதிகளும் முற்போக்கு என்னய்யா முற்போக்கு எனக்கு பிற்போக்கு தான் தெரியும் முற்போக்கு பதிவர்களும் அதை சேரியில் இருக்க நேர்பவர்களிடம் போய் அறிக்கை விட்டு பாருங்கள். அப்புறம் தெரியும் சேதி. 

எட்டுக்கு எட்டு அறை அதில் மூணு பேர். அறை என்றால் ஒரு ரூமில் பத்து பேர் இருக்கும் சென்னை மேன்ஷன் என்று நினைத்துக் கொண்டால் நீங்கள் மேல்தட்டு சுகவாசி. அறைக்கு கீழே சாக்கடை. அதன் மேல் ஒரு சிமெண்ட் தட்டு. அதற்கு மேல் ஒரு கிழிந்த கட்டில். அதில் நீங்கள் உட்கார்ந்தால் உங்களுக்கு மேலே ஒருத்தன் படுத்திருப்பான். அவன் பெயர் ரங்கநாதன் இல்லை. இப்படி ஒரு அறை இருந்தாலே அது ஆகப்பெரிய விஷயம். இதைத் தான் நமது இலக்கியவாதிகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு போய் குடித்தனம் நடத்துவார்களா. அய்ய்ய்ய்ய்யாங்ங்ங்ங்....

சேரியில் சுகம் காணும் ஏழைப் பங்காளர்கள் எப்படியோ சுகமாய் இருக்கட்டும். பிரச்சினை அதுவல்ல.  வடகிழக்கு போன ஜெயமோகன் அங்கயே இருந்திட கூடாதா என்று கேட்காதீர்கள். அமெரிக்கா போனாலும் ஆஸ்ட்ரேலியா போனாலும் கம்ப்யூட்டர் கிடைக்காத பூட்டான் போனாலும் அவர் எழுதிக் கொண்டு தான் இருப்பார்.  என்ன சொல்ல வந்தேன்.  வட கிழக்கு போன ஜெயமோகன் கொல்கத்தா ஆமாம் கல்கத்தா என்று இருந்தால் மக்கள் வாழ்வில் வறுமை. கொல்கத்தா என்று மாற்றியதால் எல்லாரும் ப்ரைவேட் ஜெட்டில் போய்க் கொண்டிருக்கிறார்கள், ஒன்று எழுதியிருக்கிறார்.

||முப்பதாண்டுகளாக ஒரு இடதுசாரி மனிதவிரோதக்கும்பலால் மனசாட்சியே இல்லாமல் சீரழிக்கப்பட்ட நரகம் இது. இதை எப்படி மீட்டெடுப்பதென்பது எவருக்கும் தெரியவில்லை. கல்கத்தா அதன் சணல் தொழில், துறைமுகம் இரண்டையும் மட்டுமே நம்பி இருந்த நகரம். இரண்டுமே தொழிற்சங்க குண்டர் அரசியலால் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. கிராமங்களில் நிலஉடைமைச் சமூக அமைப்பு இடதுசாரி பௌடர்பூச்சுடன் அப்படியே பேணப்பட்டமையால் தலித்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி அவர்களுக்கு இருக்கும் ஒரே பெருநகரமான கல்கத்தாவை நிரப்பி அதை மாபெரும் சேரியாக ஆக்கிவிட்டார்கள்.||
படித்த உடனே உங்கள் ரத்தம் கொதிக்க வேண்டும். எதற்கு என்றெல்லாம் யோசித்தால் நீங்கள் ஜாதி வெறியன். வக்கிரம் பிடித்தவன். அல்லது பிடித்தவள். ஆணாதிக்க வாதி பட்டம் இலவசமாய் எனக்கு கிடைக்க வேண்டாம். 

தெளிவாகவே இருக்கிறது. கிராமங்களில் நில உடைமை சமூக அமைப்பு அப்படியே பேணப்பட்டதால் தலித்துகள் இடம் பெயர்ந்தார்கள். இதையெல்லாம் கவனித்தால் அறம் சீற முடியாது. சீறி விட்டு அப்புறமாக யோசிப்பது தான் அறம்.

ரொம்ப நேரம் வேண்டாம். ஒரு தம்மடிக்கும் நேரம் போதும். அய்யோ நான் தம்மடிக்க மாட்டேன் என்று சொல்லும் அம்மா பிள்ளைகள் நகத்தை கடிக்கலாம். பிரச்சினை இல்லை. யோசியுங்கள். நில உடைமை சமூகத்தில் அதிக பாதிப்பு யாருக்கென்று. குறிப்பாக எந்த வர்க்கத்தினர் எந்த சாதியினர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் என்று. ஜாதி வெறியன் பூணுலை நகர்த்தி போடுகிறான் என்று ஒரு பின்னூட்டம் வரப்போகிறது.  ஆனால் உண்மை என்னவெனில் நில உடைமை சமூகம்   ஜமீந்தார் சமூகம் என்று சொன்னால் புரியும் இந்த அமைப்பால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளே. அவர்கள் நிலம் வைத்திருந்தாலும் குற்றம் என்ற நிலை தான் இருந்தது. இன்னும் சில இடங்களில் இருக்கிறது. இந்த கொடூரத்திற்கு ஆட்படாது வேறு வழியின்றி கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று ஜெயமோகன் சொன்னால் தலித்துகள் போய் கொல்கொத்தா சேரியாகி விட்டதா  என்று பொங்குகிறார்கள்.

தலித்துகள் இடம் பெயர்ந்தால் சேரியாகி விடுமா என்றால் தலித்துகள் இடம் பெயர்ந்ததால் அல்ல, பெரும் அளவிலான மக்கள் இடம் பெயரந்தால் எந்த இடமும் அப்படித் தான் ஆகும். திருவிழா முடிந்து ஊரெல்லாம் குப்பை.  தொழில் வசதியும் வளமையும் இல்லாத நகரம் மக்கள் இடப்பெயர்ச்சியால் சேரியாக தான் மாறும். தினமும் வீட்டை துடைத்து வைக்க மாதம் ரெண்டு லட்சம் சம்பளம் கிடைப்பது இல்லை. 

அம்மா ஆடு இலை ஈ உடுக்கை ஊஞ்சல். ஏ ஃபார் ஆப்பிள் பீ ஃபார் பிஸ்கட். ஜெயமோகன் சொல்ல வருவது மேற்குவங்க இடதுசாரிகள் போலி சமத்துவம் பேசிக் கொண்டே நிலப்பிரப்புத்துவ சமூகத்தையே நிலைநிறுத்தினார்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்ட தலித்துகள் வங்காளத்தின் ஒரே பெரு நகரமான கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்கள். ஏற்கனவே தொழில் வளம் அழிக்கப்பட்டிருந்த கல்கத்தா இடப்பெயர்ச்சிக்கு ஈடு கொடுக்கவில்லை. இடம் பெயர்ந்தவர்களின் வறுமை காரணமாக சேரி போன்ற நிலை ஏற்பட்டது. ஒன்னாங்கிளாஸ் பாடம். இதற்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டி இருக்கிறது. 

கம்யூனிஸ்டுகள் மனிதகுல விரோதிகளா முப்பது ஆண்டுகளாக ஒரு மாநிலத்தை ஆண்டவர்கள் மனித குல விரோதிகளா. என்று கேட்கிறார்கள். நான் மூணாங்கிளாஸ் ஃபெயில். அய்யா மாநிலம் அல்ல, சோவியத் யூனியன் என்ற மாபெரும் நாட்டையே ஆண்டார்கள். எத்தனை வருஷம். அவர்கள் மனித குல தொண்டர்களா. ஸ்டாலினால் புதைக்கப்பட்டவர்களின் கால் நகம் கூட உங்களை மன்னிக்காது. மாவோவால் கொல்லப்பட்டவர்களின் புதை குழி மீது நின்று உங்கள் அறிவுஜீவி கேள்விகளை எழுப்புங்கள். ரொம்ப நோண்டாத உள்ள இருக்கவன் வெளிய வந்து அப்பிட போறான். நான் சொல்லவில்லை. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது. 

விக்ரமுக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருக்கிறது. எனக்கு முற்போக்கு பட்டம் கூட கிடைக்காமல் இருப்பது என்னால் பொறுக்க முடியவில்லை. எத்தனை நாள் பிற்போக்கு பதிவனாக இருப்பது. எதையாவது பார்த்தோ பார்க்காமலோ அறச்சீற்றம் அடந்து நானும் முற்போக்காக போகிறேன். சமத்துவம், சமூக நீதி, கேள்வி கேட்பவன் ஆதிக்க வாதி, குற்றம் சாட்டுபவன் சாதி வெறியன். ஒரு லட்சம் கோடி ஊழல் செய்த மந்திரி மீது வழக்கு போட்டால் அது பார்ப்பன சதி. சரியாக சொல்கிறேனா? இனி நானும் ஒரு முற்போக்கு பதிவன். 
===============================

4 comments:

கலகலப்ரியா said...

||அவர்கள் நிலம் வைத்திருந்தாலும் குற்றம் என்ற நிலை தான் இருந்தது. இன்னும் சில இடங்களில் இருக்கிறது. இந்த கொடூரத்திற்கு ஆட்படாது வேறு வழியின்றி கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று ஜெயமோகன் சொன்னால் தலித்துகள் போய் கொல்கொத்தா சேரியாகி விட்டதா என்று பொங்குகிறார்கள்.||

அப்டியா...

அப்போ நான் ஆரம்பத்தில இருந்து என்ன மேட்டர்ன்னு படிச்சுட்டுதான் ஏதாவது சொல்ல முடியும் போலருக்கே...

கலகலப்ரியா said...

||படித்த உடனே உங்கள் ரத்தம் கொதிக்க வேண்டும்.||

இதில எனக்கு ஒரு சின்னப் பிரச்சனை இருக்குதுபா...

கொதிக்கறதுக்கு ரத்தம் வேணாமா... அவ்வ்வ்வ்... என்ன ஒரு சென்மம் நான்...

vasu balaji said...

ஒன்னாங் க்ளாஸ், அக்மார்க் அய்யாங் டொய்ங். சந்தேகமே இல்லாமல் நீர் முற்போக்கு பதிவரென்ன எழுத்தாளர்தான்:)). எனக்கென்னமோ ஜெமோ படிச்சா வடிவேலு மாதிரி ‘என்னா அடி’ன்னு முனகுவார் போல இருக்கு:)).

vasu balaji said...

/அறுபதுகளில் சென்னையில் காதுக்குறும்பி எடுக்கவும் காலில் முள் எடுக்கவும் ஆட்கள் இருந்தார்கள், அவர்கள் இல்லாமலாகி முப்பதாண்டுகளாகிவிட்டன--ஜெ.மோ/

இப்பவும் வால்டாக்ஸ் ரோட் சப்வே, அல்லிகுளத்தில இந்த ஆளுங்க இருக்காங்களே:))