Sunday 13 March 2011

எரி பலி

கடவுள் ஆபிரகாமை நோக்கி “நீ உன் மகனை, நீ அன்பு கூரும் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு மோரியா நிலப்பகுதிக்கு செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார்.
பழைய ஏற்பாடு, அதிகாரம் 22.
==============================================
பின் வரிசையில் யாரோ ஷூக்கால்களை தரையில் நகர்த்தும் ஓசை கேட்டது. கேஸியாக இருக்கும். அவளுக்கு எங்கே போனாலும் இருப்புக் கொள்ளாது. பதினெட்டு வயதில் நானும் அவளைப் போலத்தான் இருந்தேன். எனக்கு சிரிப்பு வந்தது.  டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைப்பது போல மறைத்துக் கொண்டேன். 


”ஆக, மிஸ் ரிச்சர்ட்சன் தன் பூனைகளை வெகுவாக நேசித்தார். இது உண்மை தானே” என் லாயர் கேட்க வெட்ரினரி டாக்டர் அப்ஸல்யூட்லி என்றார்.  என் பூனைகள் ஏமிக்கும் டாராவுக்கும் அவர் தான் டாக்டர்.  டாராவுக்கு காலில் அடிபட்டிருந்தது. அந்த கட்டை அவிழ்க்க இந்த வாரம் செல்ல வேண்டியது. அதற்குள் ஏமியும் டாராவும் செத்துப் போய்விட்டன. அனிச்சையாக நான் கைப்பையை தடவிக் கொண்டேன். ஏமி புஸ் புஸ்சென்று இருக்கும். நான் தொட்டால் அதன் காதுகள் விரைத்து வாலைத் தூக்கிக் கொண்டு என் கண்களையே ஆவலுடன் பார்க்கும். 


“அப்படியானால் மிஸ் கரோலின் ரிச்சர்ட்சன் தான் வெகுவாக நேசித்த பூனைகளை தானே ஏன் கொல்ல வேண்டும்? உங்களால் சொல்ல முடியுமா?” லாயர் கேட்க டாக்டர் தலையசைத்து என்னால் அதை நம்பவே முடியவில்லை. எனக்குத் தெரியாது. அவர் தன் பூனைகளை வெகுவாக நேசித்தார். அதை உறுதியாக சொல்ல முடியும். 


உட்கார்ந்திருந்த மூன்று நீதிபதிகளும் குறிப்பெடுத்துக் கொண்டதை கவனித்தேன். பெண் நீதிபதியின் தலை நம்ப முடியாதவர் போல குறுக்காக அசைந்தது. எனக்கு நிஷா ஞாபகம் வந்தது.  நிஷா என்று கூப்பிட்டால் அவன் இப்படித் தான் மறுப்பாக தலை அசைப்பான். நிஷான்னா கேர்ள்ஸ் நேம். கால் மீ நிஷாந்த். சொல்லும் போதெல்லாம் அவன் முகத்தில் வெட்கம் படரும். இருபது வயது ஆண் வெட்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை. யோசித்தால் பதினாறு வயதிலிருந்து இந்த முப்பத்தாறு வயது வரை எந்த ஆணும் வெட்கப்பட்டு நான் பார்த்ததே இல்லை. சட்டை இல்லாத உடம்புடன் ரோட்டில் அலைவார்கள். நிஷாவை அரைக் கால்சட்டையில் கூட நான் பார்த்தது இல்லை. என் கால் குச்சியா இருக்கும் அதனால் போடுவதில்லை என்று அவன் சொன்னாலும் உண்மை எனக்குத் தெரியும். அவனுக்கு அது பழக்கமில்லை. அவனால் முடியாது.  சொன்னால் இல்லை இல்லை என்று சிரிப்பான். சிரிக்கும் போது உதடுகள் கொஞ்சம் கோணலாகும். எனக்கு அவனை இறுக்க கட்டிக் கொண்டு அவன் காதை திருக வேண்டும் போலிருக்கும். இதை ஹன்னாவிடம் சொன்ன போது அவள் என் கையை கிள்ளினாள். டூ யூ லவ் ஹிம். நான் யோசிக்காமல் உடனடியாக யெஸ் என்றேன். அவளிடம் சொல்ல முடிகிறது. அவனிடம் முடியவில்லை. அவனை பார்க்கும் போதெல்லாம் என் வயது எனக்கு ஞாபகம் வருகிறது. அவன் வேறு. நான் வேறு. ஆனாலும் அவனை இறுக்கி கட்டிக் கொள்ள தோன்றுகிறது. முத்தமிட்டால் அவன் எப்படி வெட்கப்படுவான்.


அந்த வெள்ளி இரவு நைட் க்ளப்பின் இருட்டில் நான் முத்தமிட்ட போது அவன் உதடுகள் குழந்தையின் உள்ளங்கைப் போல இருந்தன. அவன் கண்கள் அப்படியாகும் என்று நான் நினைக்கவில்லை. நோ நோ சொல்லிய உதடுகள் வெகு வேகமாக துடைக்கப்பட்டதையும் நான் பார்க்க விரும்பவில்லை.  சனிக்கிழமை காலையில் காணாமல் போனவன் இரண்டு நாள் கழித்து திங்கள் இரவு வந்தான். அவன் பின்னால் அந்தப் பெண். கரோல் இது ஜெஸிக்கா. ஸாரி, இப்போ தான் இண்ட்ரோ பண்ண முடிஞ்சது. என்னோட கேர்ள் ஃப்ரண்ட். அவள் உதடுகள் திறந்து ஹாய் என்றாள். ஆஸ்ட்ரேலியன். என்னைப் பார்த்த ஜெஸிக்காவின் கண்களை என்னால் மறக்கவே முடியாது. அவமானத்தில் என் உடல் பாதியாக குறுகியது.  நான் என் அறைக்குள் வந்து கதவை இறுக்க தாழிட்டுக் கொண்டேன்.  என் உலர்ந்து போன உதடுகளை பிய்த்தெறிய என்னால் முடியாது போனது. 


நான் நிமிர்ந்து பார்த்த போது க்ரவுன் ப்ராசிக்யூஷன் லாயர் எழுந்து நின்று ஏதோ கேட்டுக் கொண்டிருக்க வெட்னரி டாக்டர் போய் வேறு யாரையோ விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.  ”யெஸ். ரொம்ப ஹெவி டோஸ் பாய்ஸன். இறந்து போய் எவ்வளவு நேரம் ஆச்சுன்னு சரியா சொல்ல முடியாது. மே பி எய்ட் ஹவர்ஸ். ரெண்டு பாடியும் டீ கம்போஸ் ஆகலை. ஆனா விரைச்சு போய் இருந்தது.” பூனையை சொல்றீங்களா போலீஸ் லாயர் இடைமறிக்க அந்த ஆள் “இல்லை. நான் பூனையை பார்க்கலை. நாங்க முதல்ல போனப்ப ஒரு ஆண் உடல் ஒரு பெண் உடல் இதைத் தான் பார்த்தோம். ரெண்டு பாடியும் ஒரே பெட்ல. கார்டன்ல ரெண்டு பூனையும் செத்துக் கிடந்தது அப்புறம் தான் எனக்கு தெரியும்.”


க்ரவுன் ப்ராசிக்யூஷன் லாயர் அவரை அனுப்பி விட்டு நீதிபதிகளிடம் அருகில் போய் ஏதோ சொன்னார். அவர்கள் தலையாட்டி விட்டு என் பெயரை அழைத்தார்கள். “டாக்டர் கரோலின் ரிச்சர்ட்சன். உங்கள் வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியிருந்த நிஷாந்த் ராமகிருஷ்ணனையும் அவரது கேர்ள் ஃப்ரண்ட் ஜெஸிக்கா ராபர்ட்ஸையும் நீங்கள் அக்டோபர் இருபது இரண்டாயிரத்து எட்டு திங்கள் அன்று விஷமிட்டு கொன்றதை ஒப்புக் கொள்கிறீர்களா?”


நான் அவன் பெயர் நிஷா என்று நினைத்துக் கொண்டே எழுந்து நின்று ஆம் என்றேன்.


==============================================================

5 comments:

கலகலப்ரியா said...

first class write up..!!!

vasu balaji said...

ஆத்தாடி. என்னமா எழுதுறீரு சாமி. செம.

Mahi_Granny said...

அருமையா இருக்கு. எழுத்துக்களை சிரமப்பட்டு வாசிக்க வேண்டி உள்ளது . எனக்கு மட்டும் தானா எனத் தெரியவில்லை

Santhini said...

WOW !! Short and Sweet(?) man.

Mahesh said...

Excellent.... different style !!!